Monday, April 18, 2011

விடைத்தாள்

திருத்தப்பட்ட விடைத்தாள்கள்
கொடுக்கப்படுகின்றன.

”கலைவாணி”
என்றழைக்கிறார்
ஆசிரியர்.

கோடிட்ட இடங்களை
பூக்களால் நிரப்பியிருக்கிறாள்.

இடப்புறம் இருக்கும் பட்டியலில்
எல்லாவற்றையும்
வலப்புறம் இருக்கும்
எல்லாவற்றினுடனும்
பொருளறிந்து பொருத்தியிருக்கிறாள்.

சரியா தவறாவில்
எல்லாமே சரியாய்
இருக்கின்றன.

உலகம் பற்றிய
வினா ஒன்றுக்கு
மூன்று வரிக்கு மிகாமல்
தாளில் பாதியும்
மேஜையில் பாதியும்
யானை ஒன்றை வரைந்திருக்கிறாள்.

மேஜையில் இருக்கும் யானை
தன் மதிப்பெண்கள் அனைத்தையும்
தின்று விட்டது தெரிந்ததும்
சந்தோஷமடைகிறாள்.

மேஜைக்காடுகளில்
விலங்குகள் தின்னும் விலங்குகள் கூட
மதிப்பெண்களை மட்டுமே
தின்று கொண்டிருக்கின்றன.

No comments: