Monday, May 31, 2010

ஆழம்

கருத்த நதிதன்னில் வெளிச்சம் பரப்பி
மிதந்து கோண்டிருந்த நிலவினை
மறைத்துக் கொண்டிருந்தது
கரைமரமுதிர்த்த சருகு.
கல்லெறிந்து சருகுநகர்த்தேன்
நிலவும் கலங்கியது.
மூழ்கிய கல்லது
ஆழம் உணர்த்தவே
இடம் பெயர்ந்தேன்.
நிலவு சருகினை
மறைக்கலாயிற்று.

வெங்காயம்

உரிக்க உரிக்க ஒன்றுமில்லை
’வெங்காயம்’ என்றார்கள்
உரித்தவனுக்கு மட்டுமாவது
தெரிந்திருக்க வேண்டும்
வெங்காயமும் கண்ணீரும்

Wednesday, May 26, 2010

ஓடமொன்று

ஓடமொன்று ஓடிக்கொண்டிருந்தது
தவறு மிதந்துகொண்டிருந்தது
தவறுக்கு எள்ளி நகையாடினார்கள்
தவறு தவறாகவே இருந்ததனால்
ஓடமொன்று ஓடிக்கொண்டேயிருந்தது

Thursday, May 20, 2010

மொழியுணர்வு

’அ’, ‘ஆ’
கைபிடித்து எழுத்துப்பழக்கிய
அம்மாவிடம்
F1 அழுத்தினால் help
என்று தொலைபேசியில்
சொல்லும்பொழுது
F1ம் helpம் புரியாததற்கு
மொழியுணர்வையும் காரணமாக்கலாம்

பூதங்கள்

ஏழு கடல் எட்டிச் சென்று
நிலம் மிதித்து, காற்றுடைத்து
வெளி நிறைத்த பொழுதினில்
கடல், நிலம், காற்று, வெளி
அனைத்தும் நெருப்பாக இருந்தது

மகரந்தம் மறைத்த பூ

மகரந்தம் மறைத்த பூவிற்காக
குருவி ஒன்று
உமிழ்ந்து விட்டுச்சென்ற
இரட்டை அர்த்த வசனத்தில்
என்னை உணர்கிறேன்

Tuesday, May 18, 2010

பூசாரி

50 வயதுக்கு மேற்பட்ட
ஆட்களுக்கான தனி
இலைகளில் கூடுதல்
பிரசாதமிடும்
வரம் தராத
பூசாரிக்காகவும்
தினமும் கோயிலுக்குச்
செல்கிறேன்.

வளர்ந்த கதை

ஒரெழுத்தில் புத்தகமொன்றில்
எழுதி வைத்த வார்த்தையொன்று
வளர்ந்து நிற்கிறது கவிதையாக

அவன் அவள் அது
யார் வேண்டுமானாலும்
படிக்கலாம் அந்த வார்த்தையை

வளர்ந்த கதை தெரியும்
வரை கவிதை
தன்னைத் தானே படித்துக்
கொண்டிருக்கும்