Friday, June 25, 2010

மழைக்காதல்

அந்த மழைநாளின் 
மின்னலின் வெளிச்சத்தில்
மழையின் விரல்களின் நடுவே தான் 
உன்னைப் பார்த்தேன்.

உன்னைக் காணாமல்
மின்னல் என்னும் விக்கலுடன்
அழுகிறது வானம்
தூறலைப் பெருமழையாக மாற்றி.
சீக்கிரம் வெளியே வா!

பாதணிகளின்றி நடந்து செல்கிறாய் நீ
கால்தடங்களாகவும் கொலுசொலிகளாகவும்
உடன் வருகிறது காதல்.

மழையில் நீட்டியபடி உள்ளங்கை நனைக்கிறாய்
கைகளில் நெளியும் ரேகைகளென
காதலும் நனைந்து கோண்டிருக்கிறது.

உன்னைப் பார்த்தபடி 
வானில் நடக்கும் மேகங்கள்
வழிமாறி மோதுகின்றன
மழையென தம் காதலுதிர்த்து.

அடிக்கடி கண்சிமிட்டுகிறாய் நீ
அதில் துவங்கும் மின்னலுடன்
பொழியும் மழைநீர் தான் 
என்னை நனைக்கிறது.

உன்மீது காதல் கொண்ட 
மர இலைகள் 
நீ வந்த பின்பு தூவுகின்றன
சேமித்து வைத்த மழைத்துளிகளை!

உன் பாதம் தொட்ட மழைத்துளி
பரிகசிக்கிறது உன் தலையில் முடிந்த
மழைத்துளியைப் பார்த்து!
உன்னைக் கடந்த தொலைவிற்காக

எல்லாவற்றையும் கண்டு
கண்மை கரைசல் நீங்கலாக
உன்னைக் கரைத்துப் பார்த்து முடியாமல் 
விழுந்து கொண்டிருக்கிறது மழைநீர்!

3 comments:

அன்புடன் நான் said...

மழைக்காதல் மனதை நனைக்கிறது.

Karthikeyan said...

மழையே அழகுதான்.. அதனுடன் காதலும் சேர்ந்து கொள்ளை அழகு..!

குட்டிப்பையா|Kutipaiya said...

மழையும் காதலும்...
அருமை...