Saturday, January 30, 2010

முடியவில்லை

முடியவில்லையென்று
சொன்ன பொழுதெல்லாம்
உண்மையில் ஒன்றுமே
முடிந்திருக்கவில்லை

Monday, January 25, 2010

விதவைகள்

நெருஞ்சிப்பூக்கள்
பறித்து ஒரு விதவை
சுமங்கலியாகிறாள்.

காட்டில் இப்படியாக
எண்ணற்ற விதவை
நெருஞ்சிச்செடிகள்
முற்களுடன்.

Thursday, January 21, 2010

பல்சர் பின்சீட்

எட்டாம் வகுப்பு காயத்ரியும்
கல்லூரி கவிதாவும்
அடிக்கடி காலியாயிருக்கும்
பல்சர் பின்சீட்டை
நிரப்பிவிட்டு போகிறார்கள்!

Wednesday, January 20, 2010

கிழித்தெரிந்த கவிதைகள்

ஒரு கவிதை எழுத நினைத்து
வார்த்தைச் சேகரிப்பில்
திளைத்திருந்தேன்.

துளிகள் பெருமழையாகவும்
பெருமழை கடலாகவும்
மாறிக்கொண்டேயிருந்தன.

சரிப்பட்டு வராதென
தாள்களில்
சேமிக்கலானேன்.

சாக்கடை நீர்
நனைத்த தாள்களைக்
கிழித்தெரிந்தேன்.

கிழித்தெரிந்த தாள்களில்
மட்டும் எண்ணற்ற
கவிதைகள் கொட்டிக்
கிடந்தன.

எழுத்து

முதன் முதலில் எழுதியது
பல்ப்பத்தால்.
கருப்பு பலகையில்
வெள்ளைச் சுண்ணாம்பு
தெரியும் என்பது மட்டுமே
அறிந்து கொண்டது.
என்ன எழுதினேன்
எனத் தெரியாது.

பிறகு பென்சிலால்.
எழுத்து திருத்தமடைந்ததாக
நம்பியதுண்டு.
எழுத்துப்பிழைகளுக்கு
அடி வாங்கிய ஞாபகமும்
இருக்கிறது.

பேனாவில் விரல் கோர்த்து
எழுதத்துவங்கிய நாட்களில்
முதல் ரேங்க் வாங்கியிருக்கிறேன்.
நண்பர்களுடன் பகிர்ந்து
கொண்டதும்
நினைவிலிருக்கிறது.

இப்பொழுது தட்டச்சும்
காலம்.
எழுதினேன் என
இனி கூற
முடியாதோ?

Monday, January 18, 2010

கடிகாரங்கள்

சுவரில் மாட்டப்பட்டும்
கைகளில் சுற்றப்பட்டும்
எண்ணற்ற கடிகாரங்கள்
காலம் காட்டுகின்றன.
குழந்தைகளுக்கான கடிகாரங்கள்
மட்டும் ஓடுவதேயில்லை.

இருளின் ஜ்வாலைகள்

இருட்டின் அடியாளாய்
நுழைகிறது புயல் காற்று
மின்வெட்டின் நீளம்
படர்ந்த இரவில்.

புயல்காற்றின் தீக்குச்சி ஒன்று
வெற்று அறையில்
ஒளி நிறைக்கும்
மெழுகுவர்த்தியைத் தீண்ட,
குச்சியின் வீச்சு ஓங்கிய
நொடிப்பொழுதுகளில்
மெல்ல அணைந்து
இருளுக்குள் நுழைகிறது
மெழுகுவர்த்தி.

பின் அணைத்த தீக்குச்சியும்
எரியும் மெழுகுவர்த்தியும்
இருளின் ஜ்வாலைகளில்
தெரிகின்றன.

Monday, January 11, 2010

கொலை

நான் செய்யும் காலக் கொலைகளை
என் எதிர்காலம் விசாரித்துக்கொண்டிருக்கிறது

ஒரு பழம்

அம்மா அப்பாவைச்
சுற்றிய விநாயகனும்
மயிலில் உலகு
சுற்றிய முருகனும்
ஏழை அனாதைக்குச்
சொல்லவில்லை
என்ன செய்தால்
ஒரு பழம்
கிடைக்குமென்று.
நாரதர்கள் மட்டும் பழங்களுடன்
அலைந்துகொண்டிருக்கிறார்கள்!

நிலவு

நேற்றிரவு நிதர்சனம்
தொலைக்க வேண்டி
நிலவைப் பார்க்கலானேன்.

உற்று நோக்கையில் தெரிந்தது
நிதர்சனம் உறங்கிக்கொண்டிருந்தது.

நின்று போன கடிகாரம்

நின்று போன கடிகாரமொன்றுக்கு
உயிரூட்டப்படுகிறது
நொடிப்பொழுதுகளின்
செலவறியாமல்!

Friday, January 08, 2010

பொங்கல்

ஒரு கெடா
இரண்டு கோழிகள்
கொல்லப்பட
ரத்தச்சிவப்பு பானையில்
அவைகளுக்கிடப்பட்ட
வாய்க்கரிசியில்
பொங்குகிறது
எங்கள் குடும்பத்திற்கான
பொங்கல்!

Wednesday, January 06, 2010

வேற்று மொழிக் கவிதையொன்று...

அந்தப் புத்தகத்திலிருக்கும் கவிதையை
நீ படித்திருக்க வாய்ப்பில்லை

நீ
மரபுக்கவிதைகளின் வித்தகன்
அமாவாசை இரவின்
நிலவு ரசிகன்
மௌன மொழியில் தேர்ந்த
மேடைப்பேச்சுக்காரன்
சொல்லியல் பொருளியலில்
முதுகலை வரை பயின்றவன்
இருந்தும் அந்தக் கவிதையை
நீ படித்திருக்க வாய்ப்பில்லை

வேற்று மொழிக் கவிதையைப்
புரிந்துகொள்வதற்கான
சாத்தியக்கூறுகளை
உன் மொழிக்கான
இலக்கணம் இல்லாததாக்கியிருக்கிறது
அவ்வளவே!

Saturday, January 02, 2010

கவிதை எழுதுவது எளிதல்ல

ஒரு நாவல் எழுதுவது போல
கவிதை எழுதுவது எளிதல்ல.

கவிதை எழுதவதற்கான
குறிப்புகளைச் சொல்கிறேன் கேள்.

குறிப்பு #1: உன்னைத் தெரிந்தவர்களுக்கு நீ
தெரியாமல் இருக்க வேண்டும்.

குறிப்பு #2: தலையில் பாகையுடனும்
முறுக்கு மீசையுடன்
எதிர்படுபவனைக் கவனமாக தவிர்க்க வேண்டும்.

குறிப்பு #3: இரு கைகளிலும் எழுதத் தெரிந்திருந்தால்
நிறைய எழுதலாம்.

நானிப்படி சொல்லிக்கொண்டிருக்கும் சமயத்தில்
அகந்தை அல்லது அனுபவம்
தெரிகிறதாவெனப்பார்.

இப்பொழுது நீ நினைத்தது
எனக்கு எப்படி தெரிந்தது என்னும்
கேள்வி எழவேண்டும்.

இனிமேல் தெரியாமலிருக்க
உத்திகளை வளர்த்துக் கொள்.

ஒரே ஒரு எச்சரிக்கை!
சிவப்பு விளக்கு
கவிதைகள் மட்டும்
விரும்பத்தகாததாகவே இருக்கின்றன.

புதுப்போர்வை

சென்ற புத்தாண்டுக்கு
வாங்கிய போர்வையில்
நிறைய மாற்றமிருந்தது.
முதல் மடிப்பிற்கான
தடம் தெரியாமல்
உபயோகப்படுத்தலின்
தடயமாக மிகக்
கசங்கியிருந்தது.
பத்துமுறையாவது
அடித்து துவைக்கப்பட்டிருந்ததில்
மணமிழந்து, சாயமிழந்து
கொஞ்சம் கந்தலாகியிருந்தது.
”புதுசு” என்று
இனி அதனை
கூறமுடியாதெனினும்
முதல் முறை
கை கால் போர்த்துகையில்
இருந்த அந்நியம் இல்லாமல்
நிறையவே பழகியிருந்தது.

Friday, January 01, 2010

நேர்கோடு

திட்டமிடாமல் நிகழ்ந்ததொரு
தேடலில்
வேண்டியதை அடைந்துவிட்டப்பின்
எப்படி என்பதாய்
நீள்கிறது அந்த நேர்கோடு.
நீளமிகுதியில்
கூட்டல், கழித்தல்
அல்லது பெருக்கல்
போன்றவற்றுள்
கணத்திற்கேற்ற ஒன்றால்
என்றேனும் ஒருநாள்
வளையமாக்கப்பட்டும்
பின் ஒரு குழியில் இட்டும்
புதைக்கப்பட்டிருக்கும்.