Thursday, November 26, 2009

ஒரு ஆசானும் எண்பது மதிப்பெண்களும்

என் மேலேயையும் என் கீழேயையும்
தொடுப்பில்லாமல்
இணைத்துக் கொண்டிருந்தது
அந்த விசை

கண் போலவும்
பார்வை போலவும்
என் விழுதலையும்
இயற்கையாக்கிக்
கொண்டிருந்தது.

ரெக்கைகள் முளைக்காமல்
உயரப் பறக்கின்றேன்
ஊர்ப் பருந்துடன்.
விசிறியெறிந்த பந்தாக
மீண்டும் அதே வழியில்.

கால்களின் நகர்வைப்
புறந்தள்ளி
தலையால் நடக்கிறேன்.
விளங்குகிறது
இருளின் வெளிச்சம்.

வேரில்லா மரமொன்று
நிற்பது போல
என் பேனா
எழுதத் தொடங்கியது.

நிலம் பரப்பி, நீரூற்றி
விழுதுக்குப் பின்னே
முளைக்கின்றன வேர்கள்.

ஒரு ஆசானும் எண்பது
மதிப்பெண்களும் தேவைப்பட்டன
விசையை விசையென
அறிவதற்கு.

No comments: