Thursday, June 16, 2005

புத்தகங்களின் தோழமை.

எதையும் நீ கேட்டாய் என்பதற்க்காக நம்பாதே. பல தலைமுறையாக வந்துவிட்டதென்பதற்க்காக உனது பாரம்பரியத்தின் மேல் நம்பிக்கை கொள்ளாதே. பல பேரால் ஏற்றுக்கொள்ளப்படுவதால் எதையும் நம்பாதே. உன்னுடைய வேத புத்தகங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதென்பதற்க்காக எதையும் நம்பாதே. ஆசிரியர்கள் மூத்தவர்கள் என்கிற ஆளுமைகளால் படிப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதற்க்காக எதையும் நம்பாதே. ஆனால் உற்று நோக்கி ஆய்ந்து தெளிந்த பின் எதேனும் உன்னுடைய அடிப்படை கருத்துக்களுடன் ஒத்துப் போவதாக அமைந்தால், அது மற்றவருக்கு நன்மை தரும் என்கிற பொழுதில் அதை ஏற்றுக்கொண்டு அதன் படி வாழ தளைப்படு. - புத்தர்.

புத்த மகான் அருமையாக சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் உற்று நோக்க, ஆய்ந்து தெளிய பிப்லியோகிராஃபியைக் குறிப்பிடாமல் சென்றுவிட்டார். எனக்கு அடிக்கடி இந்த மாதிரியான சந்தேகங்கள் எழுவதுண்டு. உதாரணத்திற்க்கு எடுத்துக் கொண்டால்

Laziness is the worst enemy of humans - Jawaharlal Nehru.
சோம்பேறித்தனம் தான் மனிதனின் மோசமான எதிரி - நேரு

Humans should learn to love even their worst enemies - Mahatma Gandhi
மனிதர்கள் அவர்களின் மோசமான எதிரிகளிடத்தும் அன்பு காண வேண்டும். -மகாத்மா காந்தி

இரண்டு கருத்துக்களுமே மனிதப் பண்புகளை குறிக்க சொல்லப் பட்டதாகும். (என்னடா இந்த மாதிரி விதண்டாவாதம் எல்லாம் பண்றேன்னு சொல்கிறவர்கள் கண்டிப்பாக பின்னூட்டமிட வேண்டும்). இது போல எண்ணற்ற ஒப்புமைகளால் குழப்பங்கள் ஏற்படுவது எல்லோருக்கும் இயற்கை. மேலே குறிப்பிடப்பட்டள்ள கருத்துக்கள் அத்தகைய ஒப்புமைகளில் சந்தேகத்தையோ, பின்பற்றுவருக்கு சங்கடத்தையோ சிலருக்கு சிரிப்பையோ வரவழைக்கும். ஆனால் இது போல குழப்பங்கள் தான் வாழ்வின் ஆதாரங்கள் எப்பொழுது மனிதன் ஒவ்வொரு காரியத்திற்க்கும் யோசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுது அவன் முன்னேற்ற பாதைகளின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்து விடுகிறான். ஆனால் அவனுக்கு தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு துணை தேவைப்படுகிறது. பாலசந்தர் படத்தில் வருவது போல ஒரு நண்பனாகவும், அறிஞராகவும் வழிகாட்டியாகவும் (friend, philosopher and guide) அவனை அந்த துணை வழிநடத்தி செல்ல வேண்டியிருக்கிறது. புத்தன் சொல்வது போல எதையும் உடனே நம்பி விடக்கூடாதென்றால் மனிதன் எதை வைத்து தான் ஆய்வு செய்வான்? உற்று
நோக்குவான்?. பதில் கிடைப்பதில்லை. இப்படியாக ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் புத்தன் ஒருவேளை புத்தகங்களை துணைக்கு அழைக்க சொல்லியிருப்பானோ என்று தோன்றியது. அப்பொழுதிருந்து தான் புத்தகங்கள் மீது ஆர்வம். சுமார் ஒரு நான்கைந்து வருடங்கள் இருக்கலாம். ஆனால் அவை என் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பு அதிகம்.

"டேய் சாப்பிட்டிட்டு படிடா!! ஏம்மா சாப்பாடென்ன ஓடியா போகுது....... அப்ப அந்த ஆனந்த விகடன் மட்டுமென்ன ஓடியா போகப் போவுது. சாப்பிட்டிட்டு படிடான்னு சொன்னா"..... இப்படியான உரையாடல்கள் நிகழ ஆரம்பித்தன.

"காலைல இருந்து பொம்பள புள்ள மாதிரி வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கே..... எங்கயாவது போய்ட்டு வாயேண்டா....... சரியான சோம்பேறியா மாறிட்டே....."
அப்பாவின் அநாவசிய கவலைகள் எல்லாம் புத்தன் வாக்கிற்க்குள் மூழ்கி போயிருக்கின்றன. (அதென்ன ! பொம்பள புள்ள மாதிரி வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறது என்று சண்டை பிடிப்பவர்கள் மன்னிக்கவும்.....)

அப்படியாக படிக்க ஆரம்பித்தது தான் புத்தனும் புத்தகங்களும். (புத்தம் சரணம் கச்சாமி, புத்தகம் சரணம் கச்சாமி பதிவுகளுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை) இன்று சாப்பாடில்லாவிட்டாலும் பரவாயில்லை புத்தகங்கள் இல்லாமல் இருக்க முடியாதென்கிற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. வேலை சார்ந்ததோ கருத்து சார்ந்ததோ புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டும் எப்பொழுதும் ஒட்டிக் கொண்டு இருக்கவே செய்கிறது. சின்ன வயசில சிறுவர்மலரில் படம் பார்ப்பதுண்டு. படம் பார்ப்பதற்க்காகவே சில மாயாவி கதைப் புத்தகங்களையும் வாங்கியதுண்டு.

விடலை பருவத்தில் அதுவே கொஞ்சம் கலர்புல்லாக வண்ணப்படங்களுக்காகவும் சில த்ரிஷாக்களுக்காகவும் சில நடுப்பக்க நாயகிகளுக்காகவும் வாங்க ஆரம்பித்ததுதான் இந்த வார இதழ்கள். மனிதனுக்கு மூன்று விலைமதிப்பற்ற பொருட்கள் கிடைக்கின்றன. நல்லது, கெட்டது அவற்றை தேர்ந்தெடுக்கும் விவேகமுள்ள புத்தி. எத்தனை நாள் தான் நடுப்பக்க நாயகி கிளர்ச்சியும் குளிர்ச்சியும் ஊட்டுவாள். அடுத்த பக்கங்களையும் படிக்க ஆரம்பித்தேன். வார இதழ்கள் நாளிதழ்களுக்கும் பின்பு அனைத்து இதழ்களுக்கும் வழிநடத்தின. எல்லாம் ஒரு கனவு போல் இருக்கிறது. ஒரு ஐந்து ஆறு வருடங்கள் ஓடிப்போய்விட்டன.

முதலில் வலைப்பூக்களில் இத்தகைய மீமீக்கள் நடைபெறுவது தெரிந்தவுடனே என்னுடைய அனுபவங்களையும் எழுத வேண்டும் போல் இருந்தது. யாருமே அழைக்காமல் இருந்ததால் பொறுமை காத்து வந்தேன். அன்பு என் பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் (மாட்டிவிட்டிட்டு வேடிக்கையா பாக்கறீங்க....உம்ம அப்புறம் கவனிச்சுக்கறேன்)

"memes are the cultural counterpart of genes", ஒரு கலாச்சாரத்தின் அணுநுட்பமே மீமீக்கள்... வலைப்பதிவில் இதனை ஆரம்பித்த அந்த மீமீ நாயகனுக்கு

இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை இந்த மீமீ தொடருக்கு அழைத்த நண்பர் அன்பு அவர்களுக்கும் எனது நன்றிகள்.

என்னிடம் மொத்தமாக ஒரு 200 புத்தகங்கள் இருக்குமென நினைக்கிறேன்.

அவற்றுள் நாவல்களையும், நடுப்பக்கத்தில் நாயகிகள் இல்லாத புத்தகங்களையும் தவிர்த்து நல்ல புத்தகங்கள் என நான் பாதுகாப்பவை.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
கல்கியின் பொன்னியின் செல்வன்
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்
வைரமுத்துவின் தண்ணீர் தேசம்
வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
மகாத்மாவின் சத்திய சோதனை
அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள்
சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி
எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து
சுவாமி சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
ஓஷோவின் தம்மபதம்
மதனின் வந்தார்கள் வென்றார்கள்


கவிதைகளின் நான் அடிக்கடி புரட்டிப் பார்க்கும் புத்தகங்கள்

அப்துல் ரகுமானின் ஆலாபனை
வெண்ணிலாவின் நீரிலலையும் முகம்
அறிவுமதியின் நட்புக்காலம்


ஆங்கிலப் புத்தகங்களில் இப்பொழுது கைவசம் இருப்பவை
Beautiful mind - Sylvia Nasar
The Alchemist - Poelo Coelho
Monk who sold his ferrari - Robin S.Sharma
Da Vinci code - Dan browne
God Father - Mario Puzo
You can win - Shiv khera
Long walk to freedom - Nelson Mandela
Mein kempf - Adolf Hitler
Ignited Minds - Abdul Kalaam
Anthem, For the new intellectual - Ayn Rand
Kaizen - Taichi Ohno
Oliver Twist - Charles Dickens


இன்னும் சில ஐன் ரேண்ட் புத்தகங்களையும் பாலோ கோல்ஹோ புத்தகங்களையும் படிக்க வேண்டும் என ஆசை. கண்டிப்பாக இன்னும் ஒரு 25 வருடங்களாவது உயிரோடு இருப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருப்பின் இந்த லிஸ்ட்டில் இன்னும் ஒரு 400 புத்தகங்கள் சேர்ந்திருக்கலாம்.

பார்ப்போம்.!!! புத்தகங்களின் தோழமை எப்படியென்று...
நானும் ஒருகாலத்தில் பாடுவேன்
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே" --- என புத்தகங்களிடம்.

நான் அடுத்ததாக இந்த மீமீக்கு அழைப்பது

மணிகண்டன்
மதுரை-மல்லி
ரசிகவ்
தாரா
கறுப்பி

7 comments:

கறுப்பி said...

கணேஸ் நன்றிகள் என்னை அழைத்ததற்கு. புத்தரின் நல்ல செய்திகளைத் தந்திருக்கின்றீர்கள். நானும் முயன்றவரை அப்படித்தான் வாழ முயல்கின்றேன். அதனால் நான் வாங்கும் அடிகள் பல. பெண் என்பது காரணமாக இருக்கலாம்.

அன்பு said...

அருமையா எழுதியிருக்கீங்க. நிறைய படிக்கிறீங்க போல. நீங்கள் தமிழில் வைத்திருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் என்னிடமும் இருக்கிறது, படித்திருக்கிறேன். இருந்தாலும் யாரோ ஒருவர் எழுதியிருந்தாரே - எத்தனை புத்தகம் படித்து என்ன - நாம் அதன்படி வாழ்ந்தால்தானே படித்ததன் பயனாகும் - அதனால் முயற்சி செய்கிறேன்.

நன்றி.

Thangamani said...

நீண்ட நாள் வாழ்ந்து நல்லா படிங்க!!

Chandravathanaa said...

நீங்கள் படித்தவறற்றில் சிலவற்றை நானும் படித்துள்ளேன்.
மதனின் வந்தார்கள் வென்றார்கள் என்னிடமும் உள்ளது.

Ganesh Gopalasubramanian said...

கறுப்பி முயற்சியைக் கைவிடாதீர்கள்.....வெற்றி உங்களுக்கே....

அன்பு, தங்கமணி, சந்திரவதனா...... பெரியோர்களுக்கு நன்றி....

தங்கமணி தங்கள் ஆசிக்கு ஸ்பெஷல் நன்றி

Vaa.Manikandan said...

நான் ஐதராபாத்தில் உள்ளேன்.விரைவில் எழுதுகிறேன்.

Karthik Murugan said...

//*இன்னும் ஒரு 25 வருடங்களாவது உயிரோடு இருப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது*//

எதுக்குங்க இப்படி?
:)