Monday, April 18, 2011

விடைத்தாள்

திருத்தப்பட்ட விடைத்தாள்கள்
கொடுக்கப்படுகின்றன.

”கலைவாணி”
என்றழைக்கிறார்
ஆசிரியர்.

கோடிட்ட இடங்களை
பூக்களால் நிரப்பியிருக்கிறாள்.

இடப்புறம் இருக்கும் பட்டியலில்
எல்லாவற்றையும்
வலப்புறம் இருக்கும்
எல்லாவற்றினுடனும்
பொருளறிந்து பொருத்தியிருக்கிறாள்.

சரியா தவறாவில்
எல்லாமே சரியாய்
இருக்கின்றன.

உலகம் பற்றிய
வினா ஒன்றுக்கு
மூன்று வரிக்கு மிகாமல்
தாளில் பாதியும்
மேஜையில் பாதியும்
யானை ஒன்றை வரைந்திருக்கிறாள்.

மேஜையில் இருக்கும் யானை
தன் மதிப்பெண்கள் அனைத்தையும்
தின்று விட்டது தெரிந்ததும்
சந்தோஷமடைகிறாள்.

மேஜைக்காடுகளில்
விலங்குகள் தின்னும் விலங்குகள் கூட
மதிப்பெண்களை மட்டுமே
தின்று கொண்டிருக்கின்றன.

Monday, April 11, 2011

தார் சாலைகள்

எச்சில் பொட்டுக்களுடன்
நெடுக கிடத்தப்பட்டிருக்கின்றன
தார் சாலைகள்

இரு பாகம் பிரித்து
வெள்ளை நூல் கொண்டு
சிவப்பு மண் மேல்
கவனமாய் தைத்திருக்கிறார்கள்

மஞ்சள்
கோடு
போக-வர
வேலியிடுகிறது

ஊர்திகளின்
இடைவிடாத
போக்குவரத்தில்
ஊர்களை
இணைத்து
கருமையிழக்கின்றன

சாவடிகளில்
சுமைகளின்
சந்தேகங்களில்
சோதனையும்
உண்டு

முடிவின்றி
நீண்டு கிடக்கின்றன
எல்லைகள் தாண்டி
வரிகள்
வேறுபடுகின்றன
சக்கரங்களுக்கேற்ப

Thursday, April 07, 2011

அடையாளம்

துர்கா மெஸ்ஸில்
”DM” என்ற
எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட
எவர்சில்வர் தட்டுகளில்
உண்டிருக்கிறேன்.

ஜெயஸ்ரீ கல்யாண மஹாலில்
பல வண்ணங்களில்
JKM எண்களுடன்
ப்ளாஸ்டிக் சேர்களை
கண்டதுண்டு.

சண்முகா டாக்கீஸில்
துளையிடப்பட்டு
இரும்புச் சங்கிலியில்
கட்டப்பட்டிருக்கிறது
காலி தண்ணீர் டம்ளர்!

நண்பன் பரிசளித்த
காப்பிக் குவளையொன்றில்
சிரித்தவாறு
அச்சிடப்பட்டிருக்கிறேன்
நான்.