Tuesday, October 19, 2010

தனிமை

ஆளுயரக் கண்ணாடி
என் தனிமை.
வளைந்த நெளிந்த
குனிந்த நிமிர்ந்த
என்னை நான்
பார்த்தாகி விட்டது.

உங்களால் முன் வந்து
நிற்க முடியாதென்பதும்
எனக்குத் தெரியும்.
இருந்தும்
ஒரேயொரு கோரிக்கை!
கண்ணாடியை உடைக்கும்
சூக்குமத்தையாவது கற்றுத்தாருங்கள்.
சிதறல்களின் பிம்பங்களில்
எனது பன்மையைப்
பார்த்துக் கொள்கிறேன் நான்.

Monday, October 11, 2010

விக்கி என்கிற விக்னேஷ்

விக்கி என்கிற விக்னேஷ்ஷை அவனின் பத்தாவது வயதிலிருந்து எனக்குத் தெரியும். அது நான் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி சென்ற முதல் வருடம். வயது வசத்தில் கல்லிகாஸ்கின்ஸ் காற்சட்டைகளுக்கு மாறி, முதன் முதலாக அதை அணிந்து வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்ற பொழுது “அண்ணே! பாகி பாண்ட் புதுசா இருக்கு” என்று என்னிடம் கேட்டுவிட்டு அவன் அப்பாவிடம் “அப்பா கணேஷ் அண்ணன் பாண்ட்ட பாருங்க” என்று என்னை நடுத்தெருவிலேயே நெளிய வைத்த துடுக்கு பையன். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் என நினைக்கிறேன். எங்கள் வீடிருந்த தெருவின் முனையில் தான் அவனின் வீடிருந்தது. எங்கள் வீட்டிலிருந்து படிப்பு, பயணம், நுகர்வு, வழிபாடு என எல்லாவிதமான தன்னார்வ-சமூக நடவடிக்கைகளுக்கும் அவனது வீட்டைக் கடந்து தான் செல்ல வேண்டும். பெரும்பாலும் எந்நேரமும் விக்கி தெருவில் விளையாடிக்கொண்டு தான் இருப்பான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. பிரகாஷ்ராஜ் ஒரு படத்தில சொன்னது போல அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பால்யத்து என்னை நினைவு படுத்துவான். வெவ்வேறு நிலைகளில் என்னுடையதும் அவனுடையதுமான பரிணாமம் ஒரே தெருவில் நிகழ்ந்து கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம்.

விக்கியின் அப்பா இன்முகத்துடன் நன்றாக பேசுவார். ஹைபர் டென்ஷன் என்னும் இரத்த அழுத்தம் பரம்பரை வியாதி என்பதற்கு மருத்துவர்கள் இரு காரணம் கூறுவர் ஒன்று மரபியல் சார்ந்தது இன்னொன்று வாழ்வு முறை சார்ந்தது. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரனான விக்கியின் அப்பாவிற்கு இன்முகமும், பேச்சு சாதுர்யமும், விருந்தோம்பலும் வாழ்வு முறையாலும் மரபியல் வழியாகவும் அவரின் தாத்தாவிடமிருந்து வாய்த்திருக்கலாம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதாலும் எனக்கும் அவரின் மேல் மரியாதை அதிகம். விக்கியின் அம்மா எனது அப்பாவுடன் பணி புரிந்தவர் என்பதாலும், ஒரே தெருவில் வசித்து வந்தோம் என்பதாலும் அடிக்கடி அவருடன் பேச நேர்ந்ததும் உண்டு. பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் வெற்றிகரமாக இடம் வாங்கிவிட்ட என்னிடம் விக்கியின் அப்பா அடிக்கடி பேசியது அவனுடைய கல்வி சார்ந்த விஷயங்களுக்காகத்தான். மகனின் படிப்பு பற்றிய பேச்சுக்களில் மட்டும் அவரின் முகத்தில் ஒருவித கவலை ரேகை படியும். இயல்பாகவே இன்முகத்துடன் இருக்கும் அவரின் இந்த பேச்சுக்கள் மட்டும் என்னை மிகவும் நெருடவே செய்தன. ”கவலைப்படாதீங்க சார், விளையாட்டுத்தனம் குறைஞ்சா தன்னால படிக்க ஆரம்பிச்சுடுவான்” என நானும் எனக்குத் தெரிந்த பக்குவ ஆறுதல்களித்ததுண்டு. எந்நேரமும் தெருவில் விளையாடும் சிறுவனிடம் அப்பொழுது நல்லுரை வழங்கும் அளவிற்கு நான் வளரவில்லை. அதனால் விக்கியிடம் அவனது அப்பாவின் கவலைகளைப் பற்றி நான் பேசியது கிடையாது.

விக்கியிடம் பேசுவதற்கு நிறைய இருந்தது. எங்கள் தெரு சிறுவர்கள் கண்ணாமூச்சி ஆட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கார்டூன் நெட்வொர்க் பக்கமும், கணினி விளையாட்டுக்களின் பக்கமும் கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்த காலமது. விக்கியிடம் அடிக்கடி நான் கேட்கும் கேள்வி “டிவி பார்க்கலையா விக்கி?”. ”கார்டூன் நெட்வொர்க் சூப்பரா இருக்குன்னு எல்லாரும் பார்க்கறாங்க நீ பார்க்கலையா?”ன்னு கேட்டா, “ஒரு ப்ரோக்ராம் முடிஞ்சதும் அம்மா படிக்க சொல்லிருவாங்க. அரை மணி நேரம் தான் பார்க்க முடியும்”னு அந்த வயதில் ”ப்ரோக்ராம்” என்பதற்கான சரியான அர்த்தத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தவன். ஒரு முறை டிவிஎஸ் சாம்ப்பில் (TVS Champ) சென்று கொண்டிருந்த என்னை அவனது மிதிவண்டியில் போட்டியிட்டு வெற்றி பெற முயன்றவன். ஒல்லியான தேகமாதலால் அவனிடமிருந்த சுறுசுறுப்பு வியப்பிற்குரியது. ”பால்யத்து என்னை” என நான் சொல்வதும் கூட அவனிடம் நான் கவனித்த அந்த சுறுசுறுப்பை எனக்கான அடையாளமாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியாகக் கூட இருக்கலாம். விக்கியிடம் பேசுவதில் கிடைக்கும் விஷயங்களுக்கும் அவனுடைய பெற்றோர்களிடம் அவனைப் பற்றி பேசுவதில் கிடைக்கும் விஷயங்களுக்கும் இருந்த வித்தியாசம் ”தலைமுறை இடைவெளி” என்பதற்கான அர்த்தமாக நான் கருதினேன். இப்படி அவனிடமிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் பல.

நான் மூன்றாமாண்டு கல்லூரி படிப்பு முடித்த தருணம் விக்கியின் குடும்பம் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தது. விக்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் வாரயிறுதி வகுப்புக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் பார்த்து பேசியிருக்கிறேன். அவ்வப்பொழுது அவனது அப்பாவையோ அம்மாவையோ பார்க்க நேரிடுகையில் அவனைப் பற்றிய விசாரணைகளில் விக்கி வளர்ந்து கொண்டிருந்தான். இரு மாதங்களுக்கு முன்பு அவன் அப்பாவை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். நான்கைந்து வருடம் கழித்து அவரைப் பார்த்தேன். தலை நரைத்து கொஞ்சம் வயதானவராக தோன்றினார். அவருடைய விக்கி பற்றி கவலைகளும் வயோதிகம் அடைந்திருந்தது. இப்பொழுது விக்கி இரண்டாமாண்டு பொறியியல் படிப்பதாக கூறினார். விக்கியின் நண்பர்களுடனான ஊர் சுற்றல் பற்றியும், அவனுடைய பேராசிரியர்களின் புகார்களைப் பற்றியும் குறைபட்டு கொண்டிருந்தார். ”பத்தாவது பாசாவானான்னு யோசிச்சோம். எப்படியோ பாசாகிட்டான். பண்ணிரெண்டாவதுல நல்ல மார்க் வாங்குவானான்னு கவலைப் பட்டோம். ஓரளவிற்கு நல்ல மார்க் வாங்கி காலேஜ்ஜும் சேர்ந்திட்டான்” என சொன்னார். இடையிடையே அவனுடைய சாதனைகளையும் அவர் பட்டியலிட்டது விக்கியை அவர் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என்பதனைத் தெளிவு படுத்தியது. விக்கியின் அப்பா பேசிய விதத்திலிருந்து அவரிடம் அவனது எதிர்காலம் பற்றிய நம்பிக்கை முளைத்திருப்பதாக நினைத்துக் கொண்டேன். என்னுடைய அவதானிப்பில் விக்கி கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை அவ்வளவே. பெற்றோர்கள் எப்பொழுதும் கவலைப் பட்டுகொண்டிருக்கும் விதத்தில் பிழைகள் செய்யும் சீரழிந்த சிறுவனல்ல. அவனின் முழு கவனமும் விளையாட்டிலிருந்ததனால் நல்ல மதிப்பெண் பெறாத மாணவனாக அவன் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.

இந்த வாரம், வாரயிறுதி விடுமுறைகளில் நவராத்திரி கொண்டாட கோவில்பட்டி சென்றிருந்தேன். அதிகாலை நான்கு மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் சென்றிறங்கினேன். அப்பாவை அந்த நேரத்தில் எழுப்ப வேண்டாம் என நினைத்து அருகிலிருந்த ஆட்டோக்காரரிடம் விசாரிக்கலானேன். அவர் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு நூற்றைம்பது ரூபாய் கேட்கவே பழைய பேருந்து நிலையம் வரை நடக்கலானேன். புதிய பேருந்து நிலையத்திலிருந்து இளையரசநேந்தல் ரோடு வழியாக நடக்கையில் சாலை எங்கும் விளம்பரத் தட்டிகள். ”கவிஞர் கனிமொழியே, எதிர்காலமே, அஞ்சா நெஞ்சனின் சகோதரியே, நாளைய இந்தியாவே” என விதவிதமாக வாசகங்களைத் தாங்கி நின்று கொண்டிருந்தன. வேலை வாய்ப்பு பயிற்சி முகாமுக்காக கனிமொழி அன்று கோவில்பட்டி வருகிறார் என அறிந்து கொண்டேன். ஒருவாறு ஐந்து மணிக்கு வீட்டை சென்றடைந்தேன். எங்கள் வீடிருந்த பகுதி சண்முக சிகாமணி நகர். அங்கிருக்கும் நாடார் மேல்நிலைப் பள்ளியில் தான் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாம் காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமாயிற்று. ஒலிபெருக்கிகளின் தயவில் முகாமில் கனிமொழி பேசியதை எங்கள் வீட்டிலிருந்தபடியே நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். மேற்கோள்களுடனும் இந்த முறை உத்வேகமிக்க பாடல்களுடன் கனிமொழி நன்றாக உறையாற்றினார். முகாம் மதியம் ஒரு மணியளவில் முடிவுற்றது.

மாலை ஐந்து மணியளவில் எதிர் வீட்டு சிறுவன் செல்வம், முகாமிற்கு வந்த யாரோ ஒருவன் சாலை விபத்தில் இறந்து விட்டதாக தகவல் சொன்னான். என்னால் முடிந்த பச்சாதாப வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு அம்மாவுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சென்றேன். வீட்டிற்கு வரும் பொழுது எங்கள் தெரு முனைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் தான் தெரிந்தது இறந்த அந்த மாணவன் விக்கி என்று. அவனும் அவனுடைய நண்பர்கள் இருவரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது வாகனமொன்று மோதி தலையில் அடிபட்டு சாலையிலேயே விக்கியின் உயிர் பிரிந்திருக்கிறது. மூன்று நபர்கள் ஒரே வாகனத்தில் சென்றிருக்கிறார்கள். அதில் மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டு தலையில் அடிபட்டதனால் விக்கியின் உயிர் பிரிந்திருக்கிறது. தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருந்தவன் இன்று அதே தெரு முனையின் பேசு பொருளாக ஆகியிருந்தான். என்னை அறியாமல் அவனிடம் பேசிய விஷயங்களின் நினைவுகளுடனும் சில கண்ணீர்த்துளிகளுடனும் அன்றைய இரவு கழிந்தது.

விக்கிக்கு இப்பொழுது இருபது வயதிருக்கும். ஒன்பதாவது வகுப்பிலேயே இரு சக்கர வாகனம் ஓட்ட ஆரம்பித்திருந்தவன், கல்லூரி மூன்றாமாண்டு படிக்கையில் வாகனத்தில் சென்றதொன்றும் வியப்பான விஷயமில்லை. ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம் ஒன்பதாம் வகுப்பில் லைசன்ஸ் எனப்படும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டிச் சென்றான். இன்று சாலை விதிகளை மீறி மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்கள். நான் பார்த்த வரையில் கோவில்பட்டியில் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வருவதும், டியூசன் செல்வதும் வழக்கமான விஷயமாகி விட்டது. இந்த வழக்கம் ஒரு துடுக்கான இளைஞனின் உயிரைப் பறித்து விட்டிருக்கிறது. இதில் பள்ளிகளின் கவனமும் தளர்த்தப்பட்டிருக்கின்றன. மாணவர்களும் தினம் மூன்றோ அல்லது நான்கோ டியூசன் செல்கிறார்கள். அவர்களின் உடல் அயர்ச்சியைக் கருதி பெற்றோர்களும் வாகனங்களை வாங்கி கொடுக்கிறார்கள். பள்ளி நிர்வாகங்களும் இதனைக் கண்டு கொள்வதில்லை.

மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் பள்ளியிலேயே கற்பிக்கப் படல் வேண்டும், பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் வகுப்புகள் எடுக்கக் கூடாது, மாணவர்கள் பள்ளிகளுக்கு இரு சக்கர-நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி செல்லக் கூடாது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும். இல்லையெனில் எண்ணற்ற விக்கிகளை இழக்க நேரிடும்.

கோவில்பட்டி திமிர்

கோவில்பட்டி சிறிய கரிசல் நகரம். அங்கேயிருந்து நெறைய படைப்பாளிகள் வந்திருக்காங்க. 1980களின் தொடக்கத்திலேயே அந்தச் சிறிய நகரத்தில் பேர் சொல்லக்கூடிய 20 படைப்பாளிகள் இருந்தனர். கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் என்று பலர் இருந்தனர். இவர்கள் பல்வேறுபட்ட சிந்தனைப் போக்குகளைக் கொண்டிருந்தனர். தேவதச்சன், பிரதீபன், கௌரிசங்கர், க்ருஷி வாத்தியார், அப்பாசாமி, வித்யாசங்கர் போன்றவர்கள் இருந்தனர். பின்னர் சமயவேல், ஜோதிவிநாயகம் போன்றவர்கள் அங்கு வந்தனர்.

இவர்களோடு என்னைப் போன்றவர்கள் எழுத வந்தோம். அது நான் பட்டாளத்திலிருந்து திரும்பிய நேரம். என்மனம் போல கோவில்பட்டி பலவிதமான சிந்தனையோட்டங்களுடன் கூடியதாக இருந்தது. ஒவ்வொரு தெருமுனையிலும் ஒரு சிந்தனைப்போக்கு நின்று அழைத்துக் கொண்டிருந்தது. பிரான்சு நாட்டில்கூட இப்படி இருந்திருக்குமா என்று தெரியாது. `ஜோதிபாசு சலூன்' வாசலில் பால்வண்ணம் போன்றவர்களுடன் ஒரு கூட்டம் இடதுசாரி இலக்கியம் பேசிக்கொண்டிருக்கும். அங்கிருந்து தெற்கு பஜார் முனையில் ஒரு நகைக்கடை வாசலில் தேவதச்சனுடன் ஒரு கூட்டம் ஜி. கிருஷ்ணமூர்த்தியின் உரைகளை அலசிக் கொண்டிருக்கும். அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு தெற்கு பஜாருக்குள் நடந்தால் ஒரு முழு நேர இளம் காதலர் குழு அன்றன்று நடந்த சந்திப்புகள், கடிதப் போக்குவரத்துகள் குறித்து மனம் நடுங்கப் பேசிக்கொண்டிருக்கும். தாஸ்தாயெவ்ஸ்கியின் `வெண்ணிற இரவுகளை' விட்டு ஒருபோதும் வெளிவரத் தயாராக இல்லாத குழு. இவர்களைத் தாண்டி சில தப்படிகள் உள்ள படிக்கட்டுகளில் ஏறி காந்தி மைதானம் வந்தால் அது திறந்தவெளி விவாதக் கூடமாக மாறியிருக்கும். இரவு முழுவதும் அங்கு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும். பல சிந்தனையுள்ளவர்களும் அங்கு கலந்து பேசிக்கொண்டிருப்பார்கள். கோவில்பட்டியில் நான் பழகி வந்த மனிதர்களின் மனநிலை காசு,பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பொதுக்காரியங்களுக்குச் செலவிடுபவர்களாக இருந்தது.

- ச.தமிழ்செல்வன் (http://groups.google.co.in/group/keetru/msg/c4c66bb6cd8cc744)

Friday, October 01, 2010

எந்திரன் - விமர்சனம்

முதல் நாள் முதல் ஷோ பாத்திட்டு வந்து விமர்சனம் எழுதலேனா அதுவும் தலைவர் படத்துக்கு எழுதலேனா நானெல்லாம் சுத்த வேஸ்ட். தலைவர்னு சொல்லிட்டதாலேயே இந்த விமர்சனத்துக்கு ஒருவித சாயல் வந்திருக்கும். அது கண்டிப்பா இருக்கத்தான் செய்யும். ராவோட ராவா 500 கி.மீ பஸ்ல வந்து, ஊர்ல காலடி வச்சது காலை 0230 மணிக்கு. 0700 மணிக்கு முதல் ஷோ. இவ்வளவு மெனக்கெட்டது எல்லாம் அந்த தலைவர்ங்கிற சங்கதிக்காகத்தான். அந்த சாயல் இல்லாம என்னால விமர்சனம் எழுத முடியாது. ஒண்ணு மட்டும் சொல்ல முடியும் தலைவருக்காக மட்டுமே இந்த விமர்சனம் இல்லை.

ஒரு எந்திரத்துக்கு மனித உணர்ச்சிகள் இருக்கலாமா? இருந்தால் என்ன ஆகும்? அப்படின்னெல்லாம் ஒரு வரில படத்தோட கருவ  எழுத முடியாது. படத்தில விஷயம் நிறைய இருக்கு. விஷயமேயில்லாம நிறைய காட்சிகள் இருக்கு. இந்த படத்தை தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான முயற்சியா நான் கருதியதற்கு காரணம் கதைக்களம், அதிலிருக்கும் அறிவியல் பின்புலம், பெரிய பெயர்கள், மற்றும் உலகளவில் இது ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பு. அதனால் தமிழ் சினிமாவின் உலகளாவிய கனவுகளுக்கான முதல் படியாக இந்த படம் இருக்கப்போகிறதென்ற கருத்து வேறு இருந்தது. இப்படி எந்திரன் மூலம் தமிழ் சினிமாவின் எதிர்கால சாத்தியக்கூறுகள் ஏகப்பட்டவை. அறிவியலின் நன்மை தீமை பற்றி மூன்றாம் வகுப்பு முதல் படித்தும் எழுதியும் வருகிறோம். அதி நவீன அறிவியல் படைப்புகளின் சாத்தியங்கள், தேவைகள், வரம்பெல்லைகள், நன்மை தீமைகள், போன்றவற்றை  பாமரனுக்கும் கொண்டு செல்லும் விதமாக எந்திரன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் என்னிடம் இருந்தது. எதிர்பார்ப்புகள் ஒரு 60% பூர்த்தியாகியிருக்கின்றன.

விஞ்ஞானி வசீகரன் ஒரு எந்திரனை உருவாக்குகின்றார். இராணுவத்தில் மனிதர்களுக்கு பதில் எந்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பது வசீகரனின் ஆசை. எந்திரனின் ஆக்கம், தோற்றம் இவையெல்லாம் ஒரு பாடலில் முடிகிறது. நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்கிறது. வசீகரனைப் போலவே இருக்கிறார் எந்திரன். எந்திரனின் ஞானம், குணநலன்கள் பறைசாற்றப் படுகின்றன காட்சிகளில் மசாலாவுடன்.

உதாரணத்திற்கு மொழிக் கணிணியியல் (language processing) என்பது எந்த ஒரு எந்திரனுக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான தொழில்நுட்பம். எந்திரனில் அது சொல்லப்பட்டிருக்கும் விதம் முகம் சுழிக்க வைக்கிறது. ”டிவியைப் போடு” என்று சொன்னதற்கு எந்திரன் டிவியை அலேக்காக தூக்கி கீழே போடுகிறார். ”கீழே போடு” என்பதற்கும் ”போடு” என்பதற்கும் ”வீசு”, ”எறி” என்பனவற்றுக்கும் இருக்கும் வேற்றுமையை எந்திரன் எப்படி விளங்கிக் கொள்கிறான் என்பது ஷங்கருக்கே வெளிச்சம். அதில் “கீழே” என்னும் வார்த்தை உபயோகப்படுத்தப்படவுமில்லை. ஆனால் டிவியைக் கீழே போடுகிறார். அது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நகைச்சுவை என்பதால் இந்த மசாலா.  நம் பேச்சு வழக்கில் இருக்கும் மொழிக்கும் இலக்கண மொழிக்கும் இருக்கும் வேறுபாட்டைப் புரியவைப்பது கூட ஷங்கரின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் நன்கு படமாக்கியிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மசாலா தூவி கெடுத்து விட்டார் ஷங்கர். பின்னர் ஒரு உரையாடலில் ”குத்துன்னா குத்திர்றதா” என்று வசீகரன் கேட்க எந்திரன் “அதுக்கு அது தானே அர்த்தம்” என்று பதிலளிப்பது ரசிக்கும் படியாகவும் இருந்தது நம்பும் படியாகவும் இருந்தது. சந்தானம், கருணாஸ் பேசும் சென்னைத் தமிழ் புரியாமல் விழிக்கும் எந்திரனின் குழப்பமும் இதில் அடங்கும். ஆனால் இந்தக் காட்சிகள் சொல்லும் முக்கியமான அறிவியல் விஷயம் மனித-எந்திர இடைவிளைவு (human-robot interaction). அதன் அறிவியல் விஷயங்கள் சொல்லப்படாமலே விடப்பட்டிருக்கின்றன.

அதே போல் பொருத்தியறிதல் (rule of inference) எந்திரத்தில் எப்படி நடக்கும் என்பது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயம். ”கடவுள் இருக்கிறாரா இல்லையா?” என ஒரு விஞ்ஞானி எந்திரனிடம் கேள்வி கேட்கிறார். எந்திரன் “கடவுள் என்பவர் யார்?” என்று அவரிடம் மறு கேள்வி கேட்கிறான். “நம்மை எல்லாம் படைத்தவர் தான் கடவுள்” என்கிறார் விஞ்ஞானி. “என்னைப் படைத்தவர் வசீகரன். கடவுள் இருக்கிறார்” என்கிறான் எந்திரன். நன்றாக படமாக்கப்பட்ட விஷயமிது. நம்மைப் படைத்தவன் என்று பொருள் கொண்டால் கடவுள் இருக்கிறார் என்பது நல்ல வரையறை. இடையிடையே வசீகரன் சனா காதல். ரெண்டு பாட்டு. வில்லன் விஞ்ஞானி எந்திரனின் “neural schema"வைத் தேடி அலைகிறார். பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்த நபர் ”அப்படின்னா என்னது அத மட்டும் கழட்டி கொடுக்க முடியாதா என்ன” என்று புலம்பிக்கொண்டிருந்தார். அதன் பயன்பாடு என்ன ஏன் அதனை வில்லன் தேடும் மூலப்பொருளாக இருக்கிறது என்பது படமாக்கப்படவில்லை. (Neural schemaன்னா ”நரம்பியல் வலையமைப்புத் திட்டம்” என்று சொல்லலாமா? #டவுட்டு). புத்தகங்களைப் பார்த்தவுடனே அதிலிருக்கும் விஷயங்கள் அனைத்தையும் மனனம் செய்து கொள்வது படமாக்கப்பட வேண்டிய தொழில்நுட்பம். அதை டெலிஃபோன் டைரக்ட்ரியை மனனம் செய்வதாக காட்டி நன்றாக படமாக்கியுமிருந்தார் ஷங்கர். ஆனால் பரீட்சைக்கு பிட் அடிக்கவும் அதை பயன் படுத்துவதாக படமாக்கப்பட்டது வேண்டுமென்றே திணிக்கப்பட்ட மசாலா. நல்ல விஷயங்கள் மட்டும் ஊட்டப்பட்ட எந்திரன், ஐஸ்வர்யா காப்பியடித்து பரீட்சை எழுத ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்?

எந்திரவியலின் விதிகள் என்று ஐசக் அசிமோவ் சொல்லியிருப்பது மூன்று
  1. எந்திரன் மனிதர்களை காயப்படுத்தக்கூடாது. தமது செயலின்மையாலும் மனிதர்களை காயப்படுத்தக்கூடாது.
  2. எந்திரன் மனிதர்களின் கட்டளையைச் செய்ய வேண்டும். அந்த கட்டளைகள் முதல் விதியை மீறாதிருக்க வேண்டும்.
  3. முதல் விதியையும் இரண்டாம் விதியையும் மீறாமல் எந்திரன் தன்னைத் தானே தற்காத்துக்கொள்ளலாம்.
தனது எந்திரனை நாட்டின் சேவைக்காக இராணுவத்திற்கு அனுப்புவதற்காக திட்டமிடுகிறார் வசீகரன். எதிரிகளை அழிக்க பயன்படும் என்பதால் அது முதல் விதியை மீறும்படியாக வடிவமைத்திருக்கிறார். உணர்ச்சி இல்லாத எந்திரனால் மனித குலத்துக்கு ஆபத்து. அதனால் உணர்ச்சியூட்ட முனைகிறார்
வசீகரன். #முதல் பாதி

இரண்டாம் பாதியில் சில சுவாரசியமான விஷயங்களுக்கு ஷங்கர் நம்மை இட்டுச் செல்கிறார். உணர்ச்சியூட்டினால் எந்திரனுக்கு என்னவாகும்? நாலு டூயட், ஐஸ்வர்யா ராய், ரஹ்மானின் பாடல்கள் இவற்றைக் காட்ட கண்டிப்பாக காதல் தேவைப்படுகிறது. அதனால் சேர்க்கப்படுவது மசாலா. எந்திரனும் ஐஸ்வர்யாவைக் காதலிக்கிறார். பாக்யராஜ் ஒரு படத்தில ஒரு காள மாட்ட அடக்கிறதுக்கு பசு மாட்ட முன்னால கொண்டு வந்து நிறுத்துவாரு. இவ்வளவு தான் விஷயம். வசீகரனும் இதையே செய்திருக்கலாம் ஆனால் அங்கு தான் ஆரம்பிக்கிறது ஷங்கரின் கரம் மசாலா காரம். எந்திரனை ஐஸ்வர்யா விரும்பாமல் போவதும், அவர் இராணுவத்திற்கு உதவாமல் போவதும், அதனால் அழிக்கப்படுவதும், வில்லன் கையில் சிக்கி அழிக்கும் விஷயங்கள் சேர்க்கப்படுவதெல்லாம் கதை பில்டப். ஆனால்  எல்லாவற்றுக்கும் தலையாயது எந்திரனே எந்திரனைப் படைக்க ஆரம்பித்தால் என்னவாகும்? ஷங்கர் பிரகாசிப்பது இங்கு தான். அவருக்கும் அதுதான் அவருடைய ஸ்கோரிங் பாயிண்ட் என்று தெரிந்திருக்கிறது. கிராஃபிக்ஸ் உதவியுடன் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அந்த அரை மணி நேரம் படத்திற்கு பெரிய பலம். இந்த கிராஃபிக்ஸ் விஷயங்களுக்காகவே சன் டிவி செய்த மார்க்கெட்டிங் டார்ச்சர்களை மன்னிக்கலாம்.

எந்திரன் என்ன ஆனான். அவனால் வந்த நன்மை தீமைகள் என்ன? #இரண்டாம் பாதி

மேற்சொன்ன இவ்வளவு விஷயங்களும் ஷங்கரின் வழக்கமான தமிழ் சினிமா சுவாரஸ்யங்கள். இவற்றுடன் சேர்ந்திருப்பது ரஜினிகாந்த் என்னும் ஒரு பெரும் புள்ளி. படத்தைக் கொண்டாட வைக்கும் விஷயமும் அதுவே. இது வரை ரஜினிகாந்த் என்னும் ஆளுமை செய்யும் மேனரிசங்கள் எல்லாம் எப்படி ஒருவித கமர்ஷியல் ஹீரோயிசமாக இருந்ததோ எந்திரனுக்குப் பிறகு அவற்றுக்கு ஒரு அறிவியல் பின்புலம் வந்து சேர்கிறது. தலைவருக்கு டான்ஸ் ஆடத்தெரியாது என்று சொன்னவர்களுக்கு எந்திரனில் கிராஃபிக்ஸ் பதிலடி காத்திருக்கிறது. மற்ற ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்த பிறகு தலைவர் பஞ்ச் டயலாக் பேசுவதைக் குறைத்துவிட்டார். ஆனால் அவரது மேனரிசங்கள் லாஜிக் வழுக்கல்களாக இருந்த காலம் போய் இப்பொழுது அவற்றுக்கு நம்பத்தகுந்த பின்புலன்கள் சேர்க்கப்படுகின்றன. கவனிக்கப்பட வேண்டிய நிராகரிக்க முடியாத முன்னேற்றம் இது. விஜயகாந்த் செய்தால் காமெடி ரஜினிகாந்த் செய்தால் ஹீரோயிசமா என்று நிறைய பேர் கேட்கின்றனர். எந்திரன் தான் பதில் என்று அவர்களுக்கெல்லாம் தைரியமாகச் சொல்லலாம். வசீகரன் சனாவைக் காப்பாற்ற மண் தூவி விட்டு ஓடுவதும், சிட்டி எந்திரன் அடித்து தூள் பண்ணுவதும் இதற்கு சாட்சி. சனாவின் முத்தம் பெற்ற சிட்டியின் ரியாக்‌ஷன், சிட்டியிடம் பொறாமை கொள்ளும் வசீகரனின் ரியாக்‌ஷன், குழந்தையைக் கொஞ்சும் சிட்டி என தலைவரின் எமோஷனல் முகங்கள் படமெங்கும். தலைவர் நடித்திருக்கிறார். இரயில் வண்டியின் பக்கவாட்டில் ஓடுவதும், சண்டையின் போது ஒரு வாசல் வழியாக தாவி மறு வாசல் வழியாக வந்து அடிப்பதும், அனகோண்டா, கோளம், ட்ரில்லர், டவர் என்று வேறு வேறு தோற்றங்களில் தன்னை மாற்றி சுடுவதும் விஷுவல் ட்ரீட். அதிலும் எந்திரன் உருவம் பெற்றதும், ஸ்டைலாக நடப்பது, வசீகரன் கண்ணாடியை வழக்கம் போல் ஸ்டைலாக சுழற்றி எந்திரன் கண்ணில் மாட்ட முடியாமல் திணறுவது, எல்லாவற்றுக்கும் மேல் எந்திரன் சிரிக்கும் அந்த ட்ரேட்மார்க் வில்லத்தன சிரிப்பு.... போய் படத்த பாருங்கப்பா... ரஜினி அன்லிமிடட். ரஜினி ரசிகனுக்கு தேவையான ஒவ்வொரு விஷயமும் அழகாகத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரஜினி ரசிகனும் கண்டிப்பாக குறைந்தது மூணு தடவை படத்தைப் பார்க்கலாம். நான் பார்த்ததும் இந்த ஒரு பத்திக்காகவே தான் ;)

ஐஸ்வர்யா பாடல் காட்சிகளில் நன்றாக ஆடியிருக்கிறார். மத்தபடி அவருக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவு. சிட்டியிடம் காதல் பற்றி விளக்கம் கூறும் காட்சிகளில் கொஞ்சம் நடித்திருக்கிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானத்தை இதில் தேடினாலும் கிடைக்கமாட்டார். கருணாஸுக்கும் அதே நிலைமை. டானி டெங்சோம்ப்பா நல்ல தேர்வு. அலட்டாமல் வந்து போயிருக்கிறார். ரஹ்மானின் இசையை பாடல்களிலும் கிராஃபிக்ஸ் காட்சிகளிலும் ரசிக்கலாம். ஆனால் ரஜினிகாந்த், கிராஃபிக்ஸ் இவற்றைத் தாண்டி ரஹ்மானைக் கொஞ்சம் தேடித் தேடித்தான் கேட்க வேண்டியிருக்கிறது. விடுபட்ட விஷயங்களும் எந்திரனில் அதிகம். எப்படி உணர்ச்சிகள் எந்திரனில் சென்று சேர்கின்றன? (harmone simulations package மட்டும் போதுமா?), தொடு உணர்வியல் (haptic technology) போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர் போன்றவற்றை படமாக்கியிருக்கலாம்.

எந்திரவியல் என்பது நவீன அறிவியலின் மகத்தான விஷயம். அதன் வரம்பெல்லைகளும், நன்மை தீமைகளும் மசாலாவோடு படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதன் தேவைகளையும், சாத்தியங்களையும் ஷங்கர் நன்கு கையாளாமல் விட்டுவிட்டார். அல்லது அவை படமாக்கப்படவில்லை. படத்தில் சொல்லியிருக்கும் அறிவியல் விஷயங்களை விடவும் படத்துக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் அறிவியல் விஷயங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதியவை. ஆங்கில ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே பார்த்திருந்த கிராஃபிக்ஸ் தமிழ் சினிமாவுக்கு முதன் முறையாக வாய்த்திருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். எங்கெல்லாம் மசாலா வாசம் நமக்கு தெரிகிறதோ அங்கெல்லாம் படம் வெறுமையாக இருக்கிறது. அறிவியல் விஷயங்களைச் சொல்வதால் நம்புவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் தலைவர் என்னும் ஒற்றை வார்த்தையில் படம் நகர்கிறது. கதை நன்றாக கையாளப்பட்டிருக்கிறது. அதன் அறிவியல் பின்புலத்தில் தான் ஷங்கர் தமது மசாலாவை அதிகமாக தூவியிருக்கிறார். ஆனால் அவருடன் இருந்த பெரும் பெயர்கள் அவரை காப்பாற்றியிருக்கின்றன. நல்ல தரமான படம் என்று எந்திரனைக் கண்டிப்பாகச் சொல்ல முடியாது. மசாலாவுடன் கூடிய ஒரு நல்ல அறிவியல் பின்புலம் அதற்கிருக்கிறது.

படம் பாத்திட்டு வந்ததும் அம்மா சொன்னது ”எந்திரன் புண்ணியத்தில காலைல வீட்ல எல்லாருமே சீக்கிரம் எந்திச்சு குளியல் போட்டாச்சு”.

பண்டிகை நேரம்ல அப்படித்தான் இருக்கும்.