Tuesday, September 27, 2005

குறுகிய வட்டம்

எனக்கு தெரிந்து அதிகாரப்பூர்வமாக தமிழ்மணத்தில் நடந்த மீமீ ஒன்று தான். அது புத்தகங்கள் பற்றிய மீமீ. ஆனால் சமுதாய பிரச்சனைகள் தலை தூக்கும் பொழுது ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டதில் அந்த பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து ஆய்வறிக்கை சமர்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதில் சிலருக்கிடையில் வாக்குவாதம் முற்றி மனக்கசப்பில் போய் முடிகிறது. பதிவுகள், அவற்றின் எதிர் பதிவுகள் என இது ஒரு மெகா சீரியல் போல நீண்டு கொண்டே போகிறது.

இதில் சாதி, மதம் தொடங்கி சானியா குஷ்பு வரை அடக்கம். ஏனோ எனக்கு இந்த மாதிரியான பதிவுகள் பிடிக்காமலே போய் விடுகின்றன. கற்பென்பது என்ன என்பது பற்றி கடந்த ஒரு வாரத்தில் எழுதிய பதிவுகள் மட்டுமே ஒரு ஐம்பதை தொட்டிருக்கும் என நினைக்கிறேன். அதே போல் கடந்த வாரம் சானியா வாரம். சென்ற மாதம் தங்கர்பச்சன் மாதம் என சன் தொலைக்காட்சி போல இந்த சிறப்புகளும் நீண்டு கொண்டே போகின்றன. சமுதாய பிரச்சனைகள் அலசப் பட வேண்டியனவே. ஆனால் அதற்காக அவரவர்க்கு இருக்கும் தனித்தன்மையை தவிர்த்து விட்டு பதிவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சமுதாய பிரச்சனைகள் எப்பொழுதெல்லாம் தலை தூக்குகின்றனவோ அப்பொழுதெல்லாம் எல்லோருமே கிட்ட தட்ட ஒரே மாதிரியான விஷயத்தை திரும்ப திரும்ப எழுதுவது பொல தோன்றுகிறது. இப்படியே வாரம் ஒரு பிரச்சனை தொடருமாயின் தமிழ்மணத்தில் ஆக்கப்பூர்வமான படைப்புகள் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒவ்வொரு வாசகர் வட்டம் இருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு வலைஞர் ஒரு பிரச்சனையைப்பற்றி ஒரு பதிவு போட்டாரென்றால் அவருடைய வாசகர் வட்டம் அந்த பதிவில் பின்னூட்டுவதன் மூலம் அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தலாம். அதை விட்டு ஒவ்வொருவரும் ஒரு தனி பதிவு போட முயல்வது வாசகர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.

கருத்துக்கள் விரிவானதாக இருப்பினும் சிதறி விடுவதால் அவை எல்லோருக்கும் சென்று சேரவில்லையோ என தோன்றுகிறது. ஒவ்வொருவரின் நடையும் கருத்தும் மாறுபடுமாயினும் பின்னூட்டம் மூலமே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது வலைப்பூவின் நோக்கமாம் தகவல் சேமிப்புக்கும் உதவும்.

கருத்துக்களைச் சொல்லும் எழுத்துக்கள் மட்டும் குறுகிய வட்டத்தில் இருக்கலாமோ?

(இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. தவறிருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்.)

Sunday, September 18, 2005

வடக்கு vs தெற்கு

ஏற்கனவே இந்த வடஇந்தியன் vs தென்னிந்தியன் பற்றி எனது திகார் சிறை பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். நேற்று "த வீக்" செப் 4 இதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதன் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா? தென்னிந்தியாவின் தாக்கம். ஒரு ஐந்தாறு பக்கங்களுக்கு வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒரு பத்திரிக்கை என்பது நல்லது கெட்டதை எடுத்துக்கூற வேண்டுமேயொழிய அதுவே ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது. தென்னிந்தியன் வட இந்தியன் என்னும் பாகுபாடு பொதுவாக மக்கள் மத்தியில் காணப்பட்டாலும் இது ஒரு தவறான கருத்து. இதனைச் சாடாமல் இவற்றில் எது இப்பொழுது பெரிதும் விரும்பப்படுகிறது எனபது பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை தேவையேயில்லை.

அந்த கட்டுரை பல அபத்தமான விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது. தென்னிந்தியா பெரிதும் மக்களால் விரும்பப்படுகிறது என்பது தான் அந்த கட்டுரையின் சாராம்சம். இதற்கு சாம்பாரில்லிருந்து சானியாவரை ஆதாரம் சேகரித்திருக்கின்றனர். Latest south indian sensation என சானியாவையும், உலக புகழ் பெற்ற பெரும்புள்ளி என ஏ.ஆர்.ரகுமானையும் விளம்பரப்படுத்தியிருக்கின்றனர். இதற்கு ரகுமான் வேறு தனியாக பேட்டியளித்துள்ளார்.

தென்னிந்தியாவிலிருந்து வரும் அரசியல்வாதிகளின் ஊழல் குறைவாக இருக்கிறதாம். வட இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் அதிகமாக இருக்கிறதாம். தென்னிந்தியர்கள் வட இந்தியாவிற்கு வந்தால் மொழிப்பிரச்சனை அதிகமாக இருப்பது கிடையாதாம். வட இந்தியர்கள் தென்னிந்தியாவில் பெரிதும் மொழிப்பிரச்சனைகளைச் சந்திக்கிறார்களாம். இப்படியாக செல்கிறது அந்தக் கட்டுரை.

விளையாட்டிலிருந்து விளைநிலம் வரை அனைத்திற்கும் தென்னிந்தியாவிற்கு வக்காலத்து வாங்கி அக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விளையாட்டு என்பதற்கு அஞ்சு ஜார்ஜையும், சானியா மிர்ஸாவையும் உதாரணம் காட்டியிருக்கின்றனர். அஞ்சு ஜார்ஜ்ஜும், பி.டி.உஷாவிற்கு பிறகு தென்னிந்தியாவில் விளையாட்டு என்பது வாழ்க்கைத் தொழிலாகவே மாறியிருப்பதாக கூறியிருக்கிறார்.

அரசியல்வாதிகளில் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்திருக்கிறார். தொழில்நுட்பத்தில் விப்ரோ நிறைய பேரால் விரும்பப்படுவதாக எழுதியிருக்கின்றனர். சென்னையைக்காட்டிலும் பெங்களூரிலும் ஹைதராபாத்திலும் குடியேற மக்கள் அதிகமாக விரும்புவதாக எழுதியிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் குடியேறியிருக்கும் வட இந்தியர்கள் பெரிதும் தென்னிந்தியாவில் இருக்கவே ஆசைப்படுவதாக ஒரு புள்ளி விவரம் வேறு.

தென்னிந்தியாவிலிருந்து தான் ஒரு ஆண்டில் அதிக திரைப்படங்கள் வெளிவருகின்றனவாம். வர்த்தக ரீதியாக வெற்றியும் பெருகின்றனவாம். ஆட்டோகிராஃப் திரைப்படம் page3யை விடவும் பரினீத்தாவை விடவும் சிறந்த படமென்று மற்றொரு பிரமுகர் பேட்டியளித்திருக்கிறார். சாம்பார் தென்னிந்தயர்கள் மட்டுமில்லாமல் வடஇந்தியர்களுக்கும் பிடித்த உணவாக இருக்கிறதாம்.

மொத்தத்தில் சாம்பாரை உதாரணம் காட்டி இந்திய ஒற்றுமையை சாம்பலாக்கியிருக்கிறார்கள்.

இந்திய பிரதமராக மன்மோகன் சிங்கும், குடியரசு தலைவராக அப்துல் கலாமும் தேச பெருமையை மொழி, மத, பிராந்திய வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு நிலை நாட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தி வீக் போன்ற நல்ல பத்திரிக்கைகள் இது போன்றதொரு கட்டுரையை வெளியிட்டிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.

Thursday, September 15, 2005

சொந்த ஊர்

பொதுவாக புதிதாக ஒருவரைப் பார்த்தால் கேட்கப்படும் கேள்வி "உங்க சொந்த ஊர் எது?". பிறந்தது ஒரு ஊராகவும் வாழ்வது ஒரு ஊராகவும் இருக்கும் பச்சத்தில் பிறந்த ஊரையே எல்லோரும் சொந்த ஊராக சொல்வார்கள். நான் பிறந்தது காஞ்சிபுரத்தில். வளர்ந்தது படித்தது (படித்து வளர்ந்தது) எல்லாமே கோவில்பட்டியில். காஞ்சிபுரத்திற்கு நான் இதுவரை ஒரு இரண்டு முறை தான் சென்றிருப்பேன் யாராவது சொந்த ஊரில் என்ன சிறப்பென்று கேட்டால் கூட முழிக்க வேண்டியது வரும். (சும்மாங்காட்டியும் பதிலளிக்கணும்னு சொல்லி காஞ்சி மடத்தையும் அண்ணா பிறந்த ஊர் என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டேன்) எனக்கு பிறந்த ஊரைச் சொந்த ஊராக சொல்வதில் இப்பொழுதெல்லாம் உடன்பாடில்லை (சத்தியமா ஜெயேந்திரர் விவகாரம் இல்லைங்க). எதுக்கு தெரியாத ஊரைப் பற்றி தெரிந்த மாதிரி சொல்லணும்னுதான்.

சரி விஷயத்துக்கு வருவோம்...

நேற்று என்னுடன் வசிக்கும் நண்பரைக் கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் அவ்வப்போது எல்லையைத் தாண்டி, ஒரு வரை முறை இல்லாமல் கிண்டலடிப்பது வழக்கம். அப்பொழுதெல்லாம் திட்டு வாங்கிக்கொண்டு இங்கொன்றும் அங்கொன்றுமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வோம். நாங்கள் இப்பொழுது தங்கி இருக்கும் வீடு ரொம்ப பெரியது. வீட்டில் ஆறு பேர் வசிக்கிறோம். வித்தியாசமான ரசனைகள் வித்தியாசமான அனுகுமுறைகள் என ஒவ்வொருவரின் நடவடிக்கையும் பகிர்தலுக்கும் புரிதலுக்கும் வழி வகுக்கின்றன. எல்லாவற்றையும் மீறி ஒரு பாசமும் பரிவும் எப்பொழுதுமே எங்களிடம் இருக்கும். அனைவருமே கோவில்பட்டியில் இருக்கும் நேஷனல் பொறியியல் கல்லூரியில் கள்ளூரி படிப்பை முடித்தவர்கள். (பாசம் இருக்காதா பின்னே) நான் கொஞ்சம் சமர்த்து எல்லாமே நல்ல பழக்கங்கள் தான் (அட மெய்யாலுமே நல்ல பழக்கங்கள் தான்). அதனாலேயே எல்லோரும் என்னை அடிக்கடி "பழம்" என்று விளிப்பதுண்டு.

நேற்று அரட்டைக் கச்சேரியில் சொந்த ஊர் பற்றிய விவாதம் எழுந்தது. என்னுடன் வசிக்கும் இரண்டு பேருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. என்னையும் சேர்த்து இரண்டு பேர் கோவில்பட்டி வாசிகள். ஒருவருக்கு தூத்துக்குடி. மற்றொருவருக்கு மதுரைப் பக்கம் ஒரு குக்கிராமம். நேற்றைய கிண்டலுக்கு மாட்டியவர் கிராமத்துக்காரர். ஏதோ பேசிக்கொண்டிருக்க தற்செயலாக "எங்க ஊர் ஒரு பெரிய கிராமம்" என்றார். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. உடனே தூத்துக்குடிக்காரர் (குடிக்காரர் குடிகாரரும் கூட) "அதெப்போப்பா கிராமம் ஊரா மாறியது? அதென்ன சின்ன கிராமம் பெரிய கிராமம்? ஆட்களைப் பொருத்து சொல்றியா இல்லை வசதி வாய்ப்புகளை பொருத்து சொல்றியா?"ன்னு கேட்டார். மதுரைக்காரருக்கு வந்தது கோபம். உடனே "எங்க ஊரில் ஐசிஐசிஐ ஏடிஎம் செண்டரெல்லாம் இருக்கு தெரியுமா?"ன்னார்.

உண்மையில் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த கிராமத்தை கண்டுகொண்ட ஐசிஐசிஐக்காரர்களுக்கு கோவில்பட்டி இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். கோவில்பட்டியில் ஐசிஐசிஐ பேங்கும் கிடையாது ஏடிஎம் செண்டரும் கிடையாது. மிகுந்த வருத்தமாயிருந்தது இருந்தாலும் சபையில் காட்டிக்கொண்டால் அடுத்த குறி நம்மீதுதான் வைக்கப்படும் என்று கொஞ்சம் இயல்பாக இருப்பது போல நடித்தேன். உடன் இன்னொரு கோவில்பட்டிக்காரர் இருப்பதால் கொஞ்சம் வசதி. மாட்டினால் இருவருமாகத்தான் மாட்டுவோம்.

"எங்க ஊரில் ஐசிஐசிஐ ஏடிஎம் செண்டரெல்லாம் இருக்கு தெரியுமா?"ன்னு மதுரைக்காரர் கேட்டதுமே நம்ம குடிக்காரருக்கு கொஞ்சம் பின்னடைவு. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு "அது தானே உங்க ஊர் டூரிஸ்ட் ஸ்பாட்?" என்றார். கேட்ட விதத்தில் எல்லோரும் சிரித்து விட்டோம். மதுரைக்காரருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனா கொஞ்சம் நேரம் யோசித்தவர் ஒரு கேள்வி கேட்டார். "இப்போ உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க. டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு கூட்டிட்டு போகறீங்க. பிரசவ நேரமென்பதால் விமானம் மூலமாக போறீங்க. அப்போ விமான பிரயாணத்திலேயே அவங்களுக்கு குழந்தை பிறந்ததுன்னு வச்சுக்கோங்க அந்த குழந்தைக்கு சொந்த ஊர் எது?"

உடனே வெவ்வேறு பதில்கள். திருநெல்வேலிக்காரர் "அப்போ எந்த ஊருக்கு மேல விமானம் பறந்துக்கிட்டிருந்ததோ அந்த ஊருதான் சொந்த ஊர்" என்று சொன்னார். மதுரைக்காரருக்கு ஒரு இண்டலிஜெண்ட் கேள்வி கேட்டதாக தோன்றியிருக்க வேண்டும். கொஞ்சம் சிரித்தார். உடனே நான் "அப்போ கடலுக்கு மேல விமானம் பறந்துக்கிட்டிருந்தா சொந்த ஊருன்னு எதைச் சொல்லுவீங்க?"ன்னு கேட்டேன். (எப்படி நம்ம சாமர்த்தியம்) எல்லோருமே இப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சாங்க. இதான் சமயம்னு நான் கேட்டேன் "அப்போ பிறந்த ஊர் சொந்த ஊர் கிடையாது. விவரமாக நம்மை வளர்த்த ஊர் எதுவோ எந்த ஊரில் நம்மை மறக்காத மக்கள் நிறைய பேர் இருக்கிறாங்களோ அதுதான் நம்ம சொந்த ஊர். அப்படித்தானே?" கேட்டு விட்டு காலரைத் தூக்கிக்கொண்டேன். அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.

சரி உங்க கருத்தையும் நீங்க சொல்லுங்க. (கூடவே உங்க சொந்த ஊர் என்ன என்பதையும் சொல்லிட்டுப் போங்க)

***************

பதிவுடன் ஒரு துணுக்கு எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் ஒரு உண்மை சம்பவத்தையே துணுக்காக சொல்லலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.

ஒரு முறை உடன் வசிக்கும் கோவில்பட்டிக்காரரும் மதுரைக்காரரும் தாஜ்மகால் சென்றிருந்தார்கள். (நாங்கள் வசிப்பது டெல்லியில்) ரயில் பிரயாணத்தில் பேசிக்கொண்டே சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அதே கம்பார்ட்மெண்ட்டில் இருந்த ஒரு மலையாளி இவர்களுடன் பேசியிருக்கிறார். இருவரிடமும் சொந்த ஊர் என்ன என்று கேட்டிருக்கிறார்.

"கோவில்பட்டி !!" என்று கோவில்பட்டிக்காரர் சொல்லியிருக்கிறார். உடனே அந்த மலையாளியும் "நான் கோவில்பட்டிக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். லக்ஷ்மி மில்ஸ் விஷயமாக வந்தேன்" என்று சொல்லியிருக்கிறார்.

மதுரைக்காரரிடமும் அதே கேள்வியைக் கேட்க அவரும் "மதுரை!!" என்று பதிலளித்திருக்கிறார்.

அதற்கு அந்த மலையாளி "மதுரைன்னா கோவில்பட்டிக்குப் பக்கத்தில் தானே இருக்கு?" என்று திருப்பி கேட்டிருக்கிறார்.

(படிச்சிட்டு மதுரைக்காரங்க அடிக்க வராதீங்க இது உண்மைச் சம்பவம். இதிலிருக்கும் நையாண்டி கருதி தான் துணுக்காக இதனைப் பதிவிடுகிறேன்:-))

Wednesday, September 14, 2005

காதல்

இதே போல ஒரு கவிதையை (அநேகமாக மீனாக்ஸ் என்று நினைக்கிறேன்) எழுதியிருந்தார். படித்த நியாபகம் இருக்கிறது. இருந்தாலும் இது என்னுடையது:-) படிச்சிட்டு யாரும் அடிக்க வராதீங்க..

அநியாயத்திற்கு பெண்கள்
அழகாய் பிறக்கிறார்கள்
பிரம்மனின் இடஒதுக்கீடு
100% பெண்களுக்குத்தான்
அழகில் மட்டும்

நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
வளர்ந்தும் விடுகிறார்கள்
பருவம் வந்து பள்ளியும்
செல்கிறார்கள்

இதில் சில
கட்டப் பாவாடை
கண்மணிகளுக்கு
காளையர்கள் தெரிகிறார்கள்
ஓரக்கண்ணில் மட்டும்

காரை வீட்டுப் பெண் மனசை,
தெரிந்தோ தெரியாமலோ
ஏழை புள்ளையாண்டன்
தான் களவாடுகிறான்
சத்தமில்லாமல்

சில ஸ்கூட்டிகள்
ஹாரனால் மட்டுமே
இயங்க ஆரம்பிக்கின்றன
பெட்ரோலை விலை
பேசிவிட்டு

சைக்கிள் மணியும்
ஸ்கூட்டியின் ஹாரனும்
சில நாட்களில் நின்று
போய்விடுகின்றன
ஏதோ ஒரு மரத்தடியில்

என்றும் போகாதவன்
இன்று போகிறான்
மளிகைக் கடைக்கு
வழியில் தெய்வத்தின்
ஜன்னல் தரிசனமாம்

ஆண்டவன் இவர்களுக்கு
மட்டுமில்லாமல் அவள்
தகப்பனுக்கும் அருள்
பாலித்துவிடுகிறான்
தெரிந்து விடுகிறது

கண்டிப்பு அடி உதை
வீட்டுச்சிறை வெளியுலக
தடைச்சட்டம்...
வித்தியாசப்படுகிறது
அன்றாட வாழ்க்கை

சில நாட்களில்
வீட்டிற்கு கட்டுப்பட்டவள்
கழுத்தை நீட்டுகிறாள்
வீட்டிற்கு கட்டுப்படாதவள்
கம்பி நீட்டுகிறாள்

கம்பி நீட்டினாலும் தேடி
இழுத்து வருகிறார்கள்
முதலாமவனும் அவன் முடிச்சுக்களும்
அவிழ்க்கப்படுகின்றன
அவள் சம்மதமில்லாமல்

மஞ்சள் தாலி மறுபடி
கட்டப்படுகிறது
வேறொருவன் கையால்
இவள் கழுத்துக்கும் கணக்கிற்க்கும்
ஆறாவது முடிச்சாக

இப்படியாக முடிக்கப்படுகிறது
"முருகன்"களின்
கனவுகளூம் வாழ்க்கையும்
"ஐஸ்வர்யா"க்களால்
"காதல்" காவியமாக

Tuesday, September 13, 2005

பிரச்சனைகள்

ரம்யா அவர்கள் பதிவையும் பத்மா அரவிந்த் அவர்களின் பதிவையும் படித்த பிறகு பெண்களின் அன்றாட பிரச்சனைகளைப் பற்றி ஒரு பதிவெழுத வேண்டும் என்பது ஆவலாக இருக்கிறது(சத்தியமா நான் சேடிஸ்ட் இல்லைங்க..). எழுதலாம் என்று நினைத்தால் எழுதும் அளவிற்கு எந்த பிரச்சனையையும் நான் மனதிலிருத்தியிருக்கவில்லை (தனக்கு வந்தாதானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும்). ரம்யா அவர்களின் நிஜ பூதங்கள் பதிவைப் படித்த பிறகு வெளியுலகில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை, அதுவும் பெண்களுடன் பழக கிடைக்கும் நிகழ்வுகளை சேமிக்கலானேன். ஒவ்வொரு பிரச்சனையையும் அதை அவர்கள் கையாளும் விதமும் அநேக விஷயங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.

அலுவலக கோப்பு வாங்குவது போல் கையை உரசும் மேலதிகாரி, ஏடிஎம் சென்டரில் வரிசையில் நிற்காமல் முன்னே செல்ல நினைக்கும் இந்திய குடிமகன், தொலைபேசி பில்லிற்கு வைத்திருந்த பணத்தைத் திருடிச் செல்லும் திருடன், மேல்மாடியிலிருந்து நோட்டம் விடும் இந்திய நாட்டின் நாளைய தலைமுறை, முதுகு சொறிந்தால் முகம் சுழிக்கும் சக ஊழியர் என ஒரு நான்கு நாட்களிலேயே தெளிவாக தெரிந்து விட்டது பெண்களின் பாடு. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஆண்களால் வரும் பிரச்சனைகள். இவற்றைத் தவிர்த்து பெண்களால் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளும் பல.

கையை உரசும் மேலதிகாரிக்கு காலில் மிதி !! கூடவே "நீங்களும் இனிமே இங்க தான் வேலை பார்க்கணும் நானும் இங்க தான் வேலை பார்க்கணும் அதை தெரிஞ்சு நடந்துக்கோங்க" என்ற எச்சிரிக்கை மொழி, இந்திய குடிமகனிடம் "முதல்ல நிற்கப் பழகுங்க சார் அப்புறம் முன்னாடி போகறதப் பத்தி யோசிக்கலாம்" என்ற நையாண்டி என பெண்களின் சாமர்த்தியம் வெளிப்பட்டாலும் சில சமயங்களில் அவர்களுக்கு இயலாமையே மிஞ்சுகின்றன.
பணத்தைத் திருடிவிட்டு ஓடும் திருடனை இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. முதுகு சொறிந்தால் முகம் சுழிக்கும் சக ஊழியரைக் கண்டால் ஒதுங்கிப் போனாலும் அவரிடம் மட்டுமே கிடைக்கும் அலுவலகக் குறிப்புகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கும் இவர்கள் ஆளாகிறார்கள். இந்திய நாட்டின் நாளையத் தலைமுறையை இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை கண்டித்தாலோ முறைத்தாலோ அது "நாயை அடிப்பானேன்....... சுமப்பானேன்" கதை தான்.

இந்த பிரச்சனைகள் போதாதென்று மனரீதியானப் பிரச்சனைகளும் பல. அவற்றை அவர்களைத் தவிர வேறு எவராலும் இயல்பாக எடுத்துக்கூற முடியாது.

மதுரமல்லி என்பவர் இரு மாதங்களுக்கு முன்பு பெண்கள் பிரச்சனைகளை மிக நேர்த்தியாக அதே சமயம் படு ஆக்ரோஷமாக வலைப்பதிவில் எடுத்துக்காட்டிக்கொண்டிருந்தார். ஏனோ இப்பொழுது அவர் அதிகமாக பதிவிடுவதில்லை. கறுப்பியும் முன்பு அடிக்கடி பெண்ணாய்ப் பிறந்ததால் அதிகப் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்பார். அவரது படைப்புகளையும் இப்பொழுது அலுவலக வேலைத் தின்று விட்டது. இப்படியாக நிறைய எழுத்தாளர்கள் வெளிவந்தாலும் ஏனோ இவர்களால் தொடர முடிவதில்லை.

எதிர்பார்க்கிறேன் துளசி, தாணு, உஷா, மதுமிதா, விழி, கலை (யார் பெயரையாவது விட்டிருந்தேனா மன்னிச்சுக்கோங்க!!!) போன்ற பெண் எழுத்தாளர்கள் தொடர வேண்டுமென்று.

Thursday, September 08, 2005

பிள்ளையார் அருள் பாலித்தார் !!

நேற்று பிள்ளையார் சதுர்த்தி!! கோவில்பட்டியில் இருந்தவரை சும்மா வருடா வருடம் கொழுக்கட்டையை முழுசு முழுசா முழுங்குவேன். எப்படியானாலும் ஒரு பதினைந்து கொழுக்கட்டைகளாவது உள்ளே போவது உறுதி. பாருங்க வேலை கிடைச்சாலும் கிடைச்சது கொழுக்கட்டைக்கும் துண்டு விழுந்து போச்சு. போன வருஷம் வரைக்கும் ஏதோ நான் சாப்பிடுகின்ற மெஸ்ஸிலிருந்து கொழுக்கட்டைகள் கிடைத்து வந்தன. கடந்த பிப்ரவரி மாதம் அந்த மெஸ் உரிமையாளரும் தமிழ்நாட்டுக்கு சொந்த ஊருக்கு குடிபெயர்ந்து விட்டார். அதனால் இந்த வருஷம் கொழுக்கட்டை கிடைக்காதென்பது கிட்டதட்ட போன வாரமே தெரிஞ்சு போச்சு. சரி அம்மாகிட்ட ஃபோன்ல கேட்டு செஞ்சுரலாம்னு நினைச்சா அம்மா அது ரொம்ப கஷ்டம் உன்னால முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வேற என்ன செய்ய தமிழ்க் கோயிலா போய் உண்டகட்டி வாங்கித் திங்க வேண்டியதுன்னு நினைச்சேன். ஞாயிற்றுக் கிழமை மலை மந்திர் போன சமயம் பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை உண்டா என்று நிர்வாகியிடம் கேட்டேன். கோயில் நிர்வாகியும் என்னுடைய ஏக்கத்தை புரிந்தவராய் அன்பாய் இல்லையென்று சொல்லி விட்டார் :-(.

சரி இந்த வருஷம் கொழுக்கட்டைக்கு அல்வா தான்னு நினைச்சுக்கிட்டேன். நல்ல நாள் அதுவுமா கோயிலுக்கு போறது வழக்கம். கொழுக்கட்டை கிடைக்கலேயேன்னு வருத்தமிருந்தாலும் பிள்ளையார்கிட்ட கோபிச்சுக்கிறது முறையில்லையே அதனால நேத்தும் மலை மந்திர் போனேன். என் கூட வருத்தப்படறதுக்கு ஒரு நண்பனையும் கூட்டிகிட்டு போனேன்!!. எல்லா சன்னதிக்கும் போய்விட்டு திரும்பும் பொழுது கோயில் வாசலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தயிர்சாதம் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏன் விடுவானேன்னு நானும் என் நண்பனும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கினோம். என் நண்பன் கொழுக்கட்டை சாப்பிடலையேன்னு திருப்பி புலம்ப ஆரம்பித்தான். அதைக் கேட்டு எங்கள் முன் நின்று அம்மாள் சிரித்தார். பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை பின்னாடி திரும்பி எங்களைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர் என் நண்பரிடம் பேசலானார். எனக்கு ஒரே ஆச்சர்யம் என்னடா இது என்னைக்கு இல்லாத திருநாளா இன்னைக்கு ஒருத்தர் நம் புலம்பலைக் கேட்டு ஏளனம் செய்யாமல் நம்மிடம் சிரித்து பேசுகிறாரே என்று. விசாரித்ததில் என் நண்பனின் சொந்த ஊரில் (சென்னை பக்கம் ஏதோ கிராமம்) அவர் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் அந்த அம்மாள் (முன்பு அக்கா) வசித்து வந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு டெல்லிக்கு குடியேறியிருக்கிறார்.

பக்கத்து வீட்டு அக்காவிற்கு நல்லவேளையாக டெல்லியிலும் கோயிலுக்கு பக்கத்திலேயே வீடிருந்தது. பிறகென்ன அவர் வீட்டிற்கு போய் கொழுக்கட்டையாக முழுங்கினோம். அப்போ மணி இரவு 7.30லிருந்து 8.00 க்குள் இருக்கும். பிள்ளையார், பிள்ளையார் சதுர்த்தி அதுவுமாக எங்களை கொழுக்கட்டைக்காக இவ்வளவு நேரம் தவிக்க விட்டிருக்கக்கூடாது.

முடிவு செய்து கொண்டேன் அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்குள் கொழுக்கட்டை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். உதவுபவர்களுக்கு தக்க சன்மானம் உண்டு :-)

Monday, September 05, 2005

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

நெற்று டெல்லியிலிருக்கும் சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்றிருந்தேன். டெல்லியில் R.K.புரத்தில் உத்தரசுவாமி மலையில் சுவாமிநாதசுவாமி எழுந்தருளியிருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஜூன் 13ம் நாள் இந்த கோவில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அழகான கோயில் நன்றாக பராமரிக்கப்பட்டிருக்கிறது. இதன் கட்டமைப்பு பக்தர்களை வெகுவாக கவரக்கூடியது.

நேற்று நான் சென்ற நேரத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தேறின. முதலில் கற்பக விநாயகரை வணங்கி விட்டு மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை கும்பிட போனேன். இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஆண்கள் வலதுபுறமும் (சன்னதிக்கு வலதுபுறம்) பெண்கள் இடது புறமுமிருந்துதான் தரிசனம் செய்ய வேண்டும். வலதுபுறம் ஆங்கிலத்தில் GENTS என்றும் இடதுபுறத்தில் LADIES என்றும் எழுதி வைத்திருப்பது இது கட்டாயமாக்கப்பட்ட விதி என்றே எண்ண வைத்தது. மற்ற கோயில்களில் பொதுவாக இது நடைமுறையிலிருந்தாலும் இப்படி எழுதி வைத்திருக்க மாட்டார்கள்.

ஒரு சிறுமி GENTS பகுதியில் நின்று கொண்டிருந்தாள். வயது ஒரு பத்திலிருந்து பதினைந்திற்க்குள் இருக்கலாம். திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள். நான் சீக்கிரமே சென்று விட்டதால் (சுமார் ஒரு நாலே முக்கால் மணியிருக்கும்) அர்ச்சகர் வந்திருக்கவில்லை. அதனால் தரிசனம் முடித்து சன்னதியைச் சுற்றி வரலானேன். சுற்றி வரும் இடத்தில் தான் திருக்கோயிலைப் பற்றின செய்திகள் அடங்கிய கல் இருந்தது. அதனால் அதனைப் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சத்தம். அர்ச்சகர் அந்த சிறுமியை அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தார். என்னவென்று போய் விசாரித்ததில் அந்த சிறுமி கையிலிருந்து 500ரூபாய் நோட்டை அர்ச்சகர் பறிமுதல் செய்திருக்கிறார். சீக்கிரமே வந்த யாரோ உண்டியலில் போடாமல் சன்னதிக்கு முன் இருந்த தாம்பாளத்தில் 500ரூபாயை வைத்து விட்டு போயிருக்கின்றனர். அதை இந்த சிறுமி கவனித்திருக்கிறாள். யாருமில்லாத நேரம் அதனை எடுத்து செல்லப் பார்த்திருக்கிறாள். அப்பொழுதுதான் புரிந்தது அவள் திருதிருவென்று முழித்ததன் ரகசியம். பின்பு அர்ச்சகரிடம் பேசி அவளை விட்டுவிட சொன்னேன்.

பின்பு மலையிலிருக்கும் சுவாமிநாதசுவாமி சன்னதிக்கு சென்றேன். போகும் வழியில் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது வயதான பெரியவர் ஒருவர் சிவன் சிலையை கழுவிக் கொண்டிருந்தார். அந்த இடமே நல்ல சுத்தமாக காட்சியளித்தது. அவரின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும். போய் சுவாமிநாதசுவாமியைத் தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் அந்த பெரியவர் கீழேயிருக்கும் மண்டபத்தின் வாசலைத் துடைத்துக் கொண்டிருந்தார். மண்டபத்தினுள் சென்றேன். ஒரு 60, 70 பேர் ஏதோ பாட்டுக் கச்சேரிக்கு ரெடியாகிக்கொண்டிருந்தார்கள். ஒரு இரண்டு நிமிடத்தில் கச்சேரி ஆரம்பமானது. நினதுதிருவடி என்ற ஒரு முருகன் பாடலை பாடினர்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பித்தது. வந்தவர்களுள் சிலருக்கு மின்விசிறி பற்றின கவலை. விளக்கணைந்தாலும் பரவாயில்லை என்று சிலர் மின்விசிறியை சுழற்றி விட்டனர். சில பெண்மணிகளுக்கு அடுத்தவர்களின் ஆடை அலங்காரத்தில் நாட்டம். அதென்னவோ எனக்கு இன்னும் புரியவில்லை கோயிலுக்கு வரும் பொழுது ஏன் சாரை சாரையாக நகை அணிந்து வருகிறார்களென்று. அவர்கள் ஒரு ஐந்தாறு பாடலைப் பாடிமுடித்திருப்பார்கள், ஒரு புறா மண்டபத்திலுள்ள மின்விசிறியில் அடிபட்டு கீழே விழுந்தது. (புறாக்கள் இந்த கோயிலில் அதிகமாக காணப்படுகின்றன). உடனே ஒருவர் அங்கு வேலை பார்க்கும் ஒருவரை கூட்டி வந்து அடிபட்ட புறாவை வெளியேற்றச் சொன்னார். அவரும் கருணையுடன் புறாவை மெல்லப் பற்றி வெளியேற்றினார்.

எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாள் தன் மகள் தண்ணீர் பாட்டிலை எச்சில் வைத்துக் குடித்ததற்காய் கடிந்து கொண்டிருந்தார். அவரருகில் இருந்த அம்மாள் மணிபர்ஸில் வைத்திருந்த கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பதினைந்து பேர் பாடிக்கொண்டிருக்க மற்றவர் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். பார்த்தவுடனேயே நம்ம சிந்து பைரவி சுஹாசினி மாதிரி பாடறவங்கள நிறுத்திவிட்டு நாம கச்சேரியை ஆரம்பிச்சுரலாமா என்று யோசித்தேன். ஆண்டவன் அந்த அளவிற்கு எனக்கு சங்கீத ஞானத்தைக் கொடுக்காதலால் நினைப்போடு அது நின்றுவிட்டது. ஒரு வழியாக கச்சேரி முடிந்து விட்டிருந்தது. வெளியில் வந்தேன். அந்த பெரியவர் இப்பொழுது குடிநீர் வைத்திருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

இப்பொழுது தான் ஒன்று புரிந்தது. எதற்க்காக பாடுகிறோம் எதற்க்காக உட்கார்ந்திருக்கிறோம் என்று தெரியாமல் உள்ளே ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. அடிபட்ட புறாவிற்கு இவர்களால் உதவ முடிவதில்லை. இவர்களின் மேக் அப்பும், எச்சிலும் தான் இவர்கள் கண் முன் தெரிகிறது. மனமுருகி பாடினவர்களும் புறாவிற்கு உதவ முன்வரவில்லை. இவர்கள் முருகனைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெளியில் அந்த வயதான பெரியவர் இவர்களுக்கான இடங்களை மட்டுமில்லாமல் ஆண்டவனையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். புரிந்து விட்டது எனக்கு புறாவிற்கு உதவியவருக்கும் பெரியவருக்கும் கிடைக்காத கடவுள் பாடியவர்களுக்கும் கிடைக்கப்போவதில்லை. என்ன செய்ய "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே". எங்க அம்மா சொன்னது ஞாபகம் வந்தது, "கோவிலுக்கு அடிக்கடி போ நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வாய்!!". சரி தானே.

Friday, September 02, 2005

டிவியும் அலுவலக நண்பரும்

நேற்று என் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். நண்பரென்றால் சமவயதுக்காரர் அல்ல. இரண்டு குழந்தைகளின் அப்பா. நன்கு பழகக்கூடியவர். ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர். அவருடன் பேசினாலே ஒருவித பரவசமும் ஆர்வமும் நமக்கும் தொற்றிக்கொள்ளும். அலுவலகத்திலும் சரி வெளியிலும் சரி அவருக்கு நல்ல பெயர். எப்பொழுதும் யாராவது பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். நேற்று அவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம். வீட்டில் டிவி தேவையா இல்லையா என்பது பற்றிய ஒரு பேச்சு எழுந்தது. மகளிர் சமாச்சாரமாதலால் (என்னங்க !! யாரும் அடிக்க வந்திராதீங்க.. டிவில இப்ப எல்லாமே தாய்க்குலங்கள்தான்) அவங்க மனைவியும் சேர்ந்துகிட்டாங்க.

பேச்சு சுவாரஸ்யமாக போச்சு. அவர் வீட்டில் டிவி கிடையாது. தினமும் ஒரு ரஜினி படம் போட்டாலும் டிவி வாங்கக் கூடாதுங்கிறதுல அவர் ரொம்ப கண்டிப்பாகவே இருந்தார். மனுஷன் இருந்தாலும் இவ்வளவு கராறாக இருக்கக்கூடாதுன்னு நானும் அப்பப்போ நினைத்துக் கொள்வேன். சில சமயம் அவரிடமும் சொன்னதுண்டு. ஆனா இதுவரையிலும் அவரிடமும் அவர் கண்ணொட்டத்திலும் மாற்றம் வந்ததாக தெரியவில்லை. அவர் மனைவியும் வேரொரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அதனால் மனைவியிடமிருந்தும் பெரிய அளவில் ஒன்றும் வற்புறுத்தல் இருந்ததாக தெரியவில்லை.

டிவி இல்லாம ஒரு வீட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதெப்படிங்க ஒரு சீரியல் பார்க்காம, ஒரு திரைவிமர்சனம் கேட்காம இவங்களால இருக்க முடியும்? உலக நடப்புல ஏதாச்சும் ஒரு விஷயம் என் மண்டைல ஏறுதுன்னா அதுக்கு டிவி தான் முழுமுதற் காரணம். ரசனை சார்ந்த புத்தகங்களைத் தவிர்த்துப் பார்த்தால் என்னிடமிருப்பது மிகச்சொற்பமே. புத்தகங்கள் மூலம் படிக்கிறத விட டிவி மூலம் பார்க்கிறது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் தர்ற விஷயம். பிபிசி, டிஸ்கவரின்னு புதுப்புது விஷயங்கள் தெரிஞ்சுக்கறது டிவினால தான். சரி சரி போது டிவி புராணம்... விஷயத்துக்கு வர்றேன்.

நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் அவரிடம் விவாதித்தேன். நாங்க பேசும் பொழுதெல்லாம் டிவி பத்தின விவாதங்கள் வருவதுண்டு அவை எல்லாம் சும்மா பத்தோட பதிணொன்னு அத்தோட இதுவொண்ணுன்னு தான் வந்து போகும். அப்படியில்லாமல் நேற்றுதான் டிவியைப் பற்றி மட்டுமே பேசினோம். நான் அவர்முன் வைத்த முக்கியமான வாதங்கள்

டிவி இல்லாமல் உலக செய்திகளும் பொது அறிவும் கிடைப்பதில்லை
டிவி என்பது நம்முடைய பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று

பட்டிமன்றத்தில பேசற மாதிரி பாயிண்டுகள அள்ளி வீசிட்டு அவர் பதிலுக்காக காத்திருந்தேன். ரொம்ப ஆழமாக யோசித்தவர் பதிலளிக்களானார்.

"எவ்வளவு நேரம் நீங்க உலக செய்திகளும் பொது அறிவு நிகழ்ச்சிகளையும் பாப்பீங்க?", "தினமும் ஒரு மணி நேரம்". இது நான்.

"ஒரு நாளில் எவ்வளவு நேரம் வெட்டியா பொழுது போக்கலாம்நு நினைக்கிறீங்க?".
வெட்டியான்னு கேட்டதுமே கொஞ்சம் நெருடலாத்தான் இருந்தது. உண்மை கசக்கத்தான செய்யும். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு "அதுவும் ஒரு மணி நேரம்" என்றேன்.

"வார விடுமுறைகளைத் தவிர்த்து, இப்போ தினசரி எவ்வளவு நேரம் டிவி பார்க்கறீங்க?", நம்ம திருவிளையாடல் தருமிக்கு அண்ணன் மாதிரி கேள்விகளா கேட்டிக்கிட்டே போறாரு.

"ஒரு இரண்டரை மணி நேரம்".

"இது போக பாட்டு கேட்பது, ஊர் சுத்துவது, என் போல நண்பர் கூட அரட்டைன்னு எவ்வளவு நேரம் செலவழிப்பீங்க?"

வந்த கடுப்பில எந்திருச்சு போயிரலாம்னு நினைச்சேன். ஏண்டா இவன்கூடவெல்லாம் பேசினோம்னு அப்ப தோணிச்சு. என்னால் இந்த முறை பதிலளிக்க முடியவில்லை.

என்னுடைய மெளனத்தைப் புரிந்துகொண்டவராக "என்னடா இப்படியெல்லாம் கேட்கிறான்னு தப்பா நினைக்காதீங்க, இப்ப சொல்லுங்க டிவி மட்டும் தான் பொது அறிவு வளர காரணமா? என் கூட பேசிட்டிருக்கீங்க உங்களுக்கு ஏதாச்சும் விஷயம் கிடைக்கலையா? டிவி மூலம் கிடைப்பது கொஞ்சம் தான். நாமா வெளியுலகத்துல தெரிஞ்சுக்கற விஷயம் தான் மீதி. வெளியுலகத்தில இல்லாத விஷயங்களும் இல்லை. செய்தித்தாள் தராத உலக அறிவும் இல்லை. செய்தித்தாள்கள் பாருங்க. படிக்கிற பழக்கமும் கூடும் நீங்க தேடுற விஷயங்களும் கிடைக்கும். அத விட்டுட்டு டிவில ஏங்க நேரத்த விரயமாக்கணும். உங்க டைட் செட்யூலிலேயே நீங்க இரண்டரை மணி நேரம் டிவில செலவழிக்கறீங்க, சின்ன பசங்களுக்கு கட்டுப்பாடுகள் கம்மி அவங்க எவ்வளவு நேரம் செலவழிப்பாங்க? அவங்களுக்கு இந்த வயசில தேவைப்படற விஷயங்கள சொல்றத விட தேவையில்லாத விஷயங்களத்தான் டிவி நிறைய தருது. இப்ப சொல்லுங்க டிவி வேணுமா வேண்டாமா?"

அது வரை என் சார்பில அவருகூட விவாதம் பண்ணிட்டு இருந்த அவரோட மனைவியைக் காணும். இனிமே சத்தியமா வீட்டில டிவி வேணும்னு கேட்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்ப மறுபடியும் முதல் பத்திய படிங்க.

நம்ம இப்னு எழுதிய கவிதையும் ஞாபகம் வந்தது. சுட்டி இங்கே

பதிவு போடும் போது ஏதாச்சும் துணுக்கு எழுதினா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். எப்போதோ படித்த ஒன்று.

மூணாம் வகுப்பு கணக்கு வாத்தியார் நம்ம கணேஷ்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறாரு (கணேஷா!! அட துணுக்குல கூட நான் ஹீரோவா இருக்கக்கூடாதா??)
கணேஷ்!! 2,4,9,16 எண்கள் எல்லாம் என்ன?
"ஜெயா டிவி, விஜய் டிவி, கார்டூன் நெட்வொர்க், டென் ஸ்போர்ட்ஸ்." (சன் டிவிய கழட்டி விட்டுடோம்ல.... ஏன்னா சன் நம்பர் ஒன்னுங்க)