Thursday, November 10, 2005

பிறப்பும் இறப்பும் (God does not play dice)

நான் ஏற்கனவே கடவுளைப் பற்றிய ஒரு பதிவெழுதியிருந்தேன். ஆனால் அது முற்றிலும் சினிமாவைச் சார்ந்தது. அதிலிருந்து சில விஷயங்களை மட்டும் இங்கு எடுத்தாள ஆசைப்படுகிறேன்.

மனிதனின் பகுத்தறிவு விவாதங்களில் தலையாயது கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், அவன் வேரூன்றி தனித்து இயங்க ஆரம்பித்ததும் அவனது பகுத்தறிவிற்கு சவால் விடும் மிகப்பெரிய வினா கண்டிப்பாக கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கக்கூடும். அவனது நம்பிக்கைகளில் அதிகமாக அவனை நல்வழிப்படுத்துவதும் கடவுள் நம்பிக்கை தான். ஆத்திகமோ நாத்திகமோ அவனது கோட்பாடுகள் தாம் சமுதாயத்திற்கு அவனை அடையாளம் காட்டுகின்றன.

ஒரு ஊரில் வயதான ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். அவரது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. சிகிச்சைக்காக மாடியில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அவரது மனைவி கீழே ஏதோ பலகாரம் செய்து கொண்டிருக்கிறார். வாசம் அவரது மூக்கை துளைக்கிறது. பலகாரம் சாப்பிட வேண்டும் என்று இவருக்கு ஆசை. உடனே மனைவியைக் கூப்பிடுகிறார். மனைவியிடமிருந்து பதிலேதுமில்லை. இவரால் ஆசையை அடக்கமுடியவில்லை. கஷ்டப்பட்டு தட்டு தடுமாறி கீழே இறங்கி சமையலறை வரை வந்து விடுகிறார்.

நோய்வாய் பட்ட கணவனை சமையலறையில் பார்த்ததும் மனைவிக்கு பதட்டம். எதற்காக கீழே இறங்கி வந்தீர்கள் எனக் கேட்கிறார். பலகாரம் சாப்பிட வந்ததாக கூறுகிறார். இந்த பலகாரம் வேறு விஷயத்திற்காக வைத்திருப்பதாகவும் அதனைத் தொடக்கூடாது என்று சொல்கிறார். வயோதிகருக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. எதற்காக வைத்திருக்கிறாய் என மனைவியிடம் கேட்கிறார். அதற்கு மனைவியும் நாளைக்கு அவர் இறந்து விடுவார் என்று மருத்துவர் சொன்னதாகவும் அவருக்கு இஷ்டமான பலகாரங்களை ஈமச்சடங்கில் வைக்க வேண்டுமென்பதால் இந்த பலகாரத்தைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். இதைக்கேட்ட உடனே அந்த வயோதிகர் இறந்து விடுகிறார்.

உயிருடன் மனிதன் இருக்கும் பொழுது அவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைப்பதில்லை என்பதற்காக சொல்லப்பட்ட துணுக்கு. ஆனால் அதில் இன்னொரு நல்ல கருத்தும் அடங்கியிருக்கிறது. மனிதன் மரணப்படுக்கையில் இருந்தாலும் அவனது ஆசைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான்.

எல்லோருக்கும் ஐன்ஸ்டீனைப் பற்றி தெரியும். மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது இவரும் ஒரு சராசரி மனிதனைப் போல் தன் ஆசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் இவரது ஆசை விசித்திரமானது. ஆசைப்படுவதிலும் இவருக்கு நிகர் இவரே. மரணப்படுக்கையில் இருக்கும் பொழுதும் தன் மூக்கு கண்ணாடி, தன் கருவிகள் மற்றும் தன் அண்மைக்கால சமன்பாடுகளைத் தான் இவர் கேட்டார். நினைவு வருவதும் போவதுமாக இருக்கிறது. அந்த நிலையிலும் கண்டுபிடிப்புகளில் சிறந்ததென்று இவர் நினைத்த "கடவுளின் மூளையை" வெளிப்படுத்தும் ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தினார்.


எனக்கு கடவுளின் எண்ணங்கள் தெரிய வேண்டும் (I want to know God's thoughts). இது தான் இவரது கடைசி ஆசை. இந்த ஆசையைப் பற்றி இவர் முன்னமே சொல்லியிருந்தார். "அனைத்துமே கடவுளின் எண்ணங்கள் தான் மற்றவை எல்லாம் வெறும் விவரங்கள் தான். (I want to know God's thoughts – the rest are mere details). இந்த ஒரு ஆசையினாலே இவர் அறிவியல் அறிஞர்களிடமிருந்து மிகவும் விலகியிருந்தார். தனக்கு 20 வயதிருக்கும் பொழுது அறிவியல் உலகில் முத்திரை பதிக்க இவர் முயற்சி செய்து கொண்டிருந்த காலம். 1905 ஆம் வருடம் தான் இவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்த வருடம். இவரது ஆய்வறிக்கைகள் உலகை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு சான்றாக அமைந்தன.

சார்பியல் கோட்பாடு (Theory of relativity): E=mc2 என்பதை இவர் கண்டுபிடித்து வெளியிட்ட ஆண்டு. உலகிலுள்ள அனைத்து சடப்பொருள் எல்லாம் மூலக்கூறுகளால் ஆனவை என்று சொன்னார். (All matter is composed of molecules). அந்த காலத்தில் நேரம் என்பது வரம்பற்ற மாறாத ஒன்றாக கருதப்பட்ட காலம். அந்த காலத்தில் தான் நேரம் என்பது நாம் பயணிக்கும் வேகத்தைச் சார்ந்ததென்று E=mc2 என்னும் சமன்பாட்டினால் நிரூபித்தார். இன்றளவும் கணிதத்திலும் சரி அறிவியலிலும் சரி மிக உயர்வாக கருதப்படும் சமன்பாடு இது.

பத்து வருடங்களுக்குப் பிறகு இவர் பொதுப்படையான சார்பியல் தத்துவத்தை வெளியிட்டார் (Theory of general relativity). நியூட்டன் தான் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்றாலும் அதற்கு என்ன காரணம் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐன்ஸ்டீன் தனது பொதுப்படையான சார்பியல் தத்துவத்தில் புவி ஈர்ப்பு விசை என்பது நேரத்தையும் வெளியையும் பொருட்கள் வளைப்பதால் வருவது என்று கூறினார். (bending of time and space by massive objects). இது 1919ஆம் ஆண்டு வானூலார்களால் சூரிய கிரகணமன்று நிரூபிக்கப்பட்டது.

பின்னர் இவர் துளியம் விசையியல் (quantum mechanics) பற்றிய ஆய்வறிக்கைக்காக நோபல் பரிசு பெற்றதும் நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் 1920 ஆம் ஆண்டு நீல்ஸ் போர், ஸ்க்ராடிஞ்சர், ஹெய்சன்பர்க் ஆகிய ஆய்வாளர்களால் ஐன்ஸ்டீனின் துளியம் பற்றிய ஆராய்ச்சி பெரிய பின்னடைவைச் சந்தித்தது. அவர்கள் சொன்ன விஷயம் இது தான் உலகில் எதையுமே தீர்மானமாக சொல்ல முடியாது, ஒரு பொருளின் வேகத்தைச் சரியாக சொல்லலாமே ஒழிய அதன் நிலையை சரியாக சொல்ல முடியாது. (speed of a particle but not its position). ஐன்ஸ்டீன் "கடவுள் என்னும் ஒரு பெரிய சக்தி" தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று தீர்க்கமாக நம்பினார். அதன் மூலம் உலகிலுள்ள எல்லாவற்றையும் கணித சமன்பாடுகள் மூலம் எளிதாக விளக்கி விடலாம் என்றும் பெரிதும் நம்பினார். அதனால் இவர் மற்ற கருத்தாய்வுகளிலிருந்து மாறுபட்டு காணப்பட்டார். அதனாலேயே அடிக்கடி பல்வேறு ஆராய்ச்சியாளர்களுடன் இவருக்கு தர்க்கம் செய்ய வேண்டியதாகி விட்டது.

1920ல் சால்வே கலந்தாய்வில் இந்த தர்க்கம் முற்றியது. நீல்ஸ் போருடன் இவரது அந்த தர்க்கம் தான் இன்றளவும் ஒவ்வொரு மனிதனின் கடவுள் பற்றிய கேள்விகளின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம். அதில் ஐன்ஸ்டீன் சொன்னது "கடவுள் பகடையாடுவதில்லை. அவரின் கணக்கில் எல்லாமே தீர்க்கமானது தான். அதில் வாய்ப்புகளுக்கு இடமில்லை" (God does not play dice, meaning that nothing would be left to chance in the universe). அதற்கு நீல்ஸ் போரும் அவருடன் இருந்த மற்ற ஆராய்ச்சியாளர்களும் சொன்ன பதில் இது தான் "Einstein, stop telling God what to do with his dice".

ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தில் உலகை எப்படியும் ஊகித்து விடலாம். அதற்கு எளிய கணிதச் சமன்பாடுகள் போதுமென்று கூறினார். ஆனால் கடைசி வரை இதை இவரால் நிரூபிக்க முடியாமலேயே போய்விட்டது. ஆனால் இன்றளவும் இயற்பியல் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்கும் நிறைய ஆராய்ச்சியாளர்கள் வருவதற்கும் இந்த தத்துவமே காரணம்.

ஒரு வேளை ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தை நிரூபித்திருந்தால் உலகில் இன்று எண்ணற்ற மாற்றங்கள் நடந்திருக்கும். முக்கியமாக நாத்திகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். எப்படியிருப்பினும் மனிதனின் தோற்றத்திற்கான கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்க முடியவில்லை. அந்த பதில்களுக்கு மிக அருகில் சென்று வந்தவர் என்பதால் தான் ஐன்ஸ்டீன் இன்றளவும் எல்லோராலும் போற்றப் படுகிறார். ஆசைப்படுபவர்கள் எல்லாரும் இவரைப் போல ஆசைப்பட வேண்டும். இதுதான் இப்போதைக்கு என்னுடைய ஆசை.

பி.கு.
மனிதனின் கடவுள் நம்பிக்கை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகளைத் தேடியதன் விளைவு தான் இந்த பதிவு.

பார்க்க + படிக்க
'Einstein', Peter D Smith, (Life&Times series) Haus Publishing, ISBN 1-904341-15-2

19 comments:

பூனைக்குட்டி said...

ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட கடவுள் விஷயத்தில் முட்டாளா இருந்தது வியப்பளிக்கிறது. :-) ;-)ஐன்ஸ்டீன் இதைமட்டுமல்ல தான் மிகவும் விரும்பிய் இன்னொன்றையும் கண்டுபிடிக்காமல் விட்டார், அது தான் இது வரை கண்டுபிடித்த மூன்றையும் ஒரே சமன்பாட்டில் கொண்டுவருவது. இதை சுஜாதா சொல்லி விகடனில் படித்ததாக ஞாபகம்.

வினையூக்கி said...

மனிதனின் முதற் கண்டுபிடிப்பு மற்றும் அவன் கண்டுபிடிப்புகளிலேயே சிறந்தது "கடவுள்". கடவுள் பற்றிய விளக்கங்கள் எல்லாம் உணர்வுப்பூர்வமானது, நிச்சயம் சமன்பாடுகளில் கொண்டு வர முடியாது.

தாணு said...

பகுத்தறிவு வாதங்களுக்கும் பக்திமார்க்கத்துக்கும் என்றைக்குமே இதே போராட்டம்தான்.

G.Ragavan said...

பக்தி மார்க்கத்தை நம்புகின்றவர்கள் எல்லாம் பகுத்தறிவாளர்கள் அல்ல என்று சொல்ல முடியாது. பெரியாரின் அனைத்துக் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டும், கடவுள் மறுப்பை மட்டும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலர் உள்ளனர். நானும் அதில் ஒருவன்.

கண்டுபிடிப்பிற்கு வருவோம். இறைவனை மனிதன் கண்டு பிடித்தான் என்பதும் உண்மைதான். ஆனால் அந்தக் கண்டு பிடிக்கும் விளையாட்டைத் துவக்கியதும் கடவுள்தான் என்று நம்புகிறேன் நான்.

அறிவியல் பூர்வமாக கடவுளை நிரூபிக்க முயலும் கதையும் ஆங்கிலத்தில் உண்டே. டேன் பிரவுன் எழுதியது. படித்தால் நன்றாக பொழுது போகும்.

மற்றபடி இறை என்பது உணர்வுப் பூர்வமான விஷயம்.

மேலும் எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

கோயிலில் கடவுளின் அலங்காரத்தையும் அழகையும் ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது, தீபாராதனை காட்டினால் கண்ணைக் கொஞ்சம் மூடிக் கொண்டு கை கூப்பி விடுகிறோம். ஏன்? நம்முடைய உள்மனம் தன்னிச்சையாக உருவமும் அருவமுமான கடவுளை வணங்கி விடுகிறது.

இஸ்லாமியர்களும் உருவமில்லாப் பெரும் சக்தியை வணங்குகிறார்கள்.

கிருஸ்துவர்களும் ஜயம் செய்யும் பொழுது கண்களை மூடிக் கொள்கிறார்கள்.

பல பெயர்கள். பல உருவங்கள். பல வழிபாட்டு முறைகள். ஆனால் ஆள்மனம் அதை உணர்வது உருவத்திற்கும் அருவத்திற்கும் அப்பாற்பட்டுதான். மற்ற சடங்குகள் பண்பாட்டு வழி வந்தவை. அவைகளைக் கைவிடத் தேவையில்லை.

இவ்வளவு எழுதியிருக்கிறேன். அது கணேஷின் பதிவிற்குத் தொடர்புள்ளதா என்று தெரியலையே!

Ganesh Gopalasubramanian said...

@மோகன்தாஸ்
// ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட கடவுள் விஷயத்தில் முட்டாளா இருந்தது வியப்பளிக்கிறது//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க அவர் கடவுள் விஷயத்திலையும் அறிவுப்பூர்வமா யோசிச்சதனால தான் அவர் பெரிய அறிஞர்.

//இதை சுஜாதா சொல்லி விகடனில் படித்ததாக ஞாபகம்.//
ஆமாம் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார் ஆனா கடைசி வரையிலும் அவரால் அது முடியவில்லை.

@வினையூக்கி
////உணர்வுப்பூர்வமானது, நிச்சயம் சமன்பாடுகளில் கொண்டு வர முடியாது.//
இதில் கருத்துக்கள் மாறுபடும். ஐன்ஸ்டீன் அப்படி யோசிச்சிருக்கார் அவ்வளவு தான். நாமெல்லாம் கடவுளை உணர்வுப்பூர்வமாக பார்ப்பவர்கள்

@தாணு
//பகுத்தறிவு வாதங்களுக்கும் பக்திமார்க்கத்துக்கும் என்றைக்குமே இதே போராட்டம்தான்.//
ஆமா ஓயாத போராட்டம் இதுவாகத்தான் இருக்கும்

@ராகவன்
//
மற்றபடி இறை என்பது உணர்வுப் பூர்வமான விஷயம். //
அங்கதாங்க நாம ரெண்டு பேரும் ஒண்ணாகறோம்

//மற்ற சடங்குகள் பண்பாட்டு வழி வந்தவை. அவைகளைக் கைவிடத் தேவையில்லை.//
அதனால் தான் ராகவன் "பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது" என்று எழுதியிருந்தேன்.

//அது கணேஷின் பதிவிற்குத் தொடர்புள்ளதா என்று தெரியலையே!//
என்ன இப்படி சொல்லிட்டீங்க. அறிவு உணர்வு ரெண்டையும் பற்றி எழுதுவதற்கு உங்களைப் போன்ற ஆட்களின் துணை எனக்கு என்றும் தேவை.

வெளிகண்ட நாதர் said...

இறையுணர்வுங்கிறது ஆழ்மனத்தில் இருக்க கூடியது. அதை தேடி பக்தி மார்க்கமாவோ, இல்லை பகுத்தறிவு பாதையிலோ செல்லத் தேவையில்ல. கண்னை மூடி உங்களை நீங்களே வெற்றி கொள்ளும் முயற்சி. எந்த ஒரு சமன்பாட்டாலும் கண்டறிந்து வெல்ல முடியாது. ஏன்னா அது ஒரு சூன்யம்.

Jayakumar said...

The important thing is not to stop questioning.
- Albert Einstein

குமரன் (Kumaran) said...

இதுவரை யாரும் சிந்திக்காத முறையில் சிந்தித்ததே ஐன்ஸ்டீனின் தனித்தன்மை. அவர் கடவுளைப் பற்றி பேசியிருக்கிறார் என்பது ஒரு கொசுறு செய்தி தான். இந்தப் ப்ரபஞ்சம் முழுதும் ஒரே இயற்பியல் விதியின் படி தான் இயங்கமுடியும்; ஏனெனில் அடிப்படையில் எல்லாமே ஒன்றே என்பது அவரின் கொள்கை. அதனால் தான் அவரால் ப்ரபஞ்சத்தை விளக்க ஒரு விதியும் அணு அளவில் உள்ளவற்றை விளக்க ஒரு விதியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடைசி வரை அந்த முடிவான ஒரே விதியைக் கண்டுணர முயன்றார். அதற்கு இன்னொரு ஐன்ஸ்டீன் வரவேண்டும் போலிருக்கு...

அவர் அந்த ஒரே விதியை கண்டுபிடித்திருந்தாலும் நாத்திகர் இல்லாமல் போயிருப்பார்களா என்பது சந்தேகமே.எப்படியும் அவர்கள் கடவுளை நம்புகிறவன் முட்டாள்; காட்டுமிராண்டி என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கப் போகிறார்கள். :-)

//பெரியாரின் அனைத்துக் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டும், கடவுள் மறுப்பை மட்டும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலர் உள்ளனர். நானும் அதில் ஒருவன்.//
ராகவன்...பெரியாரை அதிகம் படிக்காதவன் தான் நான். ஆனால் கடவுள் மறுப்பையும் பார்ப்பன எதிர்ப்பையும் விட்டால் பெரியார் சார்வாகர்கள் சொல்லாத எதையுமே புதிதாய்ச் சொல்லிவிடவில்லை என்று தான் எண்ணுகிறேன். :-)

Ganesh Gopalasubramanian said...

@ராஜ்
//Please check scientific facts before writing such articles.//
தவறுகளைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ராஜ்.
திருத்திக் கொள்கிறேன்.

//உலகிலுள்ள அனைத்து சடப்பொருள் எல்லாம் மூலக்கூறுகளால் ஆனவை என்று சொன்னார். (All matter is composed of molecules)//
என்பதை என் ஞாபகத்திலிருந்து எழுதினேன். நீங்கள் சொன்னது போல் அதனைச் சரிபார்த்திருக்க வேண்டும். தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு அதில் சில ஐயங்கள் இருக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/Matter இந்த சுட்டியில் "Matter occupies space and has mass. It is composed predominantly of atoms, which consist of protons, neutrons, and electrons." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் தந்த சுட்டியில் "According to the strict definition, molecules can consist of one atom (as in noble gases) or more atoms bonded together." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் "Matter is composed of molecules. Molecules can consist of one atom or more atoms bonded together and an atom consists of protons, neutrons and electrons" என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் தானே.

இப்படி ஏதேனும் உள்ளடக்கத்துடன் கட்டுரை ஏதேனும் இருக்கிறதா என்று இணையத்தில் தேடி பார்த்தேன்.
அப்பொழுது கிடைத்த நிரல் http://www.afhu.org/site/schultz/schultz_einstein.htm

ஹெய்சன்பர்க் சொன்ன "வேகத்தைச் சரியாக சொல்லலாமே ஒழிய அதன் நிலையை சரியாக சொல்ல முடியாது" என்பதை இணையத்திலிருந்து தான் எடுத்தேன்.
பார்க்க.
"Where did this concept come from?"
http://www.reasons.org/chapters/spokane/newsletters/200312newsletter.shtml
நான் பதிவெழுதும் பொழுது பார்த்த சுட்டி இது இல்லை இருந்தாலும் நான் பதிவில் சொன்னது இங்கிருக்கிறது.

Ganesh Gopalasubramanian said...

நன்றி வெளிகண்ட நாதர், ஜே.கே & குமரன்

//அவர் அந்த ஒரே விதியை கண்டுபிடித்திருந்தாலும் நாத்திகர் இல்லாமல் போயிருப்பார்களா என்பது சந்தேகமே.எப்படியும் அவர்கள் கடவுளை நம்புகிறவன் முட்டாள்; காட்டுமிராண்டி என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கப் போகிறார்கள். :-)//

Proven facts have to be accepted இல்லையா குமரன்

//The important thing is not to stop questioning. - Albert Einstein//
அதுதான் அவர் வெற்றியின் பின்புலம் போல..

மதுமிதா said...

கணேஷ்
கடைசி நாட்களில் அணுகுண்டு ஏன் கண்டுபிடித்தோம் என்று வருத்தப்பட்டவர் அவர்.
நல்லவற்றுக்கு ஆக்கத்திற்கு உபயோகப் படுத்தாமல்,
அழிவுக்கு பயன்படுத்துகிறார்களே என்று நொந்து போனவர்.

எல்லோரும் நாத்திகர்கள்னு பதிவில சொல்லிட்டு இங்க இத எழுதிட்டிருக்கிறேன்.

NambikkaiRAMA said...

ஐன்ஸ்டின் பற்றிய பல அறிய தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி.
"அவனன்றி அணுவும் அசையாது" என்பதே எனது நம்பிக்கை.

Ganesh Gopalasubramanian said...

@மதுமிதா
//எல்லோரும் நாத்திகர்கள்னு பதிவில சொல்லிட்டு இங்க இத எழுதிட்டிருக்கிறேன்.//
:-))

@ராமா
//"அவனன்றி அணுவும் அசையாது"//
அதனால தான் ஐன்ஸ்டீன் ரொம்ப கவனமா அணுக்களை ஆராய்ச்சி பண்ணியிருக்கார் போல :-)

Anonymous said...

கணேஷ் நல்லா எழுதுறிங்க...

ஆனா Einstean got nobel for his Research in PHOTO ELECTRIC effect.

சரி பாருங்களேன்...

நன்றி

Ganesh Gopalasubramanian said...

Raj

In future while writing such articles will try to overcome such mistakes.

Sathish

Photoelectric effect is very obvious a part of quantum mechanics (துளியம் விசையியல)

Thanks for the wishes

G.Ragavan said...

// ராகவன்...பெரியாரை அதிகம் படிக்காதவன் தான் நான். ஆனால் கடவுள் மறுப்பையும் பார்ப்பன எதிர்ப்பையும் விட்டால் பெரியார் சார்வாகர்கள் சொல்லாத எதையுமே புதிதாய்ச் சொல்லிவிடவில்லை என்று தான் எண்ணுகிறேன் //

குமரன். பார்ப்பன எதிர்ப்பையும் கடவுள் மறுப்பையும் என்றும் கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் பார்ப்பன எதிர்ப்பைத் தவிர அனைத்தையுமே தமிழில் சொல்லியிருக்கின்றார்கள். எக்கச்சக்கமாக.

முன்பே ஒரு திரியில் சொல்லியிருந்தேன். மூச்சுக்கு முந்நூறு முறை முருகா முருகா என்று சொல்லிய அருணகிரி கூட முருகன் என்பதைத் தாண்டி இறைவன் என்ற வெளியிலும் சிந்தித்திருக்கிறார்கள். அங்கேயும் கடவுள் மறுப்புதான். ஆண்டாளும் அப்படித்தான். இளங்கோவடிகளும் அப்படித்தான். ஏன்? கலிங்கத்துப் பரணி பாடிய ஜெயங்கொண்டாரும் அப்படித்தான்.

ஏஜண்ட் NJ said...

நல்லதொரு பதிவு - வெண்பா போல,
ஆர்வவியல் அறிவியலை ஓவர்டேக் செய்ததால்,
சற்றே தளை தட்டிவிட்டது அவ்ளோதான்!
;-)


//ஒரு வேளை ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தை நிரூபித்திருந்தால் உலகில் இன்று எண்ணற்ற மாற்றங்கள் நடந்திருக்கும். //
playing dice!!
:-)

மதுமிதா said...

///madhumitha said...
கணேஷ்
கடைசி நாட்களில் அணுகுண்டு ஏன் கண்டுபிடித்தோம் என்று வருத்தப்பட்டவர் அவர்.
நல்லவற்றுக்கு ஆக்கத்திற்கு உபயோகப் படுத்தாமல்,
அழிவுக்கு பயன்படுத்துகிறார்களே என்று நொந்து போனவர்.
எல்லோரும் நாத்திகர்கள்னு பதிவில சொல்லிட்டு இங்க இத எழுதிட்டிருக்கிறேன்.
9:12 PM ///



அன்பு கணேஷ்

இன்று தான் பார்த்தேன்.
/கடைசி நாட்களில் அணுகுண்டு ஏன் கண்டுபிடித்தோம் என்று வருத்தப்பட்டவர் அவர்./

என்று இட்டிருக்கிறேன்.

'கடைசி நாட்களில் அணுகுண்டு கண்டுபிடிப்பதற்கு ஏன் காரணியாய் இருந்தோம் என்று வருத்தப்பட்டவர் அவர்.'
என்று இருக்க வேண்டும்.

ஏனெனில் இரு விஞ்ஞானிகள் ஐன்ஸ்டினிடம் வந்து அவரின் தத்துவப்படி அணுகுண்டு தயாரித்ததாக வந்து சொல்லியபிறகே அவ்விஷயம் ஐன்ஸ்டின் அறிந்துகொள்கிறார்.

நல்லவற்றுக்கு ஆக்கத்திற்கு உபயோகப் படுத்தாமல்,
அழிவுக்கு பயன்படுத்துகிறார்களே என்று நொந்து போனவர்

கடைசி நாட்களில் அணுகுண்டு கண்டுபிடிப்பதற்கு ஏன் காரணியாய் இருந்தோம் என்று வருத்தப்பட்டவர் அவர்.

என்று இருக்க வேண்டும்.


வேறு பதிவிலும் எழுதிய நினைவு.
தேசிகன் பதிவாயிருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றாவது இதனைப் பார்த்தேனே
சரி செய்ய வாய்ப்பு கிடைத்தது
நன்றி கணேஷ்

Unknown said...

Kirubha nandha vaariyaridam, oruvar neengal kadavulai neril parthu irukireergala.,? yendrar.,
Adhadku, Vaariyar, indha mitaaiyyai saapidu yendru oru choclatle tai kuduthirukirar., Anbararuko, yosanai, yennada nama kadavalai paarthirukreergala nu ketta indha Vaariyar choclate ta saapudu nu kudukrar nu oru varutham, marupaduyum poi neengal kadavalai pattri ivlo pesugreergaley, kadaval enbavar unmayil irukiraara illaiya? avar karupaaga iruppaara illai sigappaga irupaara? yendru ketka,Vaariyar migundha porumaiyudun, nan unnadidam oru choclate kudutheney adhai saapitaaya nu ketka, anbarum hmm saaptaachu nu solla, nee saapita choclate yepadi irundha dhu? nu ketka, anbarum nalla inipaaga irundhadhu nu solla, Vaariyar andha inippu karupaaga irundadha? illai sigappaaga irundha? dha nu ketka, Anbaral bhadhil solla mudiyavillai, Adhey pol dhan "Kadavulai unnara maatumey mudiyum"- Idhu Muttrilum Unnaraley