Thursday, November 26, 2009

வேட்டைக்காரனும் மொழிமாற்றமும்

வேட்டைக்காரன் படத்தைப் பற்றி தினம் ஒரு குறுஞ்செய்தியோ மின்னஞ்சலோ வந்து கொண்டிருக்கிறது. லேட்டஸ்ட் குறுஞ்செய்தி “வேட்டைக்காரன் படம் பார்க்க முன்பதிவு செய்பவர்கள் எல்லோரும் தற்கொலை முயற்சிக்காக கைது செய்யப் படுகிறார்களாம்”. வேட்டைக்காரன் மேல் எல்லோருக்கும் ஏன் இந்த மான் பயம் என்று புரியவில்லை.

வேட்டைக்காரன் படத்தில் இடம்பெறவிருக்கும் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. (”கரிகாலன் காலைப் போல” & “புலி உறுமுது”). ”கரிகாலனில்” பெண்குரலில் இருக்கும் இனிமை, கணிவு, காந்தம், பாந்தம் அட விடுங்க ஏதோ ஒன்னு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பாடியவர் பெயர் சங்கீதா ராஜேஸ்வரன் என நினைக்கிறேன். பாடல் காபி ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன், "தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டியை" அடிக்கடி நினைவு படுத்துகிறது. ”தாஜ்மகால் நிழலு”ன்னு அவர் பாடும் பொழுது ஒரு பாடலுடன் ஒரு குழுமையும் தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது. நன்றாக படமாக்கப்பட்டிருந்தால் மூக்கு சுந்தர் சொல்வது போல், எல்லா டீவியிலும் டாப் டென்னில் தமிழ் கூறும் நல்லுலகம் குறைந்தது நான்கு மாதம் பார்க்கப் போகிறது. காதலர்கள் ரகசியமாக ப்ளூ டூத்திக் கொள்ளப் போகிறார்கள். ஏற்கனவே வேட்டைக்காரர் விஜய் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா” என்று பாடி பரபரப்பேற்றியிருக்கிறார். அதனால் இளைஞர்கள் பாடலைப் பார்த்து ஜொள்ளோ ஜொள்ளென்று ஜொள்ளித்தள்ளப்போகிறார்கள்.

மற்றொரு பாடல் “புலி உறுமுது”. பாடலைக் கேட்டால் ஒரு பெரிய ஹீரோவுக்கு ஏற்ற ”எல்லா” அந்தஸ்த்துடன் அமைந்த பாடல் என்று சொல்லத் தோன்றுகிறது. வரிகளில் இந்தளவிற்கு வேகம் இருக்கும் பாடல்கள் இதற்குமுன் தலைவருக்குத் தான் வாய்த்திருக்கிறது. (தலைவர் யார் தலை யார்? என்பதை அவர் அவர் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்). ”குல நடுங்குது குல நடுங்குது”ன்னு திரு.அனந்தாவ் பாடுவதைக் கேட்கும் பொழுதே நடுங்குகிறது. இதில் ”வர்றான் வர்றான்னு” கோரஸ் வேறு பாடி வேகத்தைக் கூட்டியிருக்கிறார்கள். ”யாரிவன் யாரிவன் யாரிவன்?” எனக் கேள்விகேட்டு ”ஐய்யனார் ஆயுதம் போல கூறிவன்” என உச்சஸ்தாயில் பதில் சொல்வதும் “இருபது நகங்களும் கழுகுடா இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா” என்பதும் மாஸ் மாஸ் மாஸ் தவிர வேறெதுவுமில்லை. மாஸ் ஹீரோ பாடல் என்றாலும் அணு அணுவாய் கத்தி போல் தீட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இந்த “ஓடு ஓடு ஓடு ஓடு”வையும் ”டங்கறு டங்கறு டங்கறு”வையும் நீக்கியிருக்கலாம்.

சரி கிட்டத்தட்ட பதிவையே வேட்டையாடி விட்டேன் என நினைக்கிறேன். விஷயத்திற்கு வருவோம். எனக்கு மிகவும் படங்களில் நந்தாவும் அடங்கும். ஏற்கனவே நந்தாவைப் பற்றி எழுதியாகிவிட்டது. நந்தாவில் வரும் “ஓர் ஆயிரம் யானை கொன்றால்” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். திரு. உன்னிகிருஷ்ணனின் குரலில் கவிஞர் நா.முத்துகுமாரின் அருமையான வரிகளில் அமைந்த நல்லதொரு பாடல். திரு. சாரு நிவேதிதா சொல்வது போல் “பெண்கள் மிக்ஸி வந்தால் ஆண் சட்னி” என்று நா.முத்துக்குமார் அவ்வப்போது எழுதினாலும் அவரது எழுத்திற்கு ”ஓர் ஆயிரம் யானை”யும் “கண் பேசும் வார்த்தை”களும் நல்ல உதாரணங்கள். ”வாழ்ந்தாய் தீயின் மடியில் சேர்ந்தாய் தீர்த்தக்கரையில்” என்றும் “ஒரு ராஜா வருந்தாமல் புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை” என்றும் அழகான வரிகளை உள்ளடக்கியது ”ஓர் யானை”.

எனக்கு பிடித்த வரிகளை (புத்தகங்களிலிருந்து படிப்பதையோ, கேட்கும் பாடலில் இருக்கும் வரிகளையோ) Personalised Message_ஆக எனது Skype Profile_லில் இடுவது எனது வழக்கம். அந்த வகையில் நேற்று ஓர் யானை கேட்டுவிட்டு ”ராஜா வருந்தாமல் புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை” என இட்டிருதேன். டெல்லியிலிருக்கும் தமிழ் தெரியாத என் நண்பர் ஒருவர் அப்படியென்றால் என்ன என்று வினவினார். ”மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை” என்ற வரியை மொழிமாற்றம் செய்யத் தெரியவில்லை. (தமிழ் கூறும் நல்லுலக வலைப்பதிவர்கள் உதவலாம்). அப்பொழுது புரிந்தது மொழிமாற்றம் என்பது எளிதான விஷயமல்ல என்று.


நண்பர்கள் இந்த மொழிமாற்ற முயற்சிக்கு உதவலாம் :)

சித்தன் -?
மனம் நொந்து நொறுங்காமல் - ?
Personalised Message - ?

ஒரு ஆசானும் எண்பது மதிப்பெண்களும்

என் மேலேயையும் என் கீழேயையும்
தொடுப்பில்லாமல்
இணைத்துக் கொண்டிருந்தது
அந்த விசை

கண் போலவும்
பார்வை போலவும்
என் விழுதலையும்
இயற்கையாக்கிக்
கொண்டிருந்தது.

ரெக்கைகள் முளைக்காமல்
உயரப் பறக்கின்றேன்
ஊர்ப் பருந்துடன்.
விசிறியெறிந்த பந்தாக
மீண்டும் அதே வழியில்.

கால்களின் நகர்வைப்
புறந்தள்ளி
தலையால் நடக்கிறேன்.
விளங்குகிறது
இருளின் வெளிச்சம்.

வேரில்லா மரமொன்று
நிற்பது போல
என் பேனா
எழுதத் தொடங்கியது.

நிலம் பரப்பி, நீரூற்றி
விழுதுக்குப் பின்னே
முளைக்கின்றன வேர்கள்.

ஒரு ஆசானும் எண்பது
மதிப்பெண்களும் தேவைப்பட்டன
விசையை விசையென
அறிவதற்கு.

Wednesday, November 25, 2009

மின்வெட்டு

மேஜை புத்தகத்தை புரட்டிப்பார்க்கிறது
சுவர் விசிறி

ஆப்பிள் தோட்டத்து வேலி முள்ளாய்
கணத்த ஒரு பக்கம்
கைவலி கண்ட கிழவியாக
ஒரு முனகலுடன் திருப்பப்படுகிறது

கனவற்றுப் போன தூக்கமாய்
பிணமாகிய மொழியின் எழுத்துக்களைத் தேடி
விடைதெரியா பரீட்சை மாணவனாய்
நெளிகின்றன நீள் ரெக்கைகள்

உதட்டு சாயம் மறைக்கும் முத்தங்களாய்
சில வண்ணப் படங்கள்
வெடித்து சிதறும் நீர்த்துளியாய்
நிறம் பிரிக்கப்படுகின்றன

புத்தகம் விசிறியாயும்
விசிறி புத்தகமாயும் உருமாருகின்றன
சாரல் மழையில்
மின்வெட்டு செயலாகும் பொழுது

Monday, November 23, 2009

பிம்பங்கள் உடைகின்றன

BL Whorf சொல்லுவார்

“பிரபஞ்சம் உதட்டுக்கு உதடு வேறுபடுகிறதென்று”
(Picture of the universe shifts from tongue to tongue).

சமீபத்தில் எனது நண்பர் ஒருவருக்கு திருமணம் நடந்தேறியது. கல்லூரியில் தன் வகுப்பில் படித்தவரை ஆறு வருடம் லவ்வோ லவ்வென்று லவ்வி பெற்றோரின் சம்மதத்துடன் கைப்பிடித்தார். இருவரும் இப்பொழுது நல்ல வேலையில் இருக்கிறார்கள். நண்பர் என்னை விட மூன்று வயது சிறியவர் (ம்ம்ம்... பல்லிருந்தாலும் பக்கோடா போடத்தெரியனும்மில்லே) மிகவும் சந்தோஷமாக இருந்தது. லவ்வில் ஜெயிச்ச நீங்க வாழ்க்கையிலும் ஜெயிக்கனும்னு ஒரு பெரிய மனுசனுக்கே உரிய தெனாவட்டில் வாழ்த்திவிட்டு வந்தேன் (மொய் எழுதுனீங்களா இல்லையா என்ற கேள்விகளுக்கு தனிப் பதிவிடக்கூடிய அளவிற்கு மேட்டர் இருக்கிறது அதை அப்புறம் பார்ப்போம்).

கடந்த வாரம் அந்த நண்பர் வீட்டிற்கு சென்றேன். உடன் படித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டதால் நண்பரின் மனைவி நண்பரைப் பெயரிட்டுத் தான் அழைப்பார் என எதிர்பார்த்தேன். ஆணாதிக்கம் இல்லாமல் அன்பு மட்டுமே தளைத்திருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆச்சரியம்! வாங்க போங்க என நண்பர் காலரைத் தூக்கிவிடும் அளவிற்கு மரியாதை பொங்கியது. நண்பர் மேல் கடுப்பாகி இருவரிடம் கேட்டே விட்டேன். என் கேள்விக்கு நண்பரின் மனைவி ”என்ன தான் காதல் திருமணம் என்றாலும், வாங்க போங்கன்னு சொல்றதுல்ல ஒரு வித சந்தோஷம் இருக்கிறது. என் கணவருக்கும் அப்படி அழைப்பது தான் பிடிக்கும்” என்றார். என்னடா நன்கு படித்த பெண் இன்னும் பழைய காலத்திலே இருக்கிறாரே என நினைத்தேன். ஊருக்காக இல்லாமல் கணவரின் விருப்பத்திற்காக அழைக்கிறென் என்று அவர் சொன்னது அவர்களிடத்தில் இருந்த புரிதலை எனக்கு வெளிப்படுத்தியது. நமது நல்லாசியுடன் வாழ்க்கையிலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கூடுதல் சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

சென்ற வாரம் இன்னொரு நண்பர் தனக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதாக கூறினார். என் சமவயதுக்காரர். இவரும் தன்னுடன் படித்த பெண்ணை சமீபத்தில் எங்கோ சந்தித்து பேச ஆரம்பித்து லவ்வி விட்டிருக்கிறார். லேட்டானலும் லேட்டஸ்ட்டாக்கியிருக்கிறார். இந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் கூட கொஞ்சம் மேத்தமேடிக்கிஸும் கைகூடி வர அடுத்த மாதம் திருமணம் என நிச்சயமாகியிருக்கிறது. நேற்று திருமணத்திற்கான உடைகள் வாங்குவதற்கு துணையாக என்னை அழைத்திருந்தார். மாலை 6 மணி அளவில் தியாகராய நகரில் கிருஷ்ணா கலெக்‌ஷனில் கூடினோம். நண்பருடன் அவரது வருங்காலத் துணைவியாரும் அவரது சகோதரரும் வந்திருந்தனர். செர்வானி எடுக்கலாம் என முடிவு செய்தோம். நாம தான் எப்பவுமே அவசரக் குடுக்கையாச்சே! சந்தனக் கலரில் ஒரு செர்வானியைப் பார்த்து நண்பருக்கு பரிந்துரை செய்தேன். நண்பரின் வருங்காலத் துணைவியார் இது புடவைக் கலருக்கு மேட்சாகாது என்றார். விஷயம் அப்பொழுது தான் புரிந்தது. காலையிலிருந்து துணைவியாருக்கு புடவை (கள்??!!) எடுத்து விட்டு மாலையில் நண்பருக்கு துணி எடுக்க வந்திருக்கிறார்கள். நண்பர் அப்பாவித்தனமாக முழித்துக் கொண்டிருந்தது சிரிப்பாக இருந்தது. பெண்கள் சில விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது அப்பொழுது புரிந்தது. Pure Female Chauvinism என நிலைமையைச் சரி செய்ய ஒரு கமெண்ட் அடித்தேன்.

எப்படியோ புடவைக்கு மேட்ச்சாகிற சிவப்பு நிற செர்வானி எடுத்தாயிற்று. அருகிலிருக்கும் உணவகத்தில் சாப்பிட சென்றோம். நண்பர் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நண்பரின் துணைவியார் நண்பரைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். நண்பரைப் பெயரிட்டு அழைப்பதும் அவ்வப்போது நடந்தது. எனக்குள்ளிருந்த நாரதர் முழித்துக் கொண்டார். அதே பழைய சந்தேகம். அதே கேள்வியை வேறு தொனியில் கேட்டேன். இப்படி வருங்காலக் கணவரை பெயரிட்டு அழைக்கிறீர்களே உற்றாரும் உறவினரும் தவறாக நினைக்க மாட்டார்களா?. ”இனிமேல் இவர் தான் உறவு.. மத்த உறவுகளுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது. உங்க ஃபிரண்டுக்கு அப்படி கூப்பிட்டால் தான் பிடிக்கும்” என சட்டென்று பதில் வந்தது. வியப்பாயிருந்தது! ஒரே கேள்விக்கு ஒரே மாதிரி சூழ்நிலையில் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு பதில்கள். மனித உணர்வுகள் சிக்காலானவை! உணர்வுகளின் புரிதல் மட்டுமே முக்கியம்! என்னும் நிதர்சனம் இரு பதில்களையும் நியாயப்படுத்தியது.

சந்தோஷமாயிருந்தது. வந்த வேலையை (சாப்பாட்டு வேலையை) நண்பரின் காசில் முடித்துவிட்டு கிளம்பலானேன். இரு தம்பதியரிடம் தேவையில்லாத கேள்வியைக் கேட்டது போல் மனம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அந்த கேள்வியைக் கேட்டதினால் கிடைத்த பதில்கள் இது நாள் வரை நான் உருவகப்படுத்தயிருந்த பல பிம்பங்களை உடைத்தெறிந்தன. சந்தோஷமாகவே வீடு வந்து சேர்ந்தேன்.

அநேகமாக இந்த பதிவினை நண்பர்கள் வேறு யாரும் படித்தால் இனிமேல் என்னைப் பக்கத்தில் கூட விட மாட்டார்கள் என நினைக்கிறேன். என்ன ஆனால் என்ன நமக்கு கலகம் செய்வதும் பிம்பங்களை உடைப்பதும் தான் முக்கியம். உண்மையிலேயே பிரபஞ்சம் உதட்டுக்கு உதடு வேறுபடுகின்றது. Whorf சொன்னது மொழி சம்பந்தப்பட்ட கூற்று ஆனால் பல இடங்களில் அது பொருந்தும்.

மேகம் மட்டும் !!

எனது இரண்டாம் காலை
அந்த வானத்தின் மேல் வைக்கலானேன்

ஒரு மரத்தில் மஞ்சள் நட்சத்திரம்
காய்த்துக் கொண்டிருந்தது

தலைக்கு மேலே பூமி
சிவப்பாகத் தெரிந்தது

வியாழனில் இருக்கும் மாமா
கடிதம் அனுப்பியிருந்தார்

எனக்கும் பூமிக்கும் இடையில்
மேகம் மட்டும் மிச்சமிருந்தது

Sunday, November 22, 2009

புரிகிறது

கவிதைகள் எழுதப்படுகின்றன.
ஒருவன் வாசிக்கிறான்.
ஒருவன் சிரிக்கிறான்.
ஒருவன் வசிக்கிறான்.
பலர் பார்க்கிறார்கள்.
புரியாதவர்களில் சிலர் கேட்கிறார்கள்.
புரிந்தவர்களில் சிலர் சொல்கிறார்கள்.
பலருக்கும் ஒன்றும் புரிவதில்லை.
எவனுக்கு புரியும் எவனுக்கு புரியாது
என்பது எழுதியவனுக்கு மட்டுமே
புரிகிறது.

நான் உறங்கப் போகிறேன்

விட்டம் வெறித்த கண்களிலிருந்து
பதுங்கி விழுகிறது தண்ணீர்த் துளி

தண்ணீர்த் துளிகளில் அமைதியாக
நகர்கிறது ராட்சத பல்லி

பல்லி நகரும் சுவரும் ஓசையின்றி
நின்று கொண்டிருக்கிறது

நிற்கும் சுவரில்
கவிதை பாடுகின்றன மின்விசிறிகள்

முடிகிறது இந்த விஸ்வரூப தரிசனம்
நான் உறங்கப் போகிறேன்