Friday, September 19, 2014

மேண்டலின் ஸ்ரீநிவாஸ் அஞ்சலி!

அந்தக் காலத்தில் தாத்தா வாங்கச் சொல்லிய ஆடியோ கேசட்டுகளில் முக்கால் வாசி மேண்டலின் ஸ்ரீநிவாஸுடையது தான். மழலை மாறாத அந்த முகம் பதித்த கேசட் கவர் இன்னும் மனதில் நிற்கிறது. பால்யத்திலேயே இசையில் தேர்ந்த இடம் பிடிக்க முடியும் என்பது ஸ்ரீநிவாஸால் என் மனதில் பதிந்த உண்மை.




தாத்தாவை நினைக்கும் பொழுதெல்லாம் ஸ்ரீநிவாஸ் நினைவுக்கு வருவது தற்செயல் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் கேசட்டுகளாக நான் வாங்க ஆரம்பித்த நேரம் தாத்தா தவறாமல் மேண்டலின் கேசட் போடச் சொல்வார். எனக்கு அந்த வயதில் அவர் இதைச் சொல்லிய பொழுதெல்லாம் எரிச்சல் மட்டுமே வரும். தாத்தா எங்கள் தெரு பிள்ளையார் கோவிலுக்கு ஸ்ரீநிவாஸ் கேசட் ஒன்று வாங்கித் தர சொல்லிய ஞாபகம் கூட இருக்கிறது.

முகங்களின் நினைவுப்பதிவேடுகள் விசித்திரமானவை. தாத்தாவுக்கு கண் பார்வை 80களின் இறுதியில் இல்லாமல் ஆன பின், என் முகத்தை ஒரு முறை தடவி பார்த்து மேண்டலின் ஸ்ரீநிவாஸ் முகம் ஞாபகம் வருவதாக கூறியிருக்கிறார். அந்தச் செயல் பாசம் கலந்த கற்பனையின் விசித்திரம். ஸ்ரீநிவாஸ் என்பது அவருக்கு வளர்ந்த கணேஷ். கணேஷ் வளரப்போகும் ஸ்ரீநிவாஸ். கண் பார்வை இல்லாத அவரால் அப்படித்தான் நினைத்திருக்க முடியும்.




ஸ்ரீநிவாஸ் இன்று இறந்து விட்டாராம். தாத்தா இறந்து 11 வருடங்கள் ஆகின்றன. ஸ்ரீநிவாஸ் படம் பதித்த அந்த ஆடியோ கேசட் இன்னும் வீட்டில் இருக்குமென்று நினைக்கிறேன்.

No comments: