Wednesday, April 13, 2005

இந்திய அணியின் பயிற்சி முறையும் கிரேக் சேப்பலும்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஜான் ரைட்டின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. அவரும் பாகிஸ்தான் தொடருடன் ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்து விட்டார். ஜான் ரைட்டின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடியதால் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜான் ரைட் ஒரு வெளிநாட்டவர் என்ற காரணத்தினால் அடுத்த பயிற்சியாளரும் வெளிநாட்டவராக இருக்கலாம் என்ற யூகமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த பயிற்சியாளருக்கு டாம் மூடி, டேவ் வாட்மோர் மற்றும் கிரேக் சேப்பலின் பெயர்கள் பரிசீலிக்கப் படுவதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. இம்மூவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் கிரேக் சேப்பலுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் பேசப்பட்டது.

நேற்று இந்து நாளிதழில் (greg chappell columnல்) கிரேக் சேப்பல் இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை தம்மை அணுகவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் ஒருவேளை தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தம்முடைய அணுகுமுறை எப்படியிருக்கும், பயிற்சியாளரின் பொறுப்புகள் என்ன என்று விளக்கியிருந்தார். ஆனால் அவர் எழுதியிருந்ததில் சில விஷயங்கள் நெருடலாக இருக்கின்றன. அவை
1. இதற்கு முன்னர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இவரை பயிற்சியாளராக்க அணுகியிருக்கின்றனர். ஆனால் இவர் மறுத்திருக்கிறார். அதற்கான காரணம் கேட்டதற்கு அவர்கள் வழங்கிய பதவிக்காலம் குறைவானது, அந்த கால அவகாசத்தில் ஒரு அணியை வடிவமைப்பது மிகவும் கஷ்டம், அவர்கள் தங்கள் அணியின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நினைக்கின்றனர் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அதிக காலம் இவர் பயிற்சியாளராக இருக்க ஆசைப்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

2. இந்திய அணியில் தற்போது கடைபிடிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றம் வேண்டும், உள்ளூர் அணிகளின் பயிற்சியாளர்களுக்கும் சர்வதேச அணியின் பயிற்சியாளருக்கும் ஒரு நல்ல இணக்கம் வேண்டும், இதன் மூலம் ஒரு நல்ல அணியைத் தேர்வு செய்வது என்பது இலகுவாக இருக்கும் ஆனால் இந்த மாற்றத்திற்கு அதிகம் செலவாகும் என்று கூறியிருக்கிறார். இதில் இவர் மாற்றத்தை குறிப்பிடுவது போல தம்முடைய வியாபார நோக்கையும் காட்டியுள்ளார்.

3. பயிற்சியாளர் என்பவர் ஒரு அணியின் அனைத்து மாற்றங்களுக்கும் காரணமாகமாட்டார். வீரர்களின் குறை நிறைகளைக் களைவதே அவரது பொறுப்பு, மற்றபடி நன்றாக விளையாடுவதென்பது வீரர்களின் கையில் தான் இருக்கிறது. அதில் பயிற்சியாளரின் பங்கு குறைவே என்று கூறியிருக்கிறார். இந்திய அணி நன்றாக விளையாடவில்லை என்றால் அவர்களுக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பு இவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால் பயிற்சியாளராக ஆகும் முன்பே கவனமாக வார்த்தைகளில் விளையாடி விட்டார்.

பயிற்சியாளராக ஆகும் முன்னரே பதவிக்காலம், சம்பளம், கடமை ஆகியவற்றைப் பற்றி இவர் பேசியிருப்பது கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறது. அதிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை இன்னும் அணுகக்கூட இல்லை, அதற்கு முன்னரே இவ்வாறு பேசியிருப்பது தேவையில்லாதது. இவர் வருங்காலத்தில் ஒருவேளை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் இந்திய அணியின் வருங்காலமும் கேள்விக்குறியதே. தம்மை இதுவரை அணுகாத போதும் தற்போதுள்ள பயிற்சி முறையில் மாற்றம் வேண்டும் என்று கூறியதன் மூலம் இவர் ஜான் ரைட்டை அவமானப்படுத்தியுள்ளார். இவர் சொன்ன விஷயங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பினும் அதை இவர் ஜான் ரைட்டிம் நேரடியாக சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படி நாளிதழில் எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.

1 comment:

Anonymous said...

ஏற்கனவே கங்குலி கவலை தீர்ந்த பாடில்லை இதில இந்த கவலை வேறயா.... இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் கொஞ்சம் கேள்விக்குறிதானோ?