Wednesday, August 31, 2005

வெட்டிக்கத - வித்தியாச யோசனைகள்

  • திடீரென்று குள்ளராகிவிட்டால் என்ன நடக்கும்?
  • வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் தூரம் ஒரு கிலோமீட்டர் தான் என்று மாறிவிட்டால்?
  • பூமி என்பது மண்ணால் ஆகாமல் உடைபடாத இரும்பால் ஆகியிருந்தால்?
  • ரஜினி என்பவர் கண்டெக்டராகவே இருந்திருந்தால்? (இது கொஞ்சம் ஓவர்.... இருந்தாலும் இது ரஜினி சீஸன் என்பதால் இந்த கேள்வி ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது)

மேலே உள்ள விஷயங்கள் எல்லாம் நடந்தால் !! நினைச்சுப் பாருங்க. ஒரு வித்தியாசமான உலகத்தில உலாவுறத போல இருக்குதுல்ல. கீழயிருக்கிற படங்கள பாருங்க இன்னும் விசேஷமா நிறைய விஷயங்கள் தோணும்.

சும்மாவாவது எதையாச்சும் யோசிக்கறது ரொம்ப நல்ல விஷயம். அதுவும் சம்பந்தமில்லாத நடக்கமுடியாத விஷயமாக இருந்தா அந்த யோசனைகள் சில சமயம் சந்தோஷத்தைத் தருவதுண்டு.

அந்நியன் படத்தில வர்ற சார்லி மாதிரி தூங்கறதும், தூங்கியதனால களைப்பாவதும், பின்பு தூங்குவதும் ஒரு வகையில் இந்த மாதிரி யோசனையால் தான் (அடிக்க வராதீங்க....சில சமயம்தான் இந்த மாதிரியான யோசனைகள் இன்பம் தருவதுண்டு). மத்தவங்களுக்கு துன்பம் தராதவரை நம்ம யோசனைகளெல்லாம் நல்லவைதான் (அட!! இன்பம் தர முடியலேன்னா கூட). "லூசாப்பா நீ?"ன்னு பிதாமகன் படத்தில லைலா மேடம் கேட்கிற மாதிரி நீங்களும் கேட்கனும்னு நினைக்கிறீங்களா? சரி சரி விடுங்க சொல்ல வந்ததை சொல்றேன்.

இப்படியாக தேவையில்லாததைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும் பொழுது திடீரென உலகம் அழிஞ்சு போச்சினா அடுத்து வர்ற ஜெனரேஷனுக்கு என்னத்த விட்டுட்டுப் போறோம்னு யோசிச்சிட்டிருந்தேன். (இப்போ தெரிஞ்சு போச்சு, கேட்டு புண்ணியமில்ல நீ சரியான லூசு தான்!) முன் காலத்தில அத உபயோகிச்சாங்க இத உபயோகிச்சாங்கன்னு நிறைய சொல்றாங்க. எல்லாத்துக்கும் அகழ்வாராய்ச்சி, வரலாற்று சுவடுகள் அது இதுன்னு சாட்சிகள் இருக்கின்றன. இப்போ ஒருவேளை நாம இருக்கிற உலகம் அழிஞ்சு போச்சுன்னு வச்சுக்கோங்க அப்போ நாம உபயோகப்படுத்துக்கிட்டிருந்த (உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிற) இந்த செல்போன், டிவி, விமானங்கள், நாம வானத்தில நிறுவியிருக்கிற அந்த செயற்கைக்கோள்கள் என நம்முடைய கண்டுபிடிப்புகள் எல்லாமே அடுத்து இந்த உலகத்தில வாழப்போறவங்களுக்கு தெரியாமப் போயிரும்ல... (வந்துட்டாருல்ல லார்டு லபக்கு தாஸூ)

அப்ப நாம உபயோகப்படுத்திக்கிட்டிருக்கிற இந்த அரிய கண்டுபிடிப்புகளை எல்லாம் எப்படி கட்டி காக்க முடியும்? எல்லாத்தையும் மண்ணுல போட்டு புதைச்சிரலாமா? (ஏண்டா ! அதுக்கா செயற்கைக்கோள்கள கண்டுபிடிச்சோம்னு நம்ம சயிண்டிஸ்டுங்க எல்லாம் சண்டை பிடிச்சிராம...) வேற என்னவெல்லாம் செய்யலாம்? (அவரவர் ஐடியாக்களைப் பின்னூட்டமிடலாம். நல்ல தரமான ஐடியாவுக்கு நம்ம முகமூடி சார் பரிசு வழங்குவார்...). அவற்றையெல்லாம் வருங்காலத்துக்கு எப்படி பாதுகாப்பது என்பது எனக்கு தோணவே மாட்டேங்குது. (எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் ஹி ஹி ஹி!!! ) நீங்களும் முடிஞ்சா முயற்சி செஞ்சு மன்னிக்கவும் யோசிச்சுப் பாருங்க. கேட்க வந்தத கேட்டாச்சு இப்பத்தான் ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு.

இந்த பதிவ எழுதிக்கிட்டிருக்கும்பொழுது மின்னஞ்சலில் வந்த துணுக்கு !!

ஒரு தடவ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் & இந்திய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில சண்டை வந்ததாம்.

அப்போ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 50 அடி தோண்டுறாங்க. செம்பு கம்பி ஒண்ணு கிடைக்குது. இத சாக்காய் வச்சுகிட்டு 25,000 ஆண்டு முன்னரே தங்கள் நாட்டில் தொலைபேசிகள் இருந்ததாக அறிவிக்கிறாங்க.

இதைக்கேட்டுட்டு ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 100 அடி தோண்டுறாங்க. சின்ன கண்ணாடி துண்டு கிடைக்குது. உடனே தங்கள் நாட்டில் 35,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒளி இழை (fibre optic) உபயோகத்தில் இருந்ததாக அறிவிக்கிறாங்க.

நம்ம இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு கோபம். உடனே பூமியில் 150 அடி தோண்டுறாங்க. எதுவும் கிடைக்கல. விடாம இன்னும் ஒரு 50 அடி தோண்டுறாங்க அப்பவும் எதுவுமே கிடைக்கல. உடனே இந்தியாவுல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கம்பியில்லா இணைப்புகள் (wireless connections) இருந்ததாக அறிவிக்கிறாங்க.... எப்படி ??

படங்கள்



Tuesday, August 30, 2005

சிற்றன்பங்கள்

சென்ற மாதம் ஊருக்கு விடுமுறையில் சென்று வந்த பொழுது பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்தேறின. பணத்தைச் சுற்றி உலகம் சுற்றிக் கொண்டே தான் இருக்கும். ஆனா பாருங்க சின்ன சின்ன விஷயங்கள் கூட அவ்வப்போது நமக்கு இன்பம் தருவதுண்டு. அப்படி நிறைய விஷயங்கள் எனக்கு தோன்றின.

சாலையில் போகும் போது வெகு அருகில் பறக்கும் சிட்டுக்குருவி. ஷூ பாலிஷ் செய்து விட்டு அதிகம் கொடுத்தாலும் வேண்டாமென்று நேர்மையுடன் அந்த சாலையோர தொழிலாளி வாங்கும் இரண்டு ரூபாய். "எப்படி சார் இருக்கீங்க?" ஒரு தடவை நின்று பேசியதற்க்காக தினமும் கடந்து செல்லும் பொழுது விசாரிக்கும் டீக்கடைக்காரன். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் இருக்கும் இன்பங்கள் பல. நாம் இப்படி யாருக்காவது இன்பம் தருவதுண்டா என்று எனக்கும் அடிக்கடி தோன்றும். சந்தேகத்துடன் இதைப் போய் யாரிடம் கேட்பது என்று எனக்குள் நானே மறைத்துக் கொள்வேன். ஆனால் இவை போல சின்ன சின்ன விஷயங்கள் தான் நமது அன்றாட பழக்க வழக்கங்களைத் தீர்மானம் செய்கின்றன. பணத்தை உதாசீனப்படுத்திவிட்டு கொஞ்சம் பாசத்தையும் கொஞ்சம் பழக்கத்தையும் முதலீடாக கொண்டு நடைபோடுவது தான் இத்தகைய உறவுகள்.

ஜார்ஜ் லோரிமெர் என்னும் ஒரு ஆங்கில பத்திரிக்கையாளர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

It's good to have money and the things that money can buy, but it's good, too, to check up once in a while and make sure that you haven't lost the things that money can't buy.
மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு பணம் தான். ஆனால் அது வெறும் கண்டுபிடிப்பே. மனிதன் மனிதனாக இருப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனா இன்றைய தேதியில் ஒவ்வொரு மனிதனின் மற்ற குணாதிசயங்களை நிர்ணயிப்பது இந்த பணம் தான். எப்பொழுது பணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அல்லது உதாசீனப்படுத்தப்பட்டு மனிதனின் மற்ற குணநலன்கள் வெளிப்படுகிறதோ, அது மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாக இருக்கும் பொழுது அதில் நெகிழ்வும் அன்புமே மேலோங்கி நிற்கிறது.

அப்பாவிடம் பணம் வாங்கிச் செல்லும் மகன், மகன் கேட்பதற்கு முன்னரே அவனது சட்டைப் பாக்கெட்டில் பணத்தை வைக்கும் அப்பா, உடன் வசிக்கும் நண்பனை விட்டுவிட்டு சாப்பிடாமல் இருக்கும் கல்லூரி மாணவன் என நமக்கு இன்பம் அளித்த அளித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு விஷயமும் பணத்தை தவிர்த்து நமது குணநலன்களை வெளிப்படுத்திய ஒன்றாகவே இருக்கிறது. கல்லூரி வாழ்க்கையோடு இத்தகைய நல்ல விஷயங்களும் முடிந்து போவதும் பணத்தாலே தான்.

மகனிடம் பணம் கேட்க தயங்கும் அப்பா, பணம் கொடுத்தால் அப்பா வாங்குவாரோ மாட்டாரோ என தவிக்கும் மகன், நண்பனிடம் பணம் கேட்கலாமா கூடாதா என யோசிக்கும் அதே கல்லூரி தோழன் என நாட்கள் செல்ல செல்ல பணத்தின் வலிமை கூடி விடுகிறது. அதனால் எது நடக்க வேண்டுமோ அது நடக்காமல் போய் விடுகிறது. விளைவு விரிசல் சிக்கல் என அனைத்து பிரச்சனைகளும் வந்து சேர்கின்றன.

Henry van Dyke என்னும் ஆங்கில கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்

There is a loftier ambition than merely to stand high in the world. It is to stoop down and lift mankind a little higher.
உண்மை தானே. சிற்றன்பங்கள் மிக முக்கியமானவை அவை பணத்தை ஒதுக்குவதால் !!

Wednesday, August 24, 2005

தமிழக கல்வி முறை மாற்றம் - ஒரு அலசல்

இன்றைய இந்து நாளிதழில் +2 தேர்வின் மதிப்பீட்டு முறை மாற்றத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. (சுட்டுக)

நடிகர் ரஜினிகாந்தின் "சிவாஜி" பட உரிமைகள் 50 கோடிக்கு விற்கப்பட்ட செய்தி பரவிய அளவு இந்த செய்தி அதிவேகமாக பரவவில்லை. இந்து நாளிதழில் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் மாணவர்களின் அறிவுத்திறன், புரிதல், கற்றதை பயன்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பொருத்தே அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். (Different weightages for knowledge, understanding and applications)

'தி இந்து' வினாக்களின் தன்மையைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது...

  • Questions to be a mix of problems with different difficulty levels
  • Learning objectives to be evaluated using different types of questions across each chapter of the textbook and syllabus
  • Science and mathematics to have 60 % easy questions, 30 % with average level of difficulty and 10% will be very difficult

பாடத்திட்ட மாற்றத்தோடு (syllabus change) தமிழக அரசு தேர்வு மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டு வர முனைந்திருக்கிறது. இம்முறையில் மாணவர்களின் கருத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே முறை தான் மத்திய அரசின் சி.பி.எஸ்.சி தேர்வு மதிப்பீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சி.பி.எஸ்.சி தேர்வு முறையும் அதன் மதிப்பீட்டு முறையும் பிரபலமான ஒன்று ! கடினமான ஒன்று !. அதன் கடுமையைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு இவ்வளவு நாள் அந்த மதிப்பீட்டு முறை ஒத்திப்போட்டு வந்திருக்க வேண்டும். இன்று பாடத்திட்ட மாற்றம் என்பது கட்டயாகமாகிவிட்ட பிறகு மதிப்பீட்டு முறையும் கட்டாயமாகிவிட்டது. கட்டாயத்தின் பேரில் வந்தாலும் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

இவ்வளவு நாள் இருந்த தேர்வு முறையும் மதிப்பீட்டு முறையும் மாணவர்களின் மனப்பாடத் திறனுக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்த மாற்றம் அதை உடைத்தெறியும் என்பது உறுதி. வினாக்களும் அவற்றின் கடின நிலைக்கேற்ப மாற்றியமைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு சராசரி மாணவன் தனது மனப்பாடத்திறனின் மூலம் 60% மதிப்பெண்களை எளிதாக வாங்கலாம் ஆனால் ஏனைய மாணவர்களுடன் போட்டியிட மீதமுள்ள 40% மதிப்பெண்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மொத்தமுள்ள 150 மதிப்பெண்களில் வேதியியலிலும் இயற்பியலிலும் 50 மதிப்பெண்கள் ஒரு வரி வினாக்களுக்குரியதாக இருக்கும். மேலும் ஒளிவழிக் குறி உணர்வி (optical mark reader (OMR)) விடைத்தாள்களும் முன்மொழியப்பட்டிருக்கின்றன.

இத்தகைய தேர்வு முறை, பாடமுறை மற்றும் மதிப்பீட்டு முறை மாற்றங்கள் மாணவர்களின் ஆளுமையையும் அறிவு திறனையும் வளர்க்க பெரிதும் உதவும். தமிழகத்தில் பலரும் எதிர்பார்த்த அந்த "அடிப்படை அறிவும்" அந்த அறிவு சார்ந்த கல்வி முறை மாற்றத்திற்கு இது ஒரு முன்னோடியாக அமையும். கிராமப்புற மாணவர்களுக்கு இந்த மாற்றம் கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம் அப்படியிருப்பின் அடுத்த வருட தேர்வில் இந்த குறை களையப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த மாற்றம் முக்கியமான ஒன்று. ஏற்கனவே தமிழகம் இடஒதுக்கீட்டு முறையில் இந்திய அளவில் புரட்சி செய்து வரும் வேளையில் இது தமிழக கல்வி முறையில் மேலும் ஒரு மைல்கல்லாகவே வருங்காலத்தில் உணரப்படும்.

Tuesday, August 23, 2005

மோகன் பாடல்கள்

கோவில்பட்டியில் எங்கள் தெரு கொஞ்சம் ரசனையானது என்று தான் கூற வேண்டும். காலையில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் டேப்ரிக்கார்டர் தான் முதலில் முழித்துக்கொள்ளும். எங்கள் வீட்டிலிருந்து இடதுபுறம் மூன்று வீடு தள்ளி லாரி டிரைவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். எங்கள் வீட்டின் எதிர்புறம் ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் வசித்து வந்தார். ஒரு பத்து வீடு வலதுபுறம் தாண்டினால் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை (கோவில்பட்டி தீப்பட்டி தொழிற்சாலைகளாலும் பிரபலமான ஊர்). இப்படியாக விடுமுறை நாட்களிலும் காலை வேளைகளிலும் சினிமா பாடல்கள் கேட்ட வண்ணம் இருக்கும்.

ஏ.ஆர்.ரகுமான் இளைஞர்களைக் கவர்ந்த அளவு இவர்களைப் போன்ற சினிமா பாடல் ரசிகர்களைக் கவரவில்லை என்று தான் கூற வேண்டும். அதனாலேயே எப்பொழுதும் இவர்களிடங்களிலிருந்து 70 80களின் பாடல்கள்தான் அநேகமாக கேட்கும். எண்பதுகளின் பாடல்கள் என்றால் அவை முற்றிலுமாக திரு.இளையராஜா அவர்களின் பாடல்களாகத்தான் இருக்கும். அதிலும் மோகன் அவர்கள் நடித்த திரைப்படப் பாடல்கள் அதிகமாக இருக்கும். எனக்குப் பிடித்தவை ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் தான் ஆனாலும் தூக்கம் வரும் நேரங்களில் இளையராஜாவைக் கேட்பது போல ஏ.ஆர்.ரகுமானைக் கேட்க முடிவதில்லை.

இன்றைய இளைஞர்களின் ஒரு ஆச்சர்யமான மனோநிலையை அவர்களின் சினிமா பாடல் விருப்பங்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஜாலியான நேரங்களில் ஏ.ஆர்.ரகுமானையும் சோகமான நேரங்களிலும் தனிமையான நேரங்களிலும் இளையராஜாவையும் கேட்கிறார்கள். சொகமான நேரங்களில் மோகன் பாடல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஏன் இந்த முரண்பாடு? அப்படியென்ன இருக்கின்றது அந்த "மோகன்" பாடல்களில்? அடிக்கடி நான் இப்படி நினைப்பதுண்டு அதனாலேயே மோகன் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன். இன்று நானும் அந்த பாடல்களுக்கு அடிமை.

தனிமையான நேரங்களிலும் சோகமான நேரங்களிலும் ஒருவித பரிவை அந்த பாடல்கள் தாங்கி நிற்கின்றன. இதனாலேயே பல சமயங்களில் நான் இந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்கியிருக்கிறேன். என்னையும் அறியாமல் நடந்தது இது. ஒரு வேளை அந்த மனதை வருடும் இசையை இளையராஜா எளிதாக தருகிறார் போல. ஒரு "சங்கீத மேகம்", ஒரு "நிலாவே வா", ஒரு "தேனே தென்பாண்டி மீனே" கேட்கும் போது உணரும் அந்த பரிவு "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு" கேட்கும் போது எனக்கு கிடைப்பதில்லை. (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)

பலரிடம் இதைப் பற்றி நான் விவாதிப்பதுண்டு. மோகன் பாடல்களில் ஒருவித காதல் உணர்வு இளையோடும் அதுவும் இந்த கால இளைஞர்களின் உணர்வும் ஒத்துப்போகிறது அதனாலேயே அந்த பாடல்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில விவாதங்களில் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காதலிப்பவர்கள் மட்டுமல்ல காதலில் விழாதவர்கள் கூட மோகன் பாடல்களைப் பெரிதும் விரும்புகிறார்கள். என்ன காரணமென்று கேட்டால் எனக்கு ஏற்பட்ட அதே பரிவும் ஆறுதலும் அவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. அதே நண்பர்கள் சந்தோஷமான நேரங்களில் "ஒரு அரபிக்கடலோரம்" "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு" என வித்தியாசப்படுவதுமுண்டு.

முடிவாக எனக்கு கிடைத்ததெல்லாம் மோகன் பாடல்கள் பொதுவாகவே நெஞ்சை வருடும் பாடல்களாக இருக்கின்றன. ஒருவித பரிவும் பாசமும் அவைகளில் உணரப்படுகின்றது. இதுவே அந்த பாடல்கள் இன்றளவும் நிலைத்திருக்கக் காரணம். அவற்றை காதல் உணர்வு மிகுந்தவை என்று கூறி ஒதுக்க முடிவதில்லை இனியும் ஒதுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

Tuesday, August 16, 2005

பட்டம்

பாஞ்சிப்பாயற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்னு சூப்பர் ஸ்டாரூ பாடினாரோ (SPBதான் பாடினாருன்னு யாராவது சொன்னா சாரி மன்னிச்சிருங்க) இல்லையோ ஆரம்பிச்சது வினை.

பட்டம் விடறது என்பது எனக்கு ஒரு நெடுநாளைய கனவு. மிக உயரத்தில் பறக்கும் வண்ண வண்ண பட்டங்கள் வானத்தில் ஒரு கலர் காக்கையைப் போல தெரியும். சின்ன வயதில் பட்டங்களையும், பட்டம் விடுபவரையும் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் பட்டம் விடும் 'தொழில்நுட்ப' அறிவை அந்த வயதில் பெற முனைந்ததில்லை. பத்தாம் வகுப்பு வந்ததுமே எல்லோருக்கும் வருவது போல எனக்கும் "பட்டக்" கனவு வந்து விட்டது. பிறகென்ன லேட்டஸ்ட் பட்டக்கனவில் அந்த காகித தொழில்நுட்ப தேடல் முற்றிலுமாக மறந்துவிட்டது. தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் பட்டங்கள் பிரபலம். வட இந்தியாவில் (டெல்லி அருகே நொய்டா) வேலை கிடைத்ததனாலோ என்னவோ மீண்டும் அந்த தேடல் ஆட்கொண்டது. எனினும் வேலை கிடைத்து இரண்டு வருமாகியும் நேற்று வரை அந்த முயற்சியில் ஈடுபடாமலே இருந்தேன். சுதந்திர தினத்தன்று பட்டம் விடுவதென்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த வழக்கம். பழைய பழக்கமாக இருந்தாலும் இப்பொழுதெல்லாம் வட இந்தியாவில் காற்றடி காலங்களில் பட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் எனக்கு ஒரு தெம்பும் நம்பிக்கையும் பிறந்தது. மேலும் இந்த சீஸனில் நமக்கு மேலும் ஒரு நன்மையும் இருக்கிறது, பட்டங்கள் செய்யும் தொழில்நுட்ப அறிவு தேவைப்படுவதில்லை ஏனெனில் அவை ரெடிமேடாக இங்கு கிடைக்கின்றன.

சரி முயற்சி திருவினையாக்கும் என நினைத்துக்கொண்டே ஒரு ஐந்து பட்டங்களும் இரண்டு நூல்கண்டுகளையும் ஞாயிறன்றே வாங்கிக் கொண்டேன். முதல் முறையாகையால் ஐந்து பட்டங்கள் வாங்கினேன். சின்ன சின்ன பொடுசுகளே விடுது நாம விடறதுக்கென்ன என ஒருவித செருக்கும் கூடவே இருந்தது. மாலை நான்கு மணியளவில் எங்கள் (நானும் என்னுடன் வசிக்கும் நண்பர்களும்) பட்டப் போராட்டம் துவங்கியது. பட்டத்தில் எங்கெங்கு நூல் கோர்க்க வேண்டும் எவ்வாறு முடிச்சிட வேண்டும் என்பது தெரியாமலேயே முழித்துக்கொண்டிருந்தோம். மாடியில் வைத்து ஆராய்ச்சி செய்ததன் பலன் எங்கள் அறிவு வெட்ட வெளிச்சமாகியது. பக்கத்து வீட்டுக்காரர் பட்டப்படிப்பிலும் மனிதவியலிலும் Phd வாங்கியிருக்க வேண்டும். எங்கள் பிரச்சனையைப் புரிந்து கொண்டவராக எங்களுக்கு உதவ முன்வந்தார். மாடி விட்டு மாடி தாவி வந்து (குரங்கியலிலும் Phd முடித்திருப்பார் போல) நாங்கள் முடிச்சிட்டு வைத்திருந்த பட்டத்தை வாங்கி பார்த்தார். பார்த்ததும் ஒரு சிரிப்பு சிரித்தாரே அதிலேயே எங்களுக்கும் அவருக்கும் தெரிந்து விட்டது எங்களின் பண் "பட்ட" அறிவு. பின்னர் எங்களின் முடிச்சுக்களை வெட்டியெறிந்து அவரது கைத்திறனைக் காட்ட ஆரம்பித்தார். முதல் பட்டம் ரெடி.

சரி எப்படியும் LIC பில்டிங் உயரத்திற்க்காவது பட்டம் விட்டுவிட வேண்டும் என்ற தீராத ஆவலில் வேகமாக விளையாட்டை ஆரம்பித்தோம். பட்டம் சும்மா நாலு சுற்றுக்கள் காற்றில் சுற்றி எங்கள் வாட்டர் டேங்க் உயரத்திற்கு பறந்து விட்டு பிறந்த இடத்திற்கே திரும்பி வந்து விழுந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் சிரிப்பு இப்பொழுது கொஞ்சம் சிறப்பாகவே இருந்தது. வந்தார் நூலை ரெண்டு சுண்டு சுண்டினார் ஆட்டினார் இழுத்தார் பட்டம் பறக்க ஆரம்பித்தது. முதன் முறையாக எங்கள் தொழில்நுட்பம் வெற்றி பெற்றதில் எங்களுக்கும் சந்தோஷம் தான். ஆனால் எங்கள் முயற்சியில் அது நடைபெறவில்லை என்பது ஒரு சிறு குறையாகவே பட்டது. அதனால் ஒரு திமிருடன் அவர் கையிலிருந்த நூலை வாங்கி நான் ரெண்டு சுண்டு சுண்டினேன். பட்டத்திற்கு திமிர் பிடித்தவர்களைப் பிடிக்காது போலும் உடனே அது கீழே இறங்க ஆரம்பித்தது. திமிர் இருந்தாலும் பட்ட அறிவு இல்லாமலிருந்தாலும் முயற்சிகளில் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம் என்பது அப்பொழுது தெளிவாக புரிந்தது. மீண்டும் மிஷன் பக்கத்து மாடிக்காரர் கைக்கு மாறியது. மீண்டும் அவர் அவரது ஆளுமையை நிலைநாட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இந்த முறை கொஞ்சம் தெளிவாக அவரது செயல்திறனை கவனித்தேன். அவரும் எங்கள் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவராக எங்களிடம் நூலை ஒப்படைத்தார். இந்த முறை சிறிது நேரம் என்னால் தாக்கு பிடிக்க முடிந்தது.

இரண்டு நிமிடம் என் கை வன்மை தெரிந்தது (கண்டிப்பாக LIC பில்டிங் உயரம் பறந்திருக்கும் என்பது என் நம்பிக்கை). அதற்குள்ளாக எங்கிருந்தோ ஒருவன் எங்கள் பட்டத்துடன் வந்த மோதலானான். விளைவு நூல் மட்டும் எங்கள் கையில் இருந்தது பட்டம் அறுபட்ட நூலுடன் எங்கள் கண் முன்னே கீழிறங்கிக் கொண்டிருந்தது. முதல் முயற்சியின் பலன் புஸ்வானமானது வருத்தமாக இருந்தது. அப்பொழுதுதான் பட்டம் விடுவதற்கு சில திட்டங்களையும் வகுக்க வேண்டும் எப்பொழுது அடுத்தவரை சீண்டலாம் எப்பொழுது ஜகா வாங்க வேண்டும் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கைவசம் ஐந்து ஆராய்ச்சிகளுக்கு உபகரணங்களிருந்ததால் வருத்தம் அவ்வளவாக எங்களை ஆட்கொள்ளவில்லை. அடுத்த முயற்சி ஆரம்பமானது. இந்த முறை வாட்டர் டேங்கைத் தாண்டி என்னாலேயே பட்டத்தைப் பறக்க விட முடிந்தது. ஆனாலும் LIC பில்டிங் உயரம் எட்டாததாகவே இருந்தது. எப்பொழுது நூல் விட வேண்டும் எப்பொழுது நூலை இழுக்க வேண்டும் என்பது விளங்காததாகவே இருந்தது. மணி ஆறை நெருங்கி விட்டிருக்கவே நாங்களும் எங்கள் முயற்சியைப் பின்பொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என கீழிறங்கி வந்து விட்டோம்.

இன்னும் மெஸேஜ் சர்வீஸ், மாஞ்சா போடுவது போன்ற விஷயங்கள் இருக்கின்றனவாம். இன்று முயன்று பார்க்க வேண்டும். இன்று முழித்ததுமே பட்ட ஆவல் வந்து தொற்றிக் கொண்டது. எப்படியும் எல்லாரையும் விட சிறப்பாக பட்டம் விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். தென்கச்சி கோ.சுவாமிநாதனும் சொல்லிக்கொண்டிருந்தார் "என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை ! என்னால் மட்டுமே முடியுமென்பது ஆணவம்". நேற்று வரை எனக்கிருந்தது ஆணவம் இன்று எனக்குள்ளிருப்பது தன்னம்பிக்கை. எப்படியும் ஜெயித்து விடலாம் பின்பு நானும் பாடலாம் "பாஞ்சிப்பாயற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்".

பட்டப்படிப்பில் தெரிந்து கொண்டவை

  • தெரியாத காரியத்தை தெரிந்து கொள்ள நினைப்பது சிறந்தது.
  • தெரியாத காரியத்தை செய்யும் முன்பு முழு தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்
  • சின்ன சின்ன பொடுசுகளே சில சமயம் பெரியவர்கள் செய்ய முடியாத காரியங்களைச் சுலபமாக செய்து விடுவார்கள். மூர்த்திதான் சிறியது.
  • திட்டங்கள் வகுப்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. இல்லையென்றால் வெற்றியின் முழு சுவையை அனுபவிக்க முடியாது.
  • வெற்றிக்கென ஒரு எல்லையை நாமே வகுத்துக் கொள்ள வேண்டும். ("Everyone can't reach moon and everyone shouldn't rely on simple accomplishments")
  • காலை நேரத்தில் தென்கச்சி கோ.சுவாமிநாதனை கேட்பது ஒரு நல்ல விஷயம். தாத்தா கதை சொல்வது போல் அழகான கதைகளை சொல்கிறார்.
  • குரங்கியலிலும் Phd முடித்தால் நமக்கு என்றைக்கேனும் உதவப் போவது உறுதி