Thursday, April 27, 2006

இரு செய்திகள்

முதல் செய்தி

மனிதனின் வளர்ச்சியில், அவன் புலன்களால் அறியும் விஷயங்களில் அவனுக்கு ஏற்படும் சந்தேகங்கள் பெரும் தொண்டாற்றுகின்றன. எவை எல்லாம் உண்மை என்று உன் முன்னால் வைக்கப்படுகின்றனவோ அவை எல்லாவற்றையும் ஆய்ந்து உறுதிப்படுத்திக்கொள் என்று விஞ்ஞானி ஒருவர் கூறியிருக்கிறார். (Question everything put forward as a fact). எப்பொழுதெல்லாம் மனிதன் இந்த முயற்சியில் தன்னை ஆட்படுத்திக் கொள்கிறானோ அப்பொழுதெல்லாம் அவன் தன் வாழ்க்கைப் பாதையின் பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தானே பயணப்படுத்திக் கொள்கிறான்.

சமீபத்தில் கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.

உருமாற்றம்
கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ.
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.
அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின்
கதியில் தெரிந்து கொண்டது.
வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும் போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.
அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.

"தனிமனித உறவு நிலைகளில் உண்டாகும் முரண்கள் மற்றும் பிறழ்வுகளைப் பேசும் கவிதைகளில் உணர்ச்சியின் தழுதழுப்பு வெளிப்படையாகவும் எளிதில் தொற்றக்கூடியதாகவும் இருக்கும். அறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செல்ல இடமின்றி முட்டி நிற்கும் கவிதைகள் உருவாக்கும் அனுபவமும் உணர்ச்சிபூர்வமானதுதான் - ஆனால் ஏற்கனவே அறியப்பட்ட அர்த்தத்தில் அல்ல. தர்க்கத்தின் பாதையில் வளர்ந்து சென்று தர்க்கமுறிவின் காரணமாக உருவாகும் கையறுநிலையைச் சந்திப்பதே என் கவிதையின் முயற்சி." என கவிஞர் யுவனும் தன் கவிதைக்குரிய காரணத்தை அழகாக சொல்லியிருந்தார்.

இப்படியாக மனிதன் தினசரி தான் பார்க்கும் விஷயங்களிலேயே பல வித்தியாசங்களைக் காண்கிறான். அந்த வித்தியாசங்களும், அவற்றில் இருக்கும் உண்மைகளும், அந்த உண்மைகளை காண அவன் மேற்கொள்ளும் வழிமுறைகளும் அவனை சிந்தனையாளனாக்குகின்றன. இந்த உயர்வு நிலை முழுக்க முழுக்க அவன் அறிவால் பெறப்படும் ஒன்று.

இரண்டாம் செய்தி

சமீபத்தில் சுகி.சிவம் அவர்கள் போஸ்டன் பாரதி கலாமன்றம் சார்பில் ஆற்றிய உரை ஒன்றைக் கேட்க நேர்ந்தது. திருக்குறளைப் பற்றி மிக அழகாக ஒரு கருத்தை வெளியிட்டார்.

"நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது திருக்குறள் படித்தேன். B. A (Economics) படிக்கும் பொழுது முதலாமாண்டில் எங்களுக்கு தமிழ் பாடம் உண்டு. அப்பொழுது திருக்குறள் படித்தேன். நான் சட்டம் படித்து முடித்து விருப்பத்திற்காக திருக்குறள் படித்தேன். இப்பொழுதும் என் பையில் திருக்குறள் கிடைக்கும். விமான பயணத்தில் திருக்குறள் படிப்பது என் வழக்கம். திருக்குறள் அதே தான் ஆனால் நான் வளர்ந்து கொண்டே இருக்கிறேன். திருக்குறள் நான் அப்பொழுது படித்த பொழுது எனக்கு கிடைத்த அர்த்தம் வேறு. இப்பொழுது நான் படிக்கும் பொழுது கிடைக்கின்ற அர்த்தம் வேறு. நான் வளர வளர அர்த்தங்களும் வளர்ந்து கொண்டே வரும் ஒரு அதிசய நூல் திருக்குறள்." என்று கூறினார்.

தன் உரையில் ஒரு குறளின் பொருளையும் விளக்கினார். திருக்குறளின் 595வது குறள் மற்றும் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஐந்தாவது குறள்.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு."

"தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம். வாழ்க்கையில் உன்னுடைய உயரம் உன்னுடைய எண்ணங்களின் உயரம்." என்று அந்த குறளின் பொருளைக் கூறிவிட்டு அதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறினார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்ற பொழுது அவரிடத்தில் அமெரிக்க பெண்மணி ஒருவர் "சுவாமி நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?" என்று கேட்டார். சிறிது குழம்பிப்போன விவேகானந்தர், "எது உங்களை இந்த கேள்வி கேட்க தூண்டியது?" என வினவினார். அதற்கு அந்த பெண்மணி, "உங்களது அறிவாற்றல் தான் என்னை அந்த கேள்வி கேட்க தூண்டியது. எனக்கு உங்களைப் போல ஒரு பிள்ளை வேண்டும் அதனால் தான் அப்படி கேட்டேன்" என்று கூறினார். விவேகானந்தர் அதற்கு சற்றும் யோசிக்காமல், "ஒரு அறிவாளி பிள்ளைக்காகவா இப்படி வினவினாய், அதற்காக நீ ஒரு பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டாம் என்னை இப்பொழுதே உன் மகனாக தருகிறேன், ஏற்றுக்கொள் !" என்று கூறுகிறார்.

ஒரு செய்தியை நல்ல நோக்கத்தோடும், மற்றவரை புண்படுத்தாமல் அதே சமயம் அவர்களது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உயர்ந்த பண்போடும் அணுகுவதால் மனிதன் உயர்வு நிலையை அடைகிறான். இந்த உயர்வு நிலை முழுக்க முழுக்க எண்ணங்களால் பெறப்படும் ஒன்று.

--------------

இவ்விரு செய்திகளிலும் மனிதனின் நோக்கம் உயர்வானதாக இருந்தது. அணுகுமுறை மட்டுமே மாறுபட்டது. ஒன்று அறிவாலும் மற்றொன்று மனதாலும் அணுகப்பட்டது. இரண்டுமே உயர்ந்த நிலைக்கே மனிதனை இட்டுச் செல்கின்றன.

8 comments:

பட்டணத்து ராசா said...

நல்ல செய்திகள், ஆனா அறிவும், மனமும் வேறு வேறா?

G.Ragavan said...

வாங்க கணேஷ். எப்படி இருக்கீங்க? இன்னைக்கு என்னோட வலைப்பூவுல கோவில்பட்டிக் கதிரேசன் கோயில் பத்திக் கொஞ்சம் எழுதீருக்கேன். அதச் சொல்லத்தான் இத எழுதுனேன். இதைப் பதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

Vaa.Manikandan said...

athu ellam irukkattum...where are u?

செல்வேந்திரன் said...

நல்ல கருத்துடைய செய்திகள் ..வாழ்த்துக்கள்

Rajaram said...

Good one.. Keep it up.. Try to have a unique style by not mixing other's style

Rajaram said...

Good one.. Keep it up.. Try to have a unique style by not mixing other's style

Sud Gopal said...

உங்களைப் பற்றின எட்டு விஷயங்களை எழுதும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

Renie Ravin said...

Hi, please add your blog to our new directory of Indian Blogs and pick up an

Indiblogger badge, thanks!

http://www.indiblogger.in