Wednesday, August 31, 2005

வெட்டிக்கத - வித்தியாச யோசனைகள்

  • திடீரென்று குள்ளராகிவிட்டால் என்ன நடக்கும்?
  • வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் தூரம் ஒரு கிலோமீட்டர் தான் என்று மாறிவிட்டால்?
  • பூமி என்பது மண்ணால் ஆகாமல் உடைபடாத இரும்பால் ஆகியிருந்தால்?
  • ரஜினி என்பவர் கண்டெக்டராகவே இருந்திருந்தால்? (இது கொஞ்சம் ஓவர்.... இருந்தாலும் இது ரஜினி சீஸன் என்பதால் இந்த கேள்வி ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது)

மேலே உள்ள விஷயங்கள் எல்லாம் நடந்தால் !! நினைச்சுப் பாருங்க. ஒரு வித்தியாசமான உலகத்தில உலாவுறத போல இருக்குதுல்ல. கீழயிருக்கிற படங்கள பாருங்க இன்னும் விசேஷமா நிறைய விஷயங்கள் தோணும்.

சும்மாவாவது எதையாச்சும் யோசிக்கறது ரொம்ப நல்ல விஷயம். அதுவும் சம்பந்தமில்லாத நடக்கமுடியாத விஷயமாக இருந்தா அந்த யோசனைகள் சில சமயம் சந்தோஷத்தைத் தருவதுண்டு.

அந்நியன் படத்தில வர்ற சார்லி மாதிரி தூங்கறதும், தூங்கியதனால களைப்பாவதும், பின்பு தூங்குவதும் ஒரு வகையில் இந்த மாதிரி யோசனையால் தான் (அடிக்க வராதீங்க....சில சமயம்தான் இந்த மாதிரியான யோசனைகள் இன்பம் தருவதுண்டு). மத்தவங்களுக்கு துன்பம் தராதவரை நம்ம யோசனைகளெல்லாம் நல்லவைதான் (அட!! இன்பம் தர முடியலேன்னா கூட). "லூசாப்பா நீ?"ன்னு பிதாமகன் படத்தில லைலா மேடம் கேட்கிற மாதிரி நீங்களும் கேட்கனும்னு நினைக்கிறீங்களா? சரி சரி விடுங்க சொல்ல வந்ததை சொல்றேன்.

இப்படியாக தேவையில்லாததைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும் பொழுது திடீரென உலகம் அழிஞ்சு போச்சினா அடுத்து வர்ற ஜெனரேஷனுக்கு என்னத்த விட்டுட்டுப் போறோம்னு யோசிச்சிட்டிருந்தேன். (இப்போ தெரிஞ்சு போச்சு, கேட்டு புண்ணியமில்ல நீ சரியான லூசு தான்!) முன் காலத்தில அத உபயோகிச்சாங்க இத உபயோகிச்சாங்கன்னு நிறைய சொல்றாங்க. எல்லாத்துக்கும் அகழ்வாராய்ச்சி, வரலாற்று சுவடுகள் அது இதுன்னு சாட்சிகள் இருக்கின்றன. இப்போ ஒருவேளை நாம இருக்கிற உலகம் அழிஞ்சு போச்சுன்னு வச்சுக்கோங்க அப்போ நாம உபயோகப்படுத்துக்கிட்டிருந்த (உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிற) இந்த செல்போன், டிவி, விமானங்கள், நாம வானத்தில நிறுவியிருக்கிற அந்த செயற்கைக்கோள்கள் என நம்முடைய கண்டுபிடிப்புகள் எல்லாமே அடுத்து இந்த உலகத்தில வாழப்போறவங்களுக்கு தெரியாமப் போயிரும்ல... (வந்துட்டாருல்ல லார்டு லபக்கு தாஸூ)

அப்ப நாம உபயோகப்படுத்திக்கிட்டிருக்கிற இந்த அரிய கண்டுபிடிப்புகளை எல்லாம் எப்படி கட்டி காக்க முடியும்? எல்லாத்தையும் மண்ணுல போட்டு புதைச்சிரலாமா? (ஏண்டா ! அதுக்கா செயற்கைக்கோள்கள கண்டுபிடிச்சோம்னு நம்ம சயிண்டிஸ்டுங்க எல்லாம் சண்டை பிடிச்சிராம...) வேற என்னவெல்லாம் செய்யலாம்? (அவரவர் ஐடியாக்களைப் பின்னூட்டமிடலாம். நல்ல தரமான ஐடியாவுக்கு நம்ம முகமூடி சார் பரிசு வழங்குவார்...). அவற்றையெல்லாம் வருங்காலத்துக்கு எப்படி பாதுகாப்பது என்பது எனக்கு தோணவே மாட்டேங்குது. (எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் ஹி ஹி ஹி!!! ) நீங்களும் முடிஞ்சா முயற்சி செஞ்சு மன்னிக்கவும் யோசிச்சுப் பாருங்க. கேட்க வந்தத கேட்டாச்சு இப்பத்தான் ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு.

இந்த பதிவ எழுதிக்கிட்டிருக்கும்பொழுது மின்னஞ்சலில் வந்த துணுக்கு !!

ஒரு தடவ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் & இந்திய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில சண்டை வந்ததாம்.

அப்போ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 50 அடி தோண்டுறாங்க. செம்பு கம்பி ஒண்ணு கிடைக்குது. இத சாக்காய் வச்சுகிட்டு 25,000 ஆண்டு முன்னரே தங்கள் நாட்டில் தொலைபேசிகள் இருந்ததாக அறிவிக்கிறாங்க.

இதைக்கேட்டுட்டு ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 100 அடி தோண்டுறாங்க. சின்ன கண்ணாடி துண்டு கிடைக்குது. உடனே தங்கள் நாட்டில் 35,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒளி இழை (fibre optic) உபயோகத்தில் இருந்ததாக அறிவிக்கிறாங்க.

நம்ம இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு கோபம். உடனே பூமியில் 150 அடி தோண்டுறாங்க. எதுவும் கிடைக்கல. விடாம இன்னும் ஒரு 50 அடி தோண்டுறாங்க அப்பவும் எதுவுமே கிடைக்கல. உடனே இந்தியாவுல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கம்பியில்லா இணைப்புகள் (wireless connections) இருந்ததாக அறிவிக்கிறாங்க.... எப்படி ??

படங்கள்



9 comments:

குழலி / Kuzhali said...

//நம்ம இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு கோபம். உடனே பூமியில் 150 அடி தோண்டுறாங்க. எதுவும் கிடைக்கல. விடாம இன்னும் ஒரு 50 அடி தோண்டுறாங்க அப்பவும் எதுவுமே கிடைக்கல. உடனே இந்தியாவுல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கம்பியில்லா இணைப்புகள் (wireless connections) இருந்ததாக அறிவிக்கிறாங்க.... எப்படி ??
//
இதை வைத்து ஒரு பதிவு எழுதிக்கொண்டிருந்தேன், அதற்குள் தங்கர் வந்துவிட்டதால் அதை வார இறுதிக்கு தள்ளிவைத்தேன், நீங்கள் முந்திக்கொண்டீர், இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கின்றேன் ஏதாவது முடியுமா என்று.

படங்கள் ஏற்கனவே பார்த்தது தான் என்றாலும் பதிவோடு நன்றாக உள்ளது

நன்றி

Ganesh Gopalasubramanian said...

நன்றி குழலி படங்களெல்லாம் சுட்டவை தான்.

உங்கள் பதிவையும் சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்

ilavanji said...

இப்படியெல்லாம் உம்மை மாதிரி சில பேரு பிற்காலத்துல கெளம்புவ்வாங்கன்னுதான் நம்ப ஆளுங்க அப்பவே ஆண்டவனின் அறிய கண்டுபிடிப்பான மனுசங்களையே வயசான பிறகு தாழில போட்டு பொதைச்சிருக்காங்க! :)

வீ. எம் said...

ஹா ஹா ஹா நல்ல பதிவு கனேஷ்., எப்படிய்யா இது மாதிரி எல்லாம் யோசனை வருது?
////இருந்தாலும் இது ரஜினி சீஸன் என்பதால் இந்த கேள்வி ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது) ///

இன்னொரு 'தங்க'மான மேட்டரும் இப்போ ஹாட் டாபிக் , அதையும் சேர்த்திருக்கலாமே? :)

எனக்கும் இது மாதிரி ஒரு யோசனை வரும், திடீர்னு மனிதர்களுக்கு 3 கால் வந்துச்சுனா என்ன பன்றதுனு??
என்ன பெரிய பிரச்சனைனா, நாம் இப்போ வெச்சிருக்க கால்சட்டை (pant) எல்லாம் அப்படியே use செய்ய முடியாது... ஒன்னு , இன்னொரு கால் சேர்த்து ஆல்டர் பன்னனும், இல்லைனா புதுசா மூனு கால் வெச்ச பேன்ட் வாங்கனும்.. :) pant விக்கிற விலையில., அப்பா யோசித்து பார்க்கவே பயமா இருக்கு.. :)

எப்படி அழியும்னு சொல்லலயே கனேஷ், பூமினு ஒன்னு இல்லாமயே போயிடும்னு சொல்றீங்களா??
இல்லை பூமியில் இருக்க மனிதர்கள் , பொருட்கள் அழிஞ்சு போயிடுமா??

எப்படியோ.. அடுத்த ஜெனரேஷன் தெரிஞ்சுக்க வேண்டிய எல்லா விஷயத்தையும் ஒரு பதிவா போடுங்க .. அதை நான் ஒரு 10 பிரிண்ட் அவுட் எடுத்து, எல்லா கிரகத்துலயும் ஒவ்வொரு காபி, அப்புறம்..இங்க பூமிலயும் plastic cover கவர்ல போட்டு புதைத்து வெச்சிடலாம்.. நிச்சயமா அடுத்த ஜெனரேஷன் , நாம செய்ததை விட சீக்கிரமா, பூமிய தோண்டி பார்ப்பாங்க.. வேற்று கிரகத்துக்கு போவாங்க :)

சீக்கிரம் பதிவு போடுங்க.. எல்ல மேட்டரையும் கவர் பன்னனும் ..ஒகே வா?

துளசி கோபால் said...

கணேஷ்,

நான் முந்தியெல்லாம் யோசிக்கிறது மனுஷனுக்கு வால் இருந்தா எப்படி இருக்கும்னு.
அந்தக் காலத்துலே(!)ஒரு 33 வருசத்துக்கு முன்னாலே சென்னையிலே எலெக்ட் ரிக் ட்ரெயின்லே
ஆஃபீஸ் நேர நெரிசல்லே போகும்போது, ஒரே பயமா இருக்கும் யார் காலையாவது மிதிச்சிடப் போறமோன்னு.
அதுவும் மிதிபடப்போறது கூடையில் பொருள்களைச் சுமந்துவந்து விற்கும் பெண்களோ, அல்லது சாப்பாட்டுக்
கூடை கொண்டுபோகும் பெண்களாகவோ இருந்தால் அவ்வளோதான். நம்மை நார்நாராக் கிழிச்சுத் தோரணம்
(எல்லாம் வார்த்தைகளாலேதான்) கட்டிருவாங்க.ஒரே 'கால் கால்'தான்.

நல்லவேளை,மனுஷனுக்கு வால் இல்லை. இல்லேன்னா 'வால் வால்'ன்னு கத்தவேண்டியிருந்திருக்கும்

Ganesh Gopalasubramanian said...

@இளவஞ்சி
// ஆண்டவனின் அறிய கண்டுபிடிப்பான மனுசங்களையே வயசான பிறகு தாழில போட்டு பொதைச்சிருக்காங்க! :) //
முன்னோர்கள் உஷார் பார்ட்டிகள் தான்னு சொல்லுங்க

@வீ.எம்
//இன்னொரு 'தங்க'மான மேட்டரும் இப்போ ஹாட் டாபிக்//
அது எனக்கென்னவோ தங்கரு "நாயை அடிப்பானேன்....சுமப்பானேன்" கதைக்கு தள்ளப்பட்டாருன்னு தோணுது.

//plastic cover கவர்ல போட்டு புதைத்து வெச்சிடலாம்.. நிச்சயமா அடுத்த ஜெனரேஷன் , நாம செய்ததை விட சீக்கிரமா, பூமிய தோண்டி பார்ப்பாங்க.. வேற்று கிரகத்துக்கு போவாங்க :)//
செஞ்சிடலாம் வீ.எம்..... அரட்டை அரங்கத்தோட பதிவுகளையும் கோப்பா எனக்கு அனுப்பு வைங்க...... சேர்த்து புதைச்சிடுவோம்..... செத்தாலும் சேர்ந்தே பேர் வாங்குவோம் என்ன சொல்றீங்க.........

@துளசி
//நல்லவேளை,மனுஷனுக்கு வால் இல்லை. இல்லேன்னா 'வால் வால்'ன்னு கத்தவேண்டியிருந்திருக்கும்//
நல்ல கற்பனை துளசி... நான் கீபோர்ட் வச்சிட்டு வேலை பாக்கிறதனால தானோ என்னவோ கீ கீன்னு கத்திக்கிட்டு இருக்கேன்.

வீ. எம் said...

//நான் கீபோர்ட் வச்சிட்டு வேலை பாக்கிறதனால தானோ என்னவோ //

நான் மவுஸ் (mouse) வெச்சி வேலை பாக்கிறதனாலோ என்னவோ நான் , கீச் கீச் னு கத்திகிட்டு இருக்கேன்.. :) :)

Ramesh said...

//திடீரென்று குள்ளராகிவிட்டால் என்ன நடக்கும்?//

அப்பவும் எதனாலெல்லாம் நடக்க முடிகிறதோ அதுவெல்லாம் நடந்து கொண்டுதானிருக்கும்.

//வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் தூரம் ஒரு கிலோமீட்டர் தான் என்று மாறிவிட்டால்?//

1) இமயமலையின் உச்சியை அடைய இவ்வளவு சிரமப்படத் தேவையில்லை. ஒரு கிலோமீட்டருக்குப் பிறகு பறந்தே சென்றிருக்கலாம்.

2) இடி தலைக்கு மேலேயே உற்பத்தியாகும்.

//பூமி என்பது மண்ணால் ஆகாமல் உடைபடாத இரும்பால் ஆகியிருந்தால்?//

நம்ம எல்லாருக்கும் முதல் அக்னி நட்சத்திரத்தில் சங்கு.

//ரஜினி என்பவர் கண்டெக்டராகவே இருந்திருந்தால்?//

கணேஷ், ரஜினி கண்டெக்டராகவே 'இருந்திருக்க' மாட்டார் னா நினைக்கிற? :)

(just kidding, no offence meant)

லதா said...

//ஒரு தடவ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் & இந்திய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில சண்டை வந்ததாம்.//

பலருக்குத் தெரிந்திருக்கக்கூடிய ஒரு சர்தார்ஜி நகைச்சுவை :-))

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், கண்ணிற்கு எளிதில் தெரியாத அளவு மெல்லிய கம்பி ஒன்றைச் செய்தார்களாம். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதில் நெடுக்குவாட்டில் ஒரு ஓட்டை போட்டுக்கொடுத்தார்களாம். நம்ப ஆளுங்க என்ன செய்தார்களாம் தெரியுமா ? அதில் Made in INDIA என்று அச்சடித்துக் கொடுத்துவிட்டார்களாம்.