Tuesday, May 26, 2009

தொலையாத முகம்

ஒரு காகிதத்தின் வழியாகத்தான்
வெளிப்படுகிறது அதுவும்
அழுந்திய கணம் முதல்
முயன்று கொண்டிருக்கிறது
முடிகளுக்குப் பின்னால்
மறைந்திருக்கும் முகத்தைக் காட்ட
கண்ணாடி பார்க்காத கைப்பக்குவம்
முதல் நகர்விலேயே ரத்தக்கீறலாக்க
காரியம் முடிந்து பார்த்தால்
சில கோடுகளின் நடுவில்
தெரிகிறது தொலையாத முகம்

(வா. மணியின் ஒரு கவிதையைத் தழுவி எழுதியது)

முதல் கவிதை

முதன்முதலாய் எழுத நினைத்து
பேனாவில் விரல் கோர்த்து
நினைத்தவைகளில் விலக்கியவை பல
என் பயன்பாட்டுக்காய்
நொடி பொழுதுகளை
வீணடிக்கும் காலமகன்,
முரண்களில் முரண்படும்
அந்த ஒற்றுமை,
விடியல் வரை
உறங்க மறுக்கும் இரவு,
புலனுறுத்தல், பிம்பங்கள்
என நீண்டது விலக்கப் பட்டியல்.
முதலெழுத்துக்காய் மூச்சிறைத்து
முயற்சி தளர்த்தி
முடித்துவிட நினைத்தபோது
கைவந்தது
நண்பன் கொடுத்த வெள்ளைத்தாள்.

பயணம்

இந்த ஆசையின்
மக்கள்தொகையில் - நான்
ஆயிரம் கோடிகளில் இருக்கலாம்.

நான் சம்பாதிக்கப் போகும்
ஒற்றை ரூபாய் எனக்கு
மட்டுமே கூட பயன்படலாம்.

கணிதம் ஒழுங்காய்
படித்திருந்தால் இன்றோடு
39 என்று என்னால் சரியாகச்
சொல்லியிருக்க முடியும்.

எனக்கு காலக்கொலைகள்
பிடிப்பதில்லை...
அவை விசாரிக்கப்படுமென்பதனால்

நான் பயன்படுத்திய சில
நொடிகள் - என்
மயிர்களில் சிலவற்றுக்கு
வெள்ளையடித்துப் போயிருக்கின்றன
சிலவற்றை எடுத்தும் சென்றிருக்கின்றன.

என்றேனும் ஒரு நாள்
தெரிந்து போயிருக்க வேண்டும்
எனக்காக நான் சேமித்து வைத்திருந்த
நொடிக் கணங்கள் எல்லோருக்கும்.

அகமகிழ்வு

ஒளிக்கடன் வாங்கி
வெளியில் விற்று
இருள் நீக்கும் நிலா,
அன்னல் புணர்கையில்
மின்னல் களைந்து
உயிர்த்துளி உதிர்த்து
பயிர்பெருக்கும் கார்மேகம்,
அகமகிழ்வின் ஆதாரம்
கண்டவை எவையென
அலசிய போது
சிரித்துக் கொண்டிருந்தது
நைட்ரஸ் ஆக்சைடு
அடைத்து வைத்த சீசா !