Monday, November 23, 2009

பிம்பங்கள் உடைகின்றன

BL Whorf சொல்லுவார்

“பிரபஞ்சம் உதட்டுக்கு உதடு வேறுபடுகிறதென்று”
(Picture of the universe shifts from tongue to tongue).

சமீபத்தில் எனது நண்பர் ஒருவருக்கு திருமணம் நடந்தேறியது. கல்லூரியில் தன் வகுப்பில் படித்தவரை ஆறு வருடம் லவ்வோ லவ்வென்று லவ்வி பெற்றோரின் சம்மதத்துடன் கைப்பிடித்தார். இருவரும் இப்பொழுது நல்ல வேலையில் இருக்கிறார்கள். நண்பர் என்னை விட மூன்று வயது சிறியவர் (ம்ம்ம்... பல்லிருந்தாலும் பக்கோடா போடத்தெரியனும்மில்லே) மிகவும் சந்தோஷமாக இருந்தது. லவ்வில் ஜெயிச்ச நீங்க வாழ்க்கையிலும் ஜெயிக்கனும்னு ஒரு பெரிய மனுசனுக்கே உரிய தெனாவட்டில் வாழ்த்திவிட்டு வந்தேன் (மொய் எழுதுனீங்களா இல்லையா என்ற கேள்விகளுக்கு தனிப் பதிவிடக்கூடிய அளவிற்கு மேட்டர் இருக்கிறது அதை அப்புறம் பார்ப்போம்).

கடந்த வாரம் அந்த நண்பர் வீட்டிற்கு சென்றேன். உடன் படித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டதால் நண்பரின் மனைவி நண்பரைப் பெயரிட்டுத் தான் அழைப்பார் என எதிர்பார்த்தேன். ஆணாதிக்கம் இல்லாமல் அன்பு மட்டுமே தளைத்திருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆச்சரியம்! வாங்க போங்க என நண்பர் காலரைத் தூக்கிவிடும் அளவிற்கு மரியாதை பொங்கியது. நண்பர் மேல் கடுப்பாகி இருவரிடம் கேட்டே விட்டேன். என் கேள்விக்கு நண்பரின் மனைவி ”என்ன தான் காதல் திருமணம் என்றாலும், வாங்க போங்கன்னு சொல்றதுல்ல ஒரு வித சந்தோஷம் இருக்கிறது. என் கணவருக்கும் அப்படி அழைப்பது தான் பிடிக்கும்” என்றார். என்னடா நன்கு படித்த பெண் இன்னும் பழைய காலத்திலே இருக்கிறாரே என நினைத்தேன். ஊருக்காக இல்லாமல் கணவரின் விருப்பத்திற்காக அழைக்கிறென் என்று அவர் சொன்னது அவர்களிடத்தில் இருந்த புரிதலை எனக்கு வெளிப்படுத்தியது. நமது நல்லாசியுடன் வாழ்க்கையிலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கூடுதல் சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

சென்ற வாரம் இன்னொரு நண்பர் தனக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதாக கூறினார். என் சமவயதுக்காரர். இவரும் தன்னுடன் படித்த பெண்ணை சமீபத்தில் எங்கோ சந்தித்து பேச ஆரம்பித்து லவ்வி விட்டிருக்கிறார். லேட்டானலும் லேட்டஸ்ட்டாக்கியிருக்கிறார். இந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் கூட கொஞ்சம் மேத்தமேடிக்கிஸும் கைகூடி வர அடுத்த மாதம் திருமணம் என நிச்சயமாகியிருக்கிறது. நேற்று திருமணத்திற்கான உடைகள் வாங்குவதற்கு துணையாக என்னை அழைத்திருந்தார். மாலை 6 மணி அளவில் தியாகராய நகரில் கிருஷ்ணா கலெக்‌ஷனில் கூடினோம். நண்பருடன் அவரது வருங்காலத் துணைவியாரும் அவரது சகோதரரும் வந்திருந்தனர். செர்வானி எடுக்கலாம் என முடிவு செய்தோம். நாம தான் எப்பவுமே அவசரக் குடுக்கையாச்சே! சந்தனக் கலரில் ஒரு செர்வானியைப் பார்த்து நண்பருக்கு பரிந்துரை செய்தேன். நண்பரின் வருங்காலத் துணைவியார் இது புடவைக் கலருக்கு மேட்சாகாது என்றார். விஷயம் அப்பொழுது தான் புரிந்தது. காலையிலிருந்து துணைவியாருக்கு புடவை (கள்??!!) எடுத்து விட்டு மாலையில் நண்பருக்கு துணி எடுக்க வந்திருக்கிறார்கள். நண்பர் அப்பாவித்தனமாக முழித்துக் கொண்டிருந்தது சிரிப்பாக இருந்தது. பெண்கள் சில விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது அப்பொழுது புரிந்தது. Pure Female Chauvinism என நிலைமையைச் சரி செய்ய ஒரு கமெண்ட் அடித்தேன்.

எப்படியோ புடவைக்கு மேட்ச்சாகிற சிவப்பு நிற செர்வானி எடுத்தாயிற்று. அருகிலிருக்கும் உணவகத்தில் சாப்பிட சென்றோம். நண்பர் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நண்பரின் துணைவியார் நண்பரைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். நண்பரைப் பெயரிட்டு அழைப்பதும் அவ்வப்போது நடந்தது. எனக்குள்ளிருந்த நாரதர் முழித்துக் கொண்டார். அதே பழைய சந்தேகம். அதே கேள்வியை வேறு தொனியில் கேட்டேன். இப்படி வருங்காலக் கணவரை பெயரிட்டு அழைக்கிறீர்களே உற்றாரும் உறவினரும் தவறாக நினைக்க மாட்டார்களா?. ”இனிமேல் இவர் தான் உறவு.. மத்த உறவுகளுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது. உங்க ஃபிரண்டுக்கு அப்படி கூப்பிட்டால் தான் பிடிக்கும்” என சட்டென்று பதில் வந்தது. வியப்பாயிருந்தது! ஒரே கேள்விக்கு ஒரே மாதிரி சூழ்நிலையில் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு பதில்கள். மனித உணர்வுகள் சிக்காலானவை! உணர்வுகளின் புரிதல் மட்டுமே முக்கியம்! என்னும் நிதர்சனம் இரு பதில்களையும் நியாயப்படுத்தியது.

சந்தோஷமாயிருந்தது. வந்த வேலையை (சாப்பாட்டு வேலையை) நண்பரின் காசில் முடித்துவிட்டு கிளம்பலானேன். இரு தம்பதியரிடம் தேவையில்லாத கேள்வியைக் கேட்டது போல் மனம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அந்த கேள்வியைக் கேட்டதினால் கிடைத்த பதில்கள் இது நாள் வரை நான் உருவகப்படுத்தயிருந்த பல பிம்பங்களை உடைத்தெறிந்தன. சந்தோஷமாகவே வீடு வந்து சேர்ந்தேன்.

அநேகமாக இந்த பதிவினை நண்பர்கள் வேறு யாரும் படித்தால் இனிமேல் என்னைப் பக்கத்தில் கூட விட மாட்டார்கள் என நினைக்கிறேன். என்ன ஆனால் என்ன நமக்கு கலகம் செய்வதும் பிம்பங்களை உடைப்பதும் தான் முக்கியம். உண்மையிலேயே பிரபஞ்சம் உதட்டுக்கு உதடு வேறுபடுகின்றது. Whorf சொன்னது மொழி சம்பந்தப்பட்ட கூற்று ஆனால் பல இடங்களில் அது பொருந்தும்.

No comments: