Tuesday, August 30, 2005

சிற்றன்பங்கள்

சென்ற மாதம் ஊருக்கு விடுமுறையில் சென்று வந்த பொழுது பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்தேறின. பணத்தைச் சுற்றி உலகம் சுற்றிக் கொண்டே தான் இருக்கும். ஆனா பாருங்க சின்ன சின்ன விஷயங்கள் கூட அவ்வப்போது நமக்கு இன்பம் தருவதுண்டு. அப்படி நிறைய விஷயங்கள் எனக்கு தோன்றின.

சாலையில் போகும் போது வெகு அருகில் பறக்கும் சிட்டுக்குருவி. ஷூ பாலிஷ் செய்து விட்டு அதிகம் கொடுத்தாலும் வேண்டாமென்று நேர்மையுடன் அந்த சாலையோர தொழிலாளி வாங்கும் இரண்டு ரூபாய். "எப்படி சார் இருக்கீங்க?" ஒரு தடவை நின்று பேசியதற்க்காக தினமும் கடந்து செல்லும் பொழுது விசாரிக்கும் டீக்கடைக்காரன். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் இருக்கும் இன்பங்கள் பல. நாம் இப்படி யாருக்காவது இன்பம் தருவதுண்டா என்று எனக்கும் அடிக்கடி தோன்றும். சந்தேகத்துடன் இதைப் போய் யாரிடம் கேட்பது என்று எனக்குள் நானே மறைத்துக் கொள்வேன். ஆனால் இவை போல சின்ன சின்ன விஷயங்கள் தான் நமது அன்றாட பழக்க வழக்கங்களைத் தீர்மானம் செய்கின்றன. பணத்தை உதாசீனப்படுத்திவிட்டு கொஞ்சம் பாசத்தையும் கொஞ்சம் பழக்கத்தையும் முதலீடாக கொண்டு நடைபோடுவது தான் இத்தகைய உறவுகள்.

ஜார்ஜ் லோரிமெர் என்னும் ஒரு ஆங்கில பத்திரிக்கையாளர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

It's good to have money and the things that money can buy, but it's good, too, to check up once in a while and make sure that you haven't lost the things that money can't buy.
மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு பணம் தான். ஆனால் அது வெறும் கண்டுபிடிப்பே. மனிதன் மனிதனாக இருப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனா இன்றைய தேதியில் ஒவ்வொரு மனிதனின் மற்ற குணாதிசயங்களை நிர்ணயிப்பது இந்த பணம் தான். எப்பொழுது பணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அல்லது உதாசீனப்படுத்தப்பட்டு மனிதனின் மற்ற குணநலன்கள் வெளிப்படுகிறதோ, அது மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாக இருக்கும் பொழுது அதில் நெகிழ்வும் அன்புமே மேலோங்கி நிற்கிறது.

அப்பாவிடம் பணம் வாங்கிச் செல்லும் மகன், மகன் கேட்பதற்கு முன்னரே அவனது சட்டைப் பாக்கெட்டில் பணத்தை வைக்கும் அப்பா, உடன் வசிக்கும் நண்பனை விட்டுவிட்டு சாப்பிடாமல் இருக்கும் கல்லூரி மாணவன் என நமக்கு இன்பம் அளித்த அளித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு விஷயமும் பணத்தை தவிர்த்து நமது குணநலன்களை வெளிப்படுத்திய ஒன்றாகவே இருக்கிறது. கல்லூரி வாழ்க்கையோடு இத்தகைய நல்ல விஷயங்களும் முடிந்து போவதும் பணத்தாலே தான்.

மகனிடம் பணம் கேட்க தயங்கும் அப்பா, பணம் கொடுத்தால் அப்பா வாங்குவாரோ மாட்டாரோ என தவிக்கும் மகன், நண்பனிடம் பணம் கேட்கலாமா கூடாதா என யோசிக்கும் அதே கல்லூரி தோழன் என நாட்கள் செல்ல செல்ல பணத்தின் வலிமை கூடி விடுகிறது. அதனால் எது நடக்க வேண்டுமோ அது நடக்காமல் போய் விடுகிறது. விளைவு விரிசல் சிக்கல் என அனைத்து பிரச்சனைகளும் வந்து சேர்கின்றன.

Henry van Dyke என்னும் ஆங்கில கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்

There is a loftier ambition than merely to stand high in the world. It is to stoop down and lift mankind a little higher.
உண்மை தானே. சிற்றன்பங்கள் மிக முக்கியமானவை அவை பணத்தை ஒதுக்குவதால் !!

15 comments:

Ganesh Gopalasubramanian said...

ஈஸ்வர்

படிச்சது எல்லாம் கோவில்பட்டில.... இப்போ வேலை பாக்கிறது டெல்லி பக்கம் நொய்டா. பி.இ (கம்ப்யூட்டர் சயின்ஸ்) நேஷனல் இஞ்ஜினியரிங் காலேஜ், கோவில்பட்டி. கவிதை கதை எழுத பிடிக்கும். சொல்லி கொள்ளும் அளவிற்கு எதுவும் சாதித்து விடவில்லை. எல்லோரையும் போல என் வழியில் போய்கிட்டு இருக்கேன் :-) வலைப்பூவில் எழுத ஆரம்பித்து 6 மாதங்கள் ஆகின்றன. ஒரு 80 பதிவுகள் போட்டிருக்கேன். கொஞ்சம் பேர் என் எழுத்தை தொடர்ந்து படிக்கிறாங்க....

Ramya Nageswaran said...

உண்மை தான் கணேஷ் நீங்க சொல்றது.... என் இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது ஒரு Bank லே நான் வேலை செஞ்சுகிட்டிருந்தேன். அங்கே டாய்லெட் க்ளீன் பண்ணுற ஒரு அம்மா மலேஷிய தமிழர், கிறிஸ்துவர். அவங்க கண்லே படும் பொழுது இரண்டு வார்த்தைகள் பேசுவேன். Maternity leaveலெ போகும் சமயத்திலே அவங்க கிட்டே போய்ட்டு வரேன்னு சொன்னேன். அப்ப அவங்க "கண்டிப்பா நல்லபடியா புள்ளை பொறக்கும்மா. உங்களுக்காக நான் தினம் கர்த்தருகிட்டே வேண்டிக்கிட்டிருக்கேன்" ன்னு சொன்னாங்க. இரண்டு வார்த்தைகள் பேசினதுனாலே என்ன ஒரு அன்பு பாத்தீங்களா?

அப்புறம் நானும் கேட்க நினைச்சதை ஈஸ்வர் கேட்டுட்டாரு.

Ganesh Gopalasubramanian said...

நன்றி ரம்யா

// வார்த்தைகள் பேசினதுனாலே என்ன ஒரு அன்பு பாத்தீங்களா? //

இதைத்தான் நிறைய பேர் பெரிய விஷயமா கருதுவதில்லை... ஒரு அலட்சியம் தான் எல்லார்கிட்டயும் இப்ப இருக்கு.....

வீ. எம் said...

//கோவில்பட்டில என்ன செய்றீங்க ??
///
கோவில்பட்டில வேற என்ன பன்றார், சிற்றின்பங்களை ரசித்துவிட்டு அது பத்தி பதிவு போடுறார்..
மற்றபடி கலக்கல் வேலையெல்லாம் டெல்லில தான் பன்றார்.. :)
=====
நல்ல பதிவு கனேஷ்.. இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தரும் இன்பம் பேரின்பம் (என்று நாம் நினைக்க்துக்கொள்ளும்) தரும் இன்பத்தை விட அதிகம்..

சமீபத்தில் என் கல்லூரி பேராசிரியர் ஒருவரை தற்செயலாக சந்தித்தேன்.. நான் சென்று ஹலோ என்று சொன்னேன்.. இரண்டு நிமிடம் யோசித்த அவர் என் பெயரை சரியாக சொல்லி ... எப்படிப்பா இருக்கே , என்ன பன்றே.. என்று விசாரித்தார்.,சாதாரண விஷயம் தான்.. ஒரு 5 நிமிட சந்திப்புத்தான்.. மீண்டும் அவரை சந்திப்பேனா தெரியாது.. 8 வருடங்கள் கழித்தும் அவர் என்னை நினைவுப்படுத்தி பேசியதால் அடைந்த சந்தோஷம்.. முதன்முறையாக நான் 5 இலக்க சம்பளம் வாங்கும் போது இருந்த சந்தோஷத்தை விட அதிகம் தான்..

கயல்விழி said...

சிற்றின்பம் பதிவு நன்றாக உள்ளது. அக்கா தங்கைகள் நண்பி நண்பர்கள் இவர்களிற்காய் விட்டுக்கொடுக்கிறதிலையும் இன்பம் உண்டு. வீதிகளில்
முதியோருக்கு உதவி செய்ய "கோட் பிளஸ் யு மை சைல்ட்" என்பார்கள் அதில இனம் புரியாத இன்பம் தோன்றும். அனுபவிச்சுப்பாருங்க.

Ramesh said...

இந்த மாதிரியான சில விஷயங்கள்தான் வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கையையும் பிடிப்பையும் ஏற்படுத்துது.

kirukan said...

Ganesh Very Nice article...

How is Kovilpatti?. visited NEC?. Btw, I will be there in Kovilpatti in November.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

வாழ்க்கையை அர்த்தமாக்குவதே இந்த மாதிரி சின்னச்சின்ன சந்தோசங்கள்தான்

Ganesh Gopalasubramanian said...

மாமன் மகள்

நேற்றைய தினம் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். திருமணமானவர் இரண்டு குழந்தைகளின் தந்தை. நல்ல மனிதர். வயது வித்தியாசம் பாராட்டாமல் நல்ல கருத்துக்களை சம வயதினர் போல் பகிர்ந்து கொள்வார்.

நன்றி வீ.எம், கயல்விழி, ரமேஷ், கிறுக்கன் & ஷ்ரேயா

@வீ.எம்

//மற்றபடி கலக்கல் வேலையெல்லாம் டெல்லில தான் பன்றார்.. :)//
யாரு நம்ம தயாநிதி மாறனா இல்ல அன்புமணியா :-)

// முதன்முறையாக நான் 5 இலக்க சம்பளம் வாங்கும் போது இருந்த சந்தோஷத்தை விட அதிகம் தான்..//
நான் போன மாதம் தான் பள்ளி ஆசிரியருடன் ஒரு மணி நேரம் பேசிட்டிருந்தேன். திரும்பவும் அவர் வகுப்பில் உட்கார்ந்து கொண்டே பாடம் (பாடமும்) கவனித்த ஞாபகம் வந்து விட்டது.

@கயல்விழி

// "கோட் பிளஸ் யு மை சைல்ட்"//
நானும் இது போல நிறைய ஆசி வாங்கியிருக்கிறேன்...

@ரமேஷ்
//நம்பிக்கையையும் பிடிப்பையும் ஏற்படுத்துது.//
நல்ல கெட்டியா பிடிச்சுக்கோங்க :-)

@கிறுக்கன்
//How is Kovilpatti?. visited NEC?. Btw, I will be there in Kovilpatti in November.//
ஆமா போகாமலா... முடிஞ்சா நானும் நவம்பரில் வருகிறேன்.


@ஷ்ரேயா
//சந்தோசங்கள்தான்//
கூடவே நீங்க சொன்ன "நோக்கும்" படலங்களும் தான் :-)

G.Ragavan said...

சின்னச்சின்ன சந்தோஷங்கள் மிகவும் இனிமையானவை.

மனித மனங்களுக்கிடையிலுள்ள இடைவெளியைக் குறைக்கும் இந்தச் சந்தோஷங்கள் மிகவும் அற்புதமானவை.

ஒன்றுமில்லை. அன்றைக்குக் காலையில் அப்பா ஊருக்கு வந்திருந்தார். மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பினார். நான் செய்திருந்ததை அப்படியே டிபன் பாக்சில் போட்டுக் கொடுத்தனுப்பினேன். அதில் அம்மாவுக்கு ஒரு சந்தோஷம்.

இன்னும் நிறைய சொல்லலாம். அன்றைக்கு ஹோட்டலில் பார்சல் வாங்க நின்றிருந்த பொழுது, வெந்த கோழியை அறுத்து கட்டிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஒரு சிறுவன் பிச்சை கேட்டான். பிஸ்கட் கொடுத்தா சாப்பிடுவியா என்று கேட்டேன். ஒத்துக் கொண்டதும் ஒரு சின்ன பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொடுத்தேன். அதை அவன் பிரித்துச் சாப்பிடுகையில் மகிழ்ச்சி. பிறகு அந்த பிஸ்கட்டை அவன் பைக்குள் வைத்தான். யாருக்கோ கொடுக்கத்தான். அவனுக்கும் ஒரு சிற்றின்பம்.

நல்ல பதிவு கோ.கணேஷ்.

Ganesh Gopalasubramanian said...

@ராகவன்
//அதில் அம்மாவுக்கு ஒரு சந்தோஷம்.//
கொண்டு போகும் போது அப்பாவுக்கு இருந்த பெருமிதம் அதவிட ரொம்ப அதிகமாக இருந்திருக்கும்....

//அவன் பைக்குள் வைத்தான். யாருக்கோ கொடுக்கத்தான். அவனுக்கும் ஒரு சிற்றின்பம்.//
உண்மையிலேயே நெகிழ்வா இருக்கு

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//@ஷ்ரேயா
//சந்தோசங்கள்தான்//
கூடவே நீங்க சொன்ன "நோக்கும்" படலங்களும் தான் :-)//

ஆஹா..இதுக்குத்தான் அவ்வ்வ்ளோ உன்னிப்பா பதிவை வாசிச்சிங்களா..ம்ம்..ம்ம் நோக்குங்க நோக்குங்க..நோக்கிகிட்டே இருங்க.. ;O)

p.s: "குலதெய்வம்" வாக்கு ஞாபகமிருக்குத்தானே! ;O)

துளசி கோபால் said...

கணேஷ்,
இப்பத்தான் உங்க பதிவைப் படிச்சேன். அருமை!!!!

(ரெண்டு நாளா ஸ்ப்ரிங்க் க்ளீனிங் உடம்பைக் கசக்கிப் பிழிஞ்சுடுச்சில்லே!)

சுத்தமான வீட்டைப் பார்த்ததும் சந்தோஷமா இருந்துச்சு. தேங்ஸ்ன்னு சொன்னேன் கோபாலுக்கு:-))))

Ganesh Gopalasubramanian said...

@ஷ்ரேயா
//p.s: "குலதெய்வம்" வாக்கு ஞாபகமிருக்குத்தானே! ;O)//
ஞாபகமிருக்குது !!! நமக்கு ஒரு வாக்கு ஒரு நாக்கு....

@துளசி
//சுத்தமான வீட்டைப் பார்த்ததும் சந்தோஷமா இருந்துச்சு. தேங்ஸ்ன்னு சொன்னேன் கோபாலுக்கு:-)))) //
ஏனுங்க உங்களுக்கு இது சிற்றின்பமா?? என்ன சொல்ல கோபால் சார ஆண்டவன் தான் காப்பாத்தனும்

Ramesh said...
This comment has been removed by a blog administrator.