Thursday, October 13, 2005

ராசிபலனும் நண்பனும்

எந்த பத்திரிகை வந்தாலும் ராசிபலன் பார்த்து என்னை நானே ஏமாற்றிக் கொள்வது என்னுடைய தினசரி வழக்கம். பழக்கமென்னவோ கெட்ட பழக்கம் தான் ஆனாலும் அதன் மூலம் எனக்கு விவாதிப்பதற்கு நிறைய விஷயங்களும் சில நல்ல நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். (யாரு நம்ம ஜோதிட மாமணி பார்த்தசாரதியான்னு கேட்காதீங்க..)

ராசிபலன் பார்ப்பது மூலம் கிடைக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமானவை. மிதுன ராசிக்கு இந்த வாரம் அலைச்சல்கள் அதிகம் அதனால் கற்பகாம்பாளை தினமும் வழிபட வேண்டும், இந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும், இந்த எண் உங்களுக்கு ராசியான எண் என்று குறிப்பிட்டிருப்பார்கள். ராசிபலனை அப்படியே பின்பற்றுபவராய் இருந்தால் தினமும் கற்பகாம்பாளை வழிபட கிளம்பி விடுவர். உண்மையில் அது தான் பெரிய அலைச்சலாக இருக்கும். இதையே கொஞ்சம் ஆராயும் நோக்குடன் பார்க்க ஆரம்பித்தால் கற்பகாம்பாளுக்கும் அலைச்சலுக்கும் என்ன சம்பந்தம் என்று விவாதிக்கலாம் (திட்டாதீங்க இதுவும் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் இருக்கும் சம்பந்தம் போலத்தான்). சில சமயம் இது போல விவாதங்கள் பல நல்ல வரலாற்றுத் தகவல்களைத் தரும் அப்பொழுதெல்லாம் ஆச்சரியமாகவும் இருக்கும்.

ராசிபலம் பார்ப்பது மூலம் கிடைக்கும் நண்பர்கள் அதிகம். எனது பக்கத்து தெருக்காரர் ஒரு நியுமராலஜி பைத்தியம். அடிக்கடி பேசுவது கிடையாது. நான் ராசிபலன் பார்க்க ஆரம்பித்த பிறகு அவருடன் ஒரு நாள் நியுமராலஜி பற்றி விவரங்கள் கேட்டேன். அன்றிலிருந்து அவரும் நானும் அடிக்கடி சந்தித்து பேசுவதுண்டு. சில சமயம் நியுமராலஜி சில சமயம் உலக நடப்புகள் என எங்கள் பேச்சுக்கள் நீளும். நம்பர்களால் கிடைத்த நண்பர் அவர். இதே போல் மேலே சொன்ன ராசிபலன் பற்றிய விவாதங்களுக்கு நம்முடன் இருப்பவரும் நமக்கு நண்பர்களாகி விடுவர். இது போதாதென்று ராசிபலன் பார்க்காதே இதெல்லாம் வெறும் பம்மாத்து வேலை வெறும் மூடநம்பிக்கை என நமக்கு அறிவுறுத்தும் சில நல விரும்பிகளும் நமக்கு கிடைப்பர். மொத்தத்தில் ராசிபலன் மூலம் கிடைக்கும் விஷயங்களும் நண்பர்களும் அதிகம். எனது ராசிக்கு ஏற்ற பலனை நானே தீர்மானிப்பதில் எனக்கும் ஒரு சந்தோஷம். அதனாலேயே ராசிபலன் பார்க்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறேன்.

சரி சரி விஷயத்துக்கு வருவோம். என்னைப் போல நண்பன் ஒருவனும் ராசிபலன் பைத்தியம். வார பலன், மாத பலன், பிறந்த நாள் பலன் இது போக தீபாவளி பலன் பொங்கல் பலன் என்று ஒவ்வொரு பலனையும் பார்த்து தான் எந்த புது முயற்சியையும் செய்வான். அநேகமாக அவனது முயற்சிகள் எண்பது சதவிகிதம் தோல்வியில் தான் முடியும். (பின்னே முயற்சி எதற்காக செய்கிறோம் அதற்கு என்ன பலன் என்று பார்க்காமல் ராசிபலன் பார்த்தால் காரியம் நடக்குமா?) அவனுக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டால் பொறியியல் என்று சொல்லாமல் பதிமூணு வருஷமா சங்கீதம் படிக்கிறேன்னு தான் முதலில் சொல்வான்.

சமீப காலமாக அவனுக்கு சினிமாவில் பாட வேண்டும் என ஆசை. அடித்து பிடித்து யாரையோ சிபாரிசு பிடித்து, வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளரை அணுகியிருக்கிறான். அவரும் இவன் பாடலைக் கேட்டுவிட்டு சினிமாவில் பாடுமளவிற்கு உங்களுக்கு குரல்வளம் இல்லை இன்னும் நன்றாக பயிற்சி செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். நண்பனுக்கு ஏமாற்றம். வீடு வந்தவுடன் செய்தித்தாளைப் புரட்டியிருக்கிறான். வழக்கம்போல ராசி பலனைப் படித்திருக்கிறான். "இன்று உங்கள் திறமை வீணாகும் தேவையில்லாத முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்" என வெளியாகியிருக்கிறது. நண்பனுக்கு உடனே அந்த இசையமைப்பாளரின் மேல் வெறுப்பு என்னிடம் வந்து அவரை சராமாரியாக வசைபாட ஆரம்பித்தான். ஏதேதோ சொல்லி நான் தான் அவனை சமாதானப் படுத்தினேன்.

இன்றும் சினிமாவில் பாட வேறு சிலரிடம் சிபாரிசுக்காகவும் அறிமுகத்திற்காகவும் அலைந்து கொண்டிருக்கிறான். முதலில் சந்தித்த இசையமைப்பாளர் சொன்ன பிரத்யேக பயிற்சியை மட்டும் இன்னும் செய்ய ஆரம்பிக்கவில்லை. விஷயம் அவனுக்கு இன்னும் பிடிபடவில்லை. அந்த பயிற்சியை ஆரம்பிக்காதவரை அப்படி இப்படி சிபாரிசு பிடித்து வேறு இசையமைப்பாளரைப் பிடித்தாலும் அவனது அன்றைய ராசிபலன் "திறமை வீணாகும்" என்றே சொல்லப் போகிறது.

சரி இந்த விஷயத்தை அவனிடம் சொல்லி விடலாம் என்று என்றைக்கெல்லாம் நினைக்கிறேனோ அன்றைக்கெல்லாம் என் ராசிபலனில் "வீண் பேச்சு" என்றிருக்கிறது:-)

Friday, October 07, 2005

ஒரு புதிர் சூடோகு

சூடோகு பத்தி நிறையவே எழுதியாச்சு. அதனால நான் எழுதப் போறதில்லை.

இந்து பேப்பரில் வந்த ஒரு "HARD" சூடோகுக்கு விடை தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.

கொடுக்கப்பட்ட சூடோகு


நான் முயன்று பார்த்ததில் சில கட்டங்களை நிறப்பினேன். ஒரு சமயத்தில் கீழே உள்ளது போல சூடோகு மாறியது. அதற்கு பிறகு என்னால் எந்த கட்டத்தையும் நிரப்ப முடியவில்லை. நீங்கள் முயன்று பாருங்கள். ஏதேனும் கட்டத்தை நிறப்பினால் எப்படி நிறப்பினீர்கள் என்று சொல்லுங்கள்.

Monday, October 03, 2005

அன்பே சிவம் vs நந்தா - யார் சிறந்த கடவுள்?

தமிழ்மணத்திற்கு வருவதற்கு முன்பு நான் எழுதிய பதிவு. எனக்கு மிகவும் பிடித்த பதிவாகையில் இன்று மறுபதிப்பு செய்கிறேன். உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.

மனிதனின் பகுத்தறிவு விவாதங்களில் தலையாயது கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், அவன் வேரூன்றி தனித்து இயங்க ஆரம்பித்ததும் அவனது பகுத்தறிவிற்கு சவால் விடும் மிகப்பெரிய வினா கண்டிப்பாக கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கக்கூடும். அவனது நம்பிக்கைகளில் அதிகமாக அவனை நல்வழிப்படுத்துவதும் கடவுள் நம்பிக்கை தான். ஆத்திகமோ நாத்திகமோ அவனது கோட்பாடுகள் தாம் சமுதாயத்திற்கு அவனை அடையாளம் காட்டுகின்றன.

தமிழ் சினிமாவும் வேறுபட்ட பல நல்ல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கடவுளைப் பற்றிய அதன் முயற்சிகளையும் ஆராயும் ஆர்வம் ஏற்பட்டது. கடவுள் என்று சொன்னதுமே நமக்கு முதலில் ஞாபகம் வரும் இயக்குனர் வேலுபிரபாகரன் தான். தமது ஒவ்வொரு முயற்சிகளிலும் கடவுளைச் சீண்டவேண்டும் என்பதே இவரது குறிக்கோள். ஆனால் இவரது படைப்புகள் அனைத்துமே பெரிதாக பேசும்படியாக இருந்ததில்லை.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொண்டால், அதில் பக்தி படங்களைத் (திருவிளையாடல், சரஸ்வதி சபதம் முதலாக இன்றைய பாளையத்து அம்மன் வரை) தவிர்த்து கடவுள் பற்றிய கோட்பாடுகள் அடங்கியவை மிகச்சொற்பமே. இன்றைய தேதியில் மக்களின் இறையுணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய படங்கள் மிக அரிதாகத்தான் தென்படுகின்றன. குறும்படங்கள் சில அவ்வப்போது வெளிவந்தாலும் வெகுஜன திரைப்படங்களில் அந்த முயற்சி குறைவே. மிகுந்த கவனத்துடனும் சாமர்த்தியமாகவும் கையாளப்பட வேண்டிய கருவாதலால் இயக்குனர்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள் போலும்.

இருந்தாலும் தமிழர்கள் தைரியசாலிகள் என்பது திரைத்துறைக்கு மட்டும் பொருந்தாதா என்ன? கடவுளைப் பற்றி அற்புதமான இரண்டு திரைப்படங்களை மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். இரண்டுமே சமீப காலங்களில் வெளிவந்தவை. முதலாவது அன்பே சிவம் இரண்டாவது நந்தா. நந்தாவில் வெளிப்படையாக ஒரிரு காட்சிகளில் தான் கடவுளின் தன்மைகளை இயக்குனர் சொல்லியிருப்பார். இருந்தாலும் நந்தா என்றொரு முழுத்தொகுப்பையும் எடுத்துக்கொண்டால் அது முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்த படைப்பாகத் தான் தெரிகிறது. அன்பே சிவத்தைப் பற்றி சொல்லவேண்டியதில்லை (மன்னிக்கவும் எழுதவேண்டியதில்லை), வெளிப்படையாகவே மிகுந்த சொல்வளத்துடன் வெளிவந்த படைப்பு.

கில்லி, சாமி போன்ற திரை மசாலாக்களை விடவும், நினைவேடு, (ஆட்டோ கிராஃப்) காதல் போன்ற உணர்ச்சிக் குவியல்களை விடவும் என்னை அதிகமாக பாதித்தது அன்பே சிவமும் நந்தாவும் தான். "தெரியாத ஒரு பையனுக்காக வருத்தப்படும் மனசிருக்கே அது தான் கடவுள்" என்ற நல்லாவின் (கமலின்) யதார்த்தமாகட்டும், "அக்கிரமத்தைப் பார்த்து கொதிச்செழுகிற ஒவ்வொருத்தனும் சாமி தாண்டா, இதுக்குன்னு (மேலேயிருந்து) வருமா?" என்ற ஐயாவின் (ராஜ்கிரணின்) கொதிப்பாகட்டும், கண்டிப்பாக தமிழ் சினிமாவின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய மொழிகள்.

நல்லாவும் நந்தாவும், கடவுள் என்பவன் மனிதனிடமும் இருக்கிறான் என்பதனை வலியுறுத்தினாலும் தத்தமது செயல்பாடுகளால் முற்றிலும் முரணானவர்கள். நல்லா, அன்பிலும் அரவணைப்பிலும் கடவுளைக் காட்டியவன். நந்தா, அக்கிரமங்களை அழிப்பதில் கடவுளைக் காட்டியவன். எனக்குள் ஒரு வினா, இவர்களில் யாரைப் (எந்தக் கடவுளைப்) பின்பற்றலாம்? நல்லாக்கள் நிறைய பேர் வாழ்ந்திருக்கிறார்கள், உதாரணத்திற்கு காந்தியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்களின் அணுகுமுறை இந்தக்காலத்திற்கு ஏற்றதாக எனக்கு தோன்றவில்லை. (மன்னிக்கவும் இது எனது அபிப்பிராயம்). நந்தாவிற்கு இணையாக எனக்கொரு உதாரணப் புருஷன் கிடைக்கவில்லை. நந்தாவின் செயல்பாடுகள் ஒருவருக்கு நல்லதாகப் பட்டாலும், பாதிக்கப் படும் நபரின் கண்ணோட்டத்தில் தவறாகத் தோன்றலாம். இருந்தும் இன்றையத் தேதியில் நல்லாவைக் காட்டிலும் நந்தாதான் ஒரு சிறந்த கடவுளாக இருக்க முடியும் என்பது என் (இந்தக் கடவுளின்) கருத்தாக இருக்கிறது. நீங்கள் (சக கடவுள்கள்) என்ன சொல்கிறீர்கள்?