Tuesday, April 20, 2010

காடு தன் வரலாறு

இரு நதிக்கண்களுக்கிடையேயான
நெற்றிப்பரப்பில்
ஒரு பொட்டாய்
இடப்பட்டிருக்கிறேன்
நான்.

பொழிதல், சதுப்பு,
ஊசியிலை எனப்படுவனவற்றுள்
நான் பொழிதல்.
விலங்கினங்களுக்கான
வசதியானதொரு
புகலிடம்.

இலையுதிரென்றால் இலையுதிர்த்து,
கோடையென்றால் சூடடைந்து,
காரென்றால் இலைக் குடைபிடித்து
குளிரென்றால் பனிப் போர்வையாகி,
கால நிர்ணயம்
செய்து கொண்டே வாழ்கிறேன்.

என் மரவிரல்களின்
இலைநகங்களில்
சில சமயம்
ஈரச்சாயம்
பூசிச்செல்லும்
பெருமழை.

வெட்டப்பட்ட
சந்தன விரல்களின்
காயத்தழும்புகளில்
நுகர்கிறேன்
வாசனையை!

பறவைகளின் எச்சங்கள்
நெருஞ்சி முற்விதைகளுடன்
விழுவதறியாது
பசுமையுணர்த்துவேன்
நான்.

என் தோல்களின்
சில மயிர்களை
கால்களால் சவரம் செய்து
பாதைக் கீறல்களை
விட்டுச் செல்கின்றனர்
சிலர்.

ஆடையணியா என்னிடம்
அடைக்கலம்
புகுகின்றார்கள்
துறவிகள் சிலர்
காவி வேட்டியுடன்.

காடு தன் வரலாறு
கூறுகையில் ஒரு
பட்டமரம், அதன்
மேலிருந்த ஒற்றைப் பறவை
நீங்கலாக நான் மட்டுமே
இருந்தேன்.

No comments: