Thursday, November 26, 2009

வேட்டைக்காரனும் மொழிமாற்றமும்

வேட்டைக்காரன் படத்தைப் பற்றி தினம் ஒரு குறுஞ்செய்தியோ மின்னஞ்சலோ வந்து கொண்டிருக்கிறது. லேட்டஸ்ட் குறுஞ்செய்தி “வேட்டைக்காரன் படம் பார்க்க முன்பதிவு செய்பவர்கள் எல்லோரும் தற்கொலை முயற்சிக்காக கைது செய்யப் படுகிறார்களாம்”. வேட்டைக்காரன் மேல் எல்லோருக்கும் ஏன் இந்த மான் பயம் என்று புரியவில்லை.

வேட்டைக்காரன் படத்தில் இடம்பெறவிருக்கும் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. (”கரிகாலன் காலைப் போல” & “புலி உறுமுது”). ”கரிகாலனில்” பெண்குரலில் இருக்கும் இனிமை, கணிவு, காந்தம், பாந்தம் அட விடுங்க ஏதோ ஒன்னு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பாடியவர் பெயர் சங்கீதா ராஜேஸ்வரன் என நினைக்கிறேன். பாடல் காபி ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன், "தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டியை" அடிக்கடி நினைவு படுத்துகிறது. ”தாஜ்மகால் நிழலு”ன்னு அவர் பாடும் பொழுது ஒரு பாடலுடன் ஒரு குழுமையும் தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது. நன்றாக படமாக்கப்பட்டிருந்தால் மூக்கு சுந்தர் சொல்வது போல், எல்லா டீவியிலும் டாப் டென்னில் தமிழ் கூறும் நல்லுலகம் குறைந்தது நான்கு மாதம் பார்க்கப் போகிறது. காதலர்கள் ரகசியமாக ப்ளூ டூத்திக் கொள்ளப் போகிறார்கள். ஏற்கனவே வேட்டைக்காரர் விஜய் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா” என்று பாடி பரபரப்பேற்றியிருக்கிறார். அதனால் இளைஞர்கள் பாடலைப் பார்த்து ஜொள்ளோ ஜொள்ளென்று ஜொள்ளித்தள்ளப்போகிறார்கள்.

மற்றொரு பாடல் “புலி உறுமுது”. பாடலைக் கேட்டால் ஒரு பெரிய ஹீரோவுக்கு ஏற்ற ”எல்லா” அந்தஸ்த்துடன் அமைந்த பாடல் என்று சொல்லத் தோன்றுகிறது. வரிகளில் இந்தளவிற்கு வேகம் இருக்கும் பாடல்கள் இதற்குமுன் தலைவருக்குத் தான் வாய்த்திருக்கிறது. (தலைவர் யார் தலை யார்? என்பதை அவர் அவர் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்). ”குல நடுங்குது குல நடுங்குது”ன்னு திரு.அனந்தாவ் பாடுவதைக் கேட்கும் பொழுதே நடுங்குகிறது. இதில் ”வர்றான் வர்றான்னு” கோரஸ் வேறு பாடி வேகத்தைக் கூட்டியிருக்கிறார்கள். ”யாரிவன் யாரிவன் யாரிவன்?” எனக் கேள்விகேட்டு ”ஐய்யனார் ஆயுதம் போல கூறிவன்” என உச்சஸ்தாயில் பதில் சொல்வதும் “இருபது நகங்களும் கழுகுடா இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா” என்பதும் மாஸ் மாஸ் மாஸ் தவிர வேறெதுவுமில்லை. மாஸ் ஹீரோ பாடல் என்றாலும் அணு அணுவாய் கத்தி போல் தீட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இந்த “ஓடு ஓடு ஓடு ஓடு”வையும் ”டங்கறு டங்கறு டங்கறு”வையும் நீக்கியிருக்கலாம்.

சரி கிட்டத்தட்ட பதிவையே வேட்டையாடி விட்டேன் என நினைக்கிறேன். விஷயத்திற்கு வருவோம். எனக்கு மிகவும் படங்களில் நந்தாவும் அடங்கும். ஏற்கனவே நந்தாவைப் பற்றி எழுதியாகிவிட்டது. நந்தாவில் வரும் “ஓர் ஆயிரம் யானை கொன்றால்” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். திரு. உன்னிகிருஷ்ணனின் குரலில் கவிஞர் நா.முத்துகுமாரின் அருமையான வரிகளில் அமைந்த நல்லதொரு பாடல். திரு. சாரு நிவேதிதா சொல்வது போல் “பெண்கள் மிக்ஸி வந்தால் ஆண் சட்னி” என்று நா.முத்துக்குமார் அவ்வப்போது எழுதினாலும் அவரது எழுத்திற்கு ”ஓர் ஆயிரம் யானை”யும் “கண் பேசும் வார்த்தை”களும் நல்ல உதாரணங்கள். ”வாழ்ந்தாய் தீயின் மடியில் சேர்ந்தாய் தீர்த்தக்கரையில்” என்றும் “ஒரு ராஜா வருந்தாமல் புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை” என்றும் அழகான வரிகளை உள்ளடக்கியது ”ஓர் யானை”.

எனக்கு பிடித்த வரிகளை (புத்தகங்களிலிருந்து படிப்பதையோ, கேட்கும் பாடலில் இருக்கும் வரிகளையோ) Personalised Message_ஆக எனது Skype Profile_லில் இடுவது எனது வழக்கம். அந்த வகையில் நேற்று ஓர் யானை கேட்டுவிட்டு ”ராஜா வருந்தாமல் புத்தன் ஜனனம் இல்லை மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை” என இட்டிருதேன். டெல்லியிலிருக்கும் தமிழ் தெரியாத என் நண்பர் ஒருவர் அப்படியென்றால் என்ன என்று வினவினார். ”மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை” என்ற வரியை மொழிமாற்றம் செய்யத் தெரியவில்லை. (தமிழ் கூறும் நல்லுலக வலைப்பதிவர்கள் உதவலாம்). அப்பொழுது புரிந்தது மொழிமாற்றம் என்பது எளிதான விஷயமல்ல என்று.


நண்பர்கள் இந்த மொழிமாற்ற முயற்சிக்கு உதவலாம் :)

சித்தன் -?
மனம் நொந்து நொறுங்காமல் - ?
Personalised Message - ?

No comments: