Thursday, August 25, 2011

விட்டுச் செல்வதில்

விட்டுச் செல்வதில்
ஏதோவொன்று இருக்கிறது
கடந்த தூரமாக
இழந்த சொந்தமாக
மாறிய நம்பிக்கையாக
மறந்த பொருளாக
கலைந்த ஒழுங்காக
விடுத்த வழக்காக
மறைந்த நினைவாக
ஏதோவொன்று இருக்கிறது

வெளிகளிலிருந்து வெளிகளுக்கு
சொந்தங்களிலிருந்து சொந்தங்களுக்கு
நம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு
மறந்தவைகளிலிருந்து மறப்பவைகளுக்கு
ஒழுங்கிலிருந்து ஒழுங்கிற்கு
வழக்கிலிருந்து வழக்கிற்கு
நினைவிலிருந்து நினைவுக்கு
அழைக்கும் நீயோ
நகரும் நானோ
விட்டுச் செல்வதில்
இருந்து விடவே செய்கிறோம்

Thursday, August 11, 2011

ஒரு புத்தகம் - அன்பளிப்பு

பக்கங்களாக
நிறைந்திருக்கிறது புத்தகம்
என்றோ யாரோ
பிடித்த வரிகளை
கோடிட்டிருக்கிறார்கள்

படரும் வேட்கையில்
ஏதோவொரு பரப்பொன்றில்
சிதறிய திரவம்
படித்த கடைசி வரிகளின்
நினைவிற்க்காய்
கவிழ்க்கப்பட்ட பக்கத்தில்
வண்ணப்பூச்சு எழுத்தாய்

தலைப்பு
எழுதியவர்
தெரியப்படுத்தும்
முதல் பக்கத்தில்
கோடுகளோ
வண்ணப்பூச்சுக்களோ
பார்த்ததில்லை
கையெழுத்துக்களில்
அன்பளிப்பு என்று பார்க்கையில்
மறுமுறை வாசிக்கிறேன்
அன்பளிப்பென்றே
உறுதி செய்ய!

Wednesday, August 10, 2011

வென்படம்

மூடிய வளைவரைகளான
வட்டங்களில்
உறுப்புகள்
கணங்களின் தொடர்புகள்
முடிவுறு தொகுப்புகள்

சூழ்ந்திருக்கும்
சதுர வெளி
வட்டங்களின் ஒன்றிப்புகளிலும்
இருக்கிறது
வென்படம்

Friday, August 05, 2011

ஆறும் அது ஆழமில்ல



தண்ணியில கோலம் போடு,
ஆடி காத்தில் தீபம் ஏத்து,
ஆகாயத்தில் கோட்டை கட்டு,
அந்தரத்தில் தோட்டம் பொடு,
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் பொடு,
அத்தனையும் நடக்குமய்யா ஆச வச்ச கிடைக்குமய்யா,
ஆனா
கிடைக்காது,
நீ ஆசை வைக்கும் மாது...

’ம்ம்ம்ம்’ பெண் குரல்களில் இசையின்றி துவங்கும் பாடல், தாளவாத்தியங்கள் சேர நாதஸ்வரத்துடன் இணைந்து, பின் ராஜா சார் குரலில் ஆர்ப்பரிக்கும். ”On your mark! Get set! Go!"ன்னு ஒரு பந்தயத்துக்கான துவக்கம் மாதிரியே இருக்கும். தாள வாத்தியத்துடன் சேரும் நாதஸ்வரம் ஒரு சில நொடிகளுக்குப் பின் நின்றுவிடும். தாள வாத்தியம் மட்டும் தொடர்ந்து இசைத்துக்கொண்டே இருக்கும். அந்த சில நொடிகள் வீரர்கள் ஓடத் துவங்கப் போவதற்கான கட்டியம். முதல் முறை பாடுகையில் ”ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல” என்ற இரு வரிகளுக்கு இடையில் ஒரு கிதார் ஃபில்லர் இருக்கும். டேய் இந்தா நான் ஓட ஆரம்பிச்சுட்டேன் நீயும் ஓடறியான்னு கேட்கிற மாதிரியே இருக்கும். அப்புறம் பாடல், குரலுக்கும், இசைக்கும், ரசனைக்குமான பந்தயம். அதே போல் ”ஆனா கிடைக்காது”ல் ’ஆனா’வுக்கு பின்னும் ’கிடைக்காது’க்குப்பின்னும் வரும் புல்லாங்குழல் ஃபில்லர் ஏன் என்பது ராஜாவுக்குத்தான் தெரியும். இந்த மாதிரி சின்ன சின்ன ஃபில்லர்கள் ராஜாவோட பெரிய பலம்.

எனக்கு சரியா இசை நுணுக்கம் தெரியாது. ஆனா ‘ஆனா’வும், ‘கிடைக்காது’வும் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கள் ஏழு சுரங்களில் கீழிருந்து மேல் சுரங்களுக்கான பெரிய தாவலாக இருக்கலாம். குரலில் (ஏற்ற இறக்கமில்லாமல்) இப்படியான தாவல்கள் தொடர்ந்து வருவதால் கேட்பவர்களுக்கு தினவேற்படலாம். அதனால் இந்த மாதிரி ஃபில்லர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். குறிப்பாக புல்லாங்குழல், வயலின், பியானோ, கிதார் ஃபில்லர்கள் ராஜா சாரின் நுண்திறமை. நிறைய பாடல்களில் கேட்டிருக்கிறேன்.

இந்தப் பாடலில் ராஜா சார் வரிகளை பாடி முடிப்பது அழகு... எப்படி சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்க வேண்டுமோ அப்படியே சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்காமல் நிறுத்தப் படவும் வேண்டும். ”கோலம் போடு”, “தீபம் ஏத்து”ன்னு சட்டென முடிப்பதும்... ”கோட்டை கட்டுஉ உ உ உ”ன்னு நீடிப்பதும் அழகு.