Monday, June 01, 2009

சில பெண் குரல்கள்

சில பெண் குரல்கள் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, ஷேக் ஹசினா, சந்தா கோச்சர், மீரா குமார் போன்றோரின் கருத்துக் குரலைப் பற்றி எழுதுவேன் என்று நினைத்து வந்தவர்களுக்கு முதற்கண் என் மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா, சினிமா, சினிமா தான் இந்த பதிவு. அதுவும் முழுக்க முழுக்க பெண் குரல்களில் வெளி வந்துள்ள பாடல்களைப் பற்றி. அதற்காக "உயர்ந்த மனிதனின்" நாளை "இந்த வேளை பார்த்து", "அரியது அரியது" போன்ற பாடல்களைப் பற்றியெல்லாம் எழுதுவேன் என்றும் நினைக்க வேண்டாம். அதற்கெல்லாம் எனக்கு நுண்ணறிவு பத்தாது. அந்த பாடல்களெல்லாம் "காலத்தை வென்ற சிறப்புடையவை" என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டால் இசையில் சிறந்த நுண்ணறிவாளர்கள் வாயில் விழுவதிலிருந்து தப்பித்துக் கொள்வேன்.

இதுவரை 38 முறை தேசிய அளவில் "சிறந்த பிண்ணனி பாடகி" விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழர் பெருமை பட வேண்டிய விஷயம், தமிழ் பாடலுக்காக (ஊ ல லா தமிழ் பாடலா எனக் கேட்பவர்கள் தமிழ் படங்களில் வந்த பாடலுக்காக எனக் கொள்ளலாம்) இது வரை 12 முறை இந்து விருது வழங்கப்பட்டுள்ளது. பி. சுசிலா, கே. பி. சுந்தராம்பாள், வாணி ஜெயராம், எஸ். ஜானகி, சித்ரா, சுவர்ணலதா, பவதாரிணி, சாதனா சர்கம் என மொத்தம் எட்டு பேருக்கு இந்த விருது தமிழ் பாடலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் சாதனா சர்கம் அவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் தமிழில் பேசவும் தெரிந்தவர்கள். (சாதனா சர்கம் சொல்லும் "வணக்கம் தமில் நாடு" எல்லாம் இதில் கணக்கில் கிடையாது)

இப்படியாக தமிழ் பாடகிகளுக்கு அல்லது தமிழில் பாடும் பாடகிகளுக்கு இந்தியளவில் சிறந்த அங்கீகாரம் இருந்து வருகிறது. சமீபத்தில் என்னுடைய i-podல் 1998க்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த தமிழில் முழுக்க முழுக்க பெண் குரலில் வந்த சில பாடல்களைத் தொகுத்தேன். அவை பின்வருவன

1. எனக்கு பிடித்த பாடல் - ஜுலி கணபதி - ஷ்ரேயா கோஷால்
2. காதல் வானொலி - ஆல்பம் - சுஜாதா
3. தையத்தா தையத்தா - திருட்டுப் பயலே - சாதனா சர்கம்
4. யாரிடம் சொல்வேன் - ரைட்டா தப்பா - ஹரிணி
5. ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால் - சின்மயி
6. மழை நின்ற பின்பும் ஈரம் - ராமன் தேடிய சீதை - கல்யாணி
7. மருதாணி - சக்கரக்கட்டி - மதுஸ்ரீ
8. ஆலங்குயில் - பார்த்திபன் கனவு - ஹரிணி
9. ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப் - சித்ரா

இந்த தொகுப்பில் சமீபத்தில் மேலும் இரண்டு பாடல்களைச் சேர்த்துள்ளேன்.

1. கண்ணில் தாகம் - அச்சமுண்டு அச்சமுண்டு - சௌமியா
2. கூட வருவியா - வால்மீகி - பேலா ஷிண்டே

இதில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால் நான் எப்பொழுதும் கேட்கும் திரு. இளையராஜா இசையமைத்த பாடல்கள் இரண்டு. ஆஸ்கார் நாயகன் திரு. ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் இரண்டு. திரு. வித்யாசாகர் இசையமைத்த பாடல்கள் இரண்டு. திரு. பரத்வாஜ் அவர்கள் இசையமைத்த பாடல்கள் இரண்டு. திரு. கார்த்திக் ராஜா அவர்கள் இசையமைத்த பாடல்கள் மூன்று. கார்த்திக் ராஜா மிகக் குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார் என்றாலும் சொல்லும் படியான சில நல்ல பாடல்களை வழங்கியிருக்கிறார். எனக்குத் தெரிந்து நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று "யாரிடம் சொல்வேன்". அநேகமாக நிறைய பேர் இந்த பாடலைக் கேட்டிருக்க மாட்டார்கள். அதே போல் சமீபத்தில் கர்நாடக இசைப் பாடகி திருமதி. சௌமியா பாடியுள்ள கண்ணில் தாகம் என்னும் பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த வருடம் மீண்டும் அந்த "சிறந்த பிண்ணனி பாடகி" விருது ஒரு தமிழ் பாடலுக்கு கிடைக்கலாம் என நினைக்கிறேன்.

மேலும் இந்த தொகுப்பில் இருக்கும் பாடகிகளில் பலர் (எஸ். ஜானகி, பி. சுசிலா உட்பட) ஆல் இந்தியா ரேடியோ, சா ரி க ம பா போன்ற வெகுஜன ஊடக நிகழ்ச்சிகள் மூலமாக அறிமுகமானவர்களே. இப்பொழுது தமிழ் தொலைக்காட்சிகளில் "சூப்பர் சிங்கர்", "டாப் சிங்கர்", "ராகமாலிகா" என பல போட்டி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இப்படியாக நிறைய பெண் குரல்கள் நமக்கு கிடைக்கின்றனர். செவிகளுக்கு சுவை படைப்பதில் இவர்களை மிஞ்சியவர்கள் வேரெவருமில்லை.

ஒரு வேண்டுகோள்:
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெயர் வைப்பவர்கள் "சூப்பர் சிங்கர்", "டாப் சிங்கர்" என பெயர் வைப்பதற்கு பதிலாக "தமிழ் பாட்டும் மெட்டும்", "பாட்டுப் பாடவா" எனப் பெயர் வைக்க துவங்கலாம். ("ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு ஒரு வணக்கம்!!)