Friday, October 01, 2010

எந்திரன் - விமர்சனம்

முதல் நாள் முதல் ஷோ பாத்திட்டு வந்து விமர்சனம் எழுதலேனா அதுவும் தலைவர் படத்துக்கு எழுதலேனா நானெல்லாம் சுத்த வேஸ்ட். தலைவர்னு சொல்லிட்டதாலேயே இந்த விமர்சனத்துக்கு ஒருவித சாயல் வந்திருக்கும். அது கண்டிப்பா இருக்கத்தான் செய்யும். ராவோட ராவா 500 கி.மீ பஸ்ல வந்து, ஊர்ல காலடி வச்சது காலை 0230 மணிக்கு. 0700 மணிக்கு முதல் ஷோ. இவ்வளவு மெனக்கெட்டது எல்லாம் அந்த தலைவர்ங்கிற சங்கதிக்காகத்தான். அந்த சாயல் இல்லாம என்னால விமர்சனம் எழுத முடியாது. ஒண்ணு மட்டும் சொல்ல முடியும் தலைவருக்காக மட்டுமே இந்த விமர்சனம் இல்லை.

ஒரு எந்திரத்துக்கு மனித உணர்ச்சிகள் இருக்கலாமா? இருந்தால் என்ன ஆகும்? அப்படின்னெல்லாம் ஒரு வரில படத்தோட கருவ  எழுத முடியாது. படத்தில விஷயம் நிறைய இருக்கு. விஷயமேயில்லாம நிறைய காட்சிகள் இருக்கு. இந்த படத்தை தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான முயற்சியா நான் கருதியதற்கு காரணம் கதைக்களம், அதிலிருக்கும் அறிவியல் பின்புலம், பெரிய பெயர்கள், மற்றும் உலகளவில் இது ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பு. அதனால் தமிழ் சினிமாவின் உலகளாவிய கனவுகளுக்கான முதல் படியாக இந்த படம் இருக்கப்போகிறதென்ற கருத்து வேறு இருந்தது. இப்படி எந்திரன் மூலம் தமிழ் சினிமாவின் எதிர்கால சாத்தியக்கூறுகள் ஏகப்பட்டவை. அறிவியலின் நன்மை தீமை பற்றி மூன்றாம் வகுப்பு முதல் படித்தும் எழுதியும் வருகிறோம். அதி நவீன அறிவியல் படைப்புகளின் சாத்தியங்கள், தேவைகள், வரம்பெல்லைகள், நன்மை தீமைகள், போன்றவற்றை  பாமரனுக்கும் கொண்டு செல்லும் விதமாக எந்திரன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் என்னிடம் இருந்தது. எதிர்பார்ப்புகள் ஒரு 60% பூர்த்தியாகியிருக்கின்றன.

விஞ்ஞானி வசீகரன் ஒரு எந்திரனை உருவாக்குகின்றார். இராணுவத்தில் மனிதர்களுக்கு பதில் எந்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பது வசீகரனின் ஆசை. எந்திரனின் ஆக்கம், தோற்றம் இவையெல்லாம் ஒரு பாடலில் முடிகிறது. நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்கிறது. வசீகரனைப் போலவே இருக்கிறார் எந்திரன். எந்திரனின் ஞானம், குணநலன்கள் பறைசாற்றப் படுகின்றன காட்சிகளில் மசாலாவுடன்.

உதாரணத்திற்கு மொழிக் கணிணியியல் (language processing) என்பது எந்த ஒரு எந்திரனுக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான தொழில்நுட்பம். எந்திரனில் அது சொல்லப்பட்டிருக்கும் விதம் முகம் சுழிக்க வைக்கிறது. ”டிவியைப் போடு” என்று சொன்னதற்கு எந்திரன் டிவியை அலேக்காக தூக்கி கீழே போடுகிறார். ”கீழே போடு” என்பதற்கும் ”போடு” என்பதற்கும் ”வீசு”, ”எறி” என்பனவற்றுக்கும் இருக்கும் வேற்றுமையை எந்திரன் எப்படி விளங்கிக் கொள்கிறான் என்பது ஷங்கருக்கே வெளிச்சம். அதில் “கீழே” என்னும் வார்த்தை உபயோகப்படுத்தப்படவுமில்லை. ஆனால் டிவியைக் கீழே போடுகிறார். அது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நகைச்சுவை என்பதால் இந்த மசாலா.  நம் பேச்சு வழக்கில் இருக்கும் மொழிக்கும் இலக்கண மொழிக்கும் இருக்கும் வேறுபாட்டைப் புரியவைப்பது கூட ஷங்கரின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் நன்கு படமாக்கியிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மசாலா தூவி கெடுத்து விட்டார் ஷங்கர். பின்னர் ஒரு உரையாடலில் ”குத்துன்னா குத்திர்றதா” என்று வசீகரன் கேட்க எந்திரன் “அதுக்கு அது தானே அர்த்தம்” என்று பதிலளிப்பது ரசிக்கும் படியாகவும் இருந்தது நம்பும் படியாகவும் இருந்தது. சந்தானம், கருணாஸ் பேசும் சென்னைத் தமிழ் புரியாமல் விழிக்கும் எந்திரனின் குழப்பமும் இதில் அடங்கும். ஆனால் இந்தக் காட்சிகள் சொல்லும் முக்கியமான அறிவியல் விஷயம் மனித-எந்திர இடைவிளைவு (human-robot interaction). அதன் அறிவியல் விஷயங்கள் சொல்லப்படாமலே விடப்பட்டிருக்கின்றன.

அதே போல் பொருத்தியறிதல் (rule of inference) எந்திரத்தில் எப்படி நடக்கும் என்பது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயம். ”கடவுள் இருக்கிறாரா இல்லையா?” என ஒரு விஞ்ஞானி எந்திரனிடம் கேள்வி கேட்கிறார். எந்திரன் “கடவுள் என்பவர் யார்?” என்று அவரிடம் மறு கேள்வி கேட்கிறான். “நம்மை எல்லாம் படைத்தவர் தான் கடவுள்” என்கிறார் விஞ்ஞானி. “என்னைப் படைத்தவர் வசீகரன். கடவுள் இருக்கிறார்” என்கிறான் எந்திரன். நன்றாக படமாக்கப்பட்ட விஷயமிது. நம்மைப் படைத்தவன் என்று பொருள் கொண்டால் கடவுள் இருக்கிறார் என்பது நல்ல வரையறை. இடையிடையே வசீகரன் சனா காதல். ரெண்டு பாட்டு. வில்லன் விஞ்ஞானி எந்திரனின் “neural schema"வைத் தேடி அலைகிறார். பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்த நபர் ”அப்படின்னா என்னது அத மட்டும் கழட்டி கொடுக்க முடியாதா என்ன” என்று புலம்பிக்கொண்டிருந்தார். அதன் பயன்பாடு என்ன ஏன் அதனை வில்லன் தேடும் மூலப்பொருளாக இருக்கிறது என்பது படமாக்கப்படவில்லை. (Neural schemaன்னா ”நரம்பியல் வலையமைப்புத் திட்டம்” என்று சொல்லலாமா? #டவுட்டு). புத்தகங்களைப் பார்த்தவுடனே அதிலிருக்கும் விஷயங்கள் அனைத்தையும் மனனம் செய்து கொள்வது படமாக்கப்பட வேண்டிய தொழில்நுட்பம். அதை டெலிஃபோன் டைரக்ட்ரியை மனனம் செய்வதாக காட்டி நன்றாக படமாக்கியுமிருந்தார் ஷங்கர். ஆனால் பரீட்சைக்கு பிட் அடிக்கவும் அதை பயன் படுத்துவதாக படமாக்கப்பட்டது வேண்டுமென்றே திணிக்கப்பட்ட மசாலா. நல்ல விஷயங்கள் மட்டும் ஊட்டப்பட்ட எந்திரன், ஐஸ்வர்யா காப்பியடித்து பரீட்சை எழுத ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்?

எந்திரவியலின் விதிகள் என்று ஐசக் அசிமோவ் சொல்லியிருப்பது மூன்று
  1. எந்திரன் மனிதர்களை காயப்படுத்தக்கூடாது. தமது செயலின்மையாலும் மனிதர்களை காயப்படுத்தக்கூடாது.
  2. எந்திரன் மனிதர்களின் கட்டளையைச் செய்ய வேண்டும். அந்த கட்டளைகள் முதல் விதியை மீறாதிருக்க வேண்டும்.
  3. முதல் விதியையும் இரண்டாம் விதியையும் மீறாமல் எந்திரன் தன்னைத் தானே தற்காத்துக்கொள்ளலாம்.
தனது எந்திரனை நாட்டின் சேவைக்காக இராணுவத்திற்கு அனுப்புவதற்காக திட்டமிடுகிறார் வசீகரன். எதிரிகளை அழிக்க பயன்படும் என்பதால் அது முதல் விதியை மீறும்படியாக வடிவமைத்திருக்கிறார். உணர்ச்சி இல்லாத எந்திரனால் மனித குலத்துக்கு ஆபத்து. அதனால் உணர்ச்சியூட்ட முனைகிறார்
வசீகரன். #முதல் பாதி

இரண்டாம் பாதியில் சில சுவாரசியமான விஷயங்களுக்கு ஷங்கர் நம்மை இட்டுச் செல்கிறார். உணர்ச்சியூட்டினால் எந்திரனுக்கு என்னவாகும்? நாலு டூயட், ஐஸ்வர்யா ராய், ரஹ்மானின் பாடல்கள் இவற்றைக் காட்ட கண்டிப்பாக காதல் தேவைப்படுகிறது. அதனால் சேர்க்கப்படுவது மசாலா. எந்திரனும் ஐஸ்வர்யாவைக் காதலிக்கிறார். பாக்யராஜ் ஒரு படத்தில ஒரு காள மாட்ட அடக்கிறதுக்கு பசு மாட்ட முன்னால கொண்டு வந்து நிறுத்துவாரு. இவ்வளவு தான் விஷயம். வசீகரனும் இதையே செய்திருக்கலாம் ஆனால் அங்கு தான் ஆரம்பிக்கிறது ஷங்கரின் கரம் மசாலா காரம். எந்திரனை ஐஸ்வர்யா விரும்பாமல் போவதும், அவர் இராணுவத்திற்கு உதவாமல் போவதும், அதனால் அழிக்கப்படுவதும், வில்லன் கையில் சிக்கி அழிக்கும் விஷயங்கள் சேர்க்கப்படுவதெல்லாம் கதை பில்டப். ஆனால்  எல்லாவற்றுக்கும் தலையாயது எந்திரனே எந்திரனைப் படைக்க ஆரம்பித்தால் என்னவாகும்? ஷங்கர் பிரகாசிப்பது இங்கு தான். அவருக்கும் அதுதான் அவருடைய ஸ்கோரிங் பாயிண்ட் என்று தெரிந்திருக்கிறது. கிராஃபிக்ஸ் உதவியுடன் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அந்த அரை மணி நேரம் படத்திற்கு பெரிய பலம். இந்த கிராஃபிக்ஸ் விஷயங்களுக்காகவே சன் டிவி செய்த மார்க்கெட்டிங் டார்ச்சர்களை மன்னிக்கலாம்.

எந்திரன் என்ன ஆனான். அவனால் வந்த நன்மை தீமைகள் என்ன? #இரண்டாம் பாதி

மேற்சொன்ன இவ்வளவு விஷயங்களும் ஷங்கரின் வழக்கமான தமிழ் சினிமா சுவாரஸ்யங்கள். இவற்றுடன் சேர்ந்திருப்பது ரஜினிகாந்த் என்னும் ஒரு பெரும் புள்ளி. படத்தைக் கொண்டாட வைக்கும் விஷயமும் அதுவே. இது வரை ரஜினிகாந்த் என்னும் ஆளுமை செய்யும் மேனரிசங்கள் எல்லாம் எப்படி ஒருவித கமர்ஷியல் ஹீரோயிசமாக இருந்ததோ எந்திரனுக்குப் பிறகு அவற்றுக்கு ஒரு அறிவியல் பின்புலம் வந்து சேர்கிறது. தலைவருக்கு டான்ஸ் ஆடத்தெரியாது என்று சொன்னவர்களுக்கு எந்திரனில் கிராஃபிக்ஸ் பதிலடி காத்திருக்கிறது. மற்ற ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்த பிறகு தலைவர் பஞ்ச் டயலாக் பேசுவதைக் குறைத்துவிட்டார். ஆனால் அவரது மேனரிசங்கள் லாஜிக் வழுக்கல்களாக இருந்த காலம் போய் இப்பொழுது அவற்றுக்கு நம்பத்தகுந்த பின்புலன்கள் சேர்க்கப்படுகின்றன. கவனிக்கப்பட வேண்டிய நிராகரிக்க முடியாத முன்னேற்றம் இது. விஜயகாந்த் செய்தால் காமெடி ரஜினிகாந்த் செய்தால் ஹீரோயிசமா என்று நிறைய பேர் கேட்கின்றனர். எந்திரன் தான் பதில் என்று அவர்களுக்கெல்லாம் தைரியமாகச் சொல்லலாம். வசீகரன் சனாவைக் காப்பாற்ற மண் தூவி விட்டு ஓடுவதும், சிட்டி எந்திரன் அடித்து தூள் பண்ணுவதும் இதற்கு சாட்சி. சனாவின் முத்தம் பெற்ற சிட்டியின் ரியாக்‌ஷன், சிட்டியிடம் பொறாமை கொள்ளும் வசீகரனின் ரியாக்‌ஷன், குழந்தையைக் கொஞ்சும் சிட்டி என தலைவரின் எமோஷனல் முகங்கள் படமெங்கும். தலைவர் நடித்திருக்கிறார். இரயில் வண்டியின் பக்கவாட்டில் ஓடுவதும், சண்டையின் போது ஒரு வாசல் வழியாக தாவி மறு வாசல் வழியாக வந்து அடிப்பதும், அனகோண்டா, கோளம், ட்ரில்லர், டவர் என்று வேறு வேறு தோற்றங்களில் தன்னை மாற்றி சுடுவதும் விஷுவல் ட்ரீட். அதிலும் எந்திரன் உருவம் பெற்றதும், ஸ்டைலாக நடப்பது, வசீகரன் கண்ணாடியை வழக்கம் போல் ஸ்டைலாக சுழற்றி எந்திரன் கண்ணில் மாட்ட முடியாமல் திணறுவது, எல்லாவற்றுக்கும் மேல் எந்திரன் சிரிக்கும் அந்த ட்ரேட்மார்க் வில்லத்தன சிரிப்பு.... போய் படத்த பாருங்கப்பா... ரஜினி அன்லிமிடட். ரஜினி ரசிகனுக்கு தேவையான ஒவ்வொரு விஷயமும் அழகாகத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரஜினி ரசிகனும் கண்டிப்பாக குறைந்தது மூணு தடவை படத்தைப் பார்க்கலாம். நான் பார்த்ததும் இந்த ஒரு பத்திக்காகவே தான் ;)

ஐஸ்வர்யா பாடல் காட்சிகளில் நன்றாக ஆடியிருக்கிறார். மத்தபடி அவருக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவு. சிட்டியிடம் காதல் பற்றி விளக்கம் கூறும் காட்சிகளில் கொஞ்சம் நடித்திருக்கிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானத்தை இதில் தேடினாலும் கிடைக்கமாட்டார். கருணாஸுக்கும் அதே நிலைமை. டானி டெங்சோம்ப்பா நல்ல தேர்வு. அலட்டாமல் வந்து போயிருக்கிறார். ரஹ்மானின் இசையை பாடல்களிலும் கிராஃபிக்ஸ் காட்சிகளிலும் ரசிக்கலாம். ஆனால் ரஜினிகாந்த், கிராஃபிக்ஸ் இவற்றைத் தாண்டி ரஹ்மானைக் கொஞ்சம் தேடித் தேடித்தான் கேட்க வேண்டியிருக்கிறது. விடுபட்ட விஷயங்களும் எந்திரனில் அதிகம். எப்படி உணர்ச்சிகள் எந்திரனில் சென்று சேர்கின்றன? (harmone simulations package மட்டும் போதுமா?), தொடு உணர்வியல் (haptic technology) போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர் போன்றவற்றை படமாக்கியிருக்கலாம்.

எந்திரவியல் என்பது நவீன அறிவியலின் மகத்தான விஷயம். அதன் வரம்பெல்லைகளும், நன்மை தீமைகளும் மசாலாவோடு படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதன் தேவைகளையும், சாத்தியங்களையும் ஷங்கர் நன்கு கையாளாமல் விட்டுவிட்டார். அல்லது அவை படமாக்கப்படவில்லை. படத்தில் சொல்லியிருக்கும் அறிவியல் விஷயங்களை விடவும் படத்துக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் அறிவியல் விஷயங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதியவை. ஆங்கில ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே பார்த்திருந்த கிராஃபிக்ஸ் தமிழ் சினிமாவுக்கு முதன் முறையாக வாய்த்திருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். எங்கெல்லாம் மசாலா வாசம் நமக்கு தெரிகிறதோ அங்கெல்லாம் படம் வெறுமையாக இருக்கிறது. அறிவியல் விஷயங்களைச் சொல்வதால் நம்புவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் தலைவர் என்னும் ஒற்றை வார்த்தையில் படம் நகர்கிறது. கதை நன்றாக கையாளப்பட்டிருக்கிறது. அதன் அறிவியல் பின்புலத்தில் தான் ஷங்கர் தமது மசாலாவை அதிகமாக தூவியிருக்கிறார். ஆனால் அவருடன் இருந்த பெரும் பெயர்கள் அவரை காப்பாற்றியிருக்கின்றன. நல்ல தரமான படம் என்று எந்திரனைக் கண்டிப்பாகச் சொல்ல முடியாது. மசாலாவுடன் கூடிய ஒரு நல்ல அறிவியல் பின்புலம் அதற்கிருக்கிறது.

படம் பாத்திட்டு வந்ததும் அம்மா சொன்னது ”எந்திரன் புண்ணியத்தில காலைல வீட்ல எல்லாருமே சீக்கிரம் எந்திச்சு குளியல் போட்டாச்சு”.

பண்டிகை நேரம்ல அப்படித்தான் இருக்கும்.

2 comments:

TechShankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS



டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

Karthik Raja said...

padathula music yanga pochunu thariyala but padal ok..tha

backround music?????????????????

yalam harris yaga mudiuma sollugaaaaaaa...