Monday, November 07, 2005

நான் ஒரு மென்பொருளாளன் (I am a software engineer)

என் வேலையை எவ்வளவு நேசிக்கிறேன் என எனக்கே தெரியாது. பூலோகத்திலேயே நான் அடைந்த சொர்க்கம் என் வேலைதான். "வாழ்க்கையில் உருப்படியா எதையாவது சாதித்தாயா?" என யாரேனும் கேட்டால் இன்றளவும் நான் சொல்லிக் கொள்வது, வளாக நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று தேடிக்கொண்ட வேலையைத்தான். அப்பொழுதெல்லாம் குரலில் ஒரு கம்பீரமும் மனதில் ஒரு கர்வமும் இருக்கும். என்னை மட்டுமல்ல என் பெற்றோர்கள் என் நண்பர்கள் என என்னைச் சார்ந்த எல்லோரும் பெருமைப்படக்கூடிய விஷயமாக இருப்பதனால் இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் சொல்லிக்கொள்ளத்தக்க மதிப்பீடு வேலையிலிருந்தே ஆரம்பமாகிறது. (SSLCஇல் முதலிடம் +2வில் முதலிடம் போன்ற கெளரவங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்பதால் அவை புறந்தள்ளப்பட்டுவிட்டன...). படிப்பு முடிக்கும் வரையில் ஒருவனின் மதிப்பீடு அவனது பெற்றோர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு முடிந்ததென்றால் அவன் ஒரு முழு மனிதனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். அப்பொழுது பிறரால் கவனிக்கப்படுகிறான். அதன்பின் அவனது வளர்ச்சி எல்லாமே பெற்றோர்களின் துணையின்றி அவனாகவே தேடிக்கொள்வதாக நினைக்கப்படுகிறது. இப்படியாக சமூதாயத்தின் நிலைப்பாடு இருக்க வேலை என்பதுதான் ஒருவன் தன்னை இந்த உலகுக்கு வெளிக்காட்ட எடுக்கும் முதல் ஆயுதம். அந்த ஆயுதம் மட்டும் குறி தவறாது தன் இலக்கினை அடைந்துவிட்டதெனில் சமூதாயத்தின் பார்வையில் அவன் வளர்ச்சிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன. அவன் படிப்புக்கேற்ற வேலைதான் கிடைக்கிறதென்றாலும் வேலையை வைத்துதான் அவன் என்ன படித்தான் எப்படி படித்தான் என்பது கணிக்கப்படுகிறது. சுமாராக படித்தவன் நல்ல வேலையில் அமர்ந்தால், "விளையாடினாலும் காரியத்தில் கண்ணாக இருந்தான்பா" போன்ற விமர்சனங்களைக் கேட்கலாம். நன்றாக படித்தவன் வேலை கிடைக்காமல் அலைந்தால், "புத்தகத்தை மட்டும் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அதற்கு மனரீதியான தகுதிகளும் முடிவெடுக்கும் திறனும் வேணும் அது அவன்கிட்ட இல்லப்பா" போன்ற விமர்சனங்களைக் கேட்கலாம். இப்படியாக மனிதன் அவன் செய்யும் வேலைகளின் மூலமே அவனுக்குண்டான முகவரியினை பெறுகிறான்.

சமீப காலங்களில் (ஒரு பத்து வருடங்களாக) "மென்பொருளாளன்" என்ற சொல்லிலேயே ஒரு மதிப்பும் திமிரும் இருப்பது தெரிகிறது. அதிக சம்பளம், வெள்ளைக் கழுத்துப்பட்டை (white collar) வேலை, நவீன தொழில்நுட்பங்கள், விரைவான தகவல் தொடர்பு என ஒரு மென்பொருள் வல்லுநன் அனுபவிக்கும் சந்தோஷங்களும் பெருமைகளும் அதிகம். இதனால் அவன் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுவது ஒன்றும் வியப்பிற்குரிய விஷயமல்ல. உலக வாழ்வில், தன்னை வாழ்க்கைக்கேற்ப வளைத்து வாழ்கிறவர்கள், வாழ்க்கையை தனக்கேற்றாற்போல் வளைத்துக்கொண்டு வாழ்பவர்கள் என இரு பிரிவினர் உண்டு. இதில் இரண்டாமானவர்கள் மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள். சமூகத்தால் வெற்றி பெற்றவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் மென்பொருளாளன் இரண்டாம் பிரிவில் வருகிறான். அவன் தன் திட்ட மேலாளர் (project manager) முன்பு வேண்டுமானால் கூனிக் குறுகி நிற்கும் நிலை வரலாம் (அதுவும் மேலாளரின் இயல்பைப் பொறுத்தது) ஆனால் சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் அந்தஸ்தே வேறு. இந்த அந்தஸ்து வெறும் பணத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. இதற்கு பின்னால் அவனுடைய படிப்பறிவு, பெற்றோர்கள் அவனை ஒரு நல்ல மனிதனாக்க அனுபவித்த கஷ்டங்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. இதில் பணமும் சேர்ந்து கொள்வதால் அவனது மதிப்பு சமூகம் என்னும் சந்தையில் உயர்ந்து விடுகிறது அவ்வளவுதான்.

சின்னக் குழந்தைகளிடம் பரவலாக கேட்க்கப்படும் ஒரு கேள்வி "நீ பெரியவனான பிறகு என்ன செய்யப் போகிறாய்?". சின்ன வயதில் இந்த கேள்விக்கு நான் சொன்ன பதில் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது "நான் M.Tech படிக்கப் போகிறேன்." தெரிந்து சொன்னதோ தெரியாமல் சொன்னதோ இன்று நான் ஒரு தொழில்நுட்ப படிப்பு முடித்த ஒரு மென்பொருளாளன். நினைத்துப்பார்த்தால் பெருமிதம் பிடிபடுவதில்லை. இதில் "நாங்க சொன்னதத்தான் செய்வோம் செய்யறதத்தான் சொல்வோம்"னு தலைவர் பாணியில் வசனம் வேற. சந்தோஷத்தாலும் நினைத்ததை அடைந்து விட்டோம் என்ற திருப்தியிலும் தான் இப்படி சொல்கிறேனே ஒழிய மமதையில் அல்ல.

நண்பர் தேசிகன் தனது ஒரு வலைப்பூவில் மென்பொருளாளனின் அன்றாட வேலையைப் பற்றி ஒரு நகைச்சுவை பதிவெழுதியிருந்தார். நன்றாக இருந்தது. பெரும்பாலும் உண்மை பேசிய பதிவு. ஆனால் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களிலும் அவர் சொல்வது போன்ற "வேலைப்பளு" காணப்படுவதில்லை. வளர்ந்து வரும் சின்ன நிறுவனங்களில் உண்மையிலேயே வேலைப்பளு அதிகமாகத்தான் இருக்கிறது. (நான் வளர்ந்து வரும் சின்ன நிறுவனமொன்றில் வேலை செய்கிறேன் என்பது உள்ளடக்கம்...அங்கங்கே விஷயத்தையும் சொல்லணுமில்ல...) அப்படி கஷ்டப்படுகிற சமயங்களில் தோன்றும் ஒரு கருத்து "ஒரு விவசாயி வெயிலில் கஷ்டப்படுகிறான் நாம் இங்கு நிழலில் கஷ்டப்படுகிறோம். ஆனால் அவனைக்காட்டிலும் ஒரு இருபது மடங்காவது அதிக பணம் பெறுகிறோம்... இது உண்மையிலேயே நியாயமான விஷயம் தானா?". விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.

ஒரு மென்பொருளாளனுக்கு கண்டிப்பாக தேவைக்கு அதிகமாக பணம் வருகிறது. ஓட்டு வீட்டில் இருப்பவன் மாளிகை கட்ட ஆசைப்படுகிறான். மிதிவண்டியில் சென்று படித்தவன் நான்கு சக்கர வாகனங்களை வாங்குகிறான். இவை அனைத்தும் பணத்தால் பெறப்படும் வசதிகள். இதில் சந்தேகமின்றி ஒரு மென்பொருளாளன் வெற்றி பெறுகிறான். அதிலும் வெளிநாட்டில் சில காலம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் பணத்தால் இவன் பெறும் விஷயங்கள் பிரமிக்கத்தக்க ஒன்று. ஆனாலும் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயமும் இதில் உண்டு. மிதிவண்டியில் சென்றவன் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பொழுது மிதிவண்டியில் செல்பவர்களை மதிப்பதில்லை. மாளிகை வாசத்திற்கு வந்தவுடன் அவனுக்கு ஓட்டு வீட்டில் இருப்பவர்கள் ஏளனமாகிப்போகிறார்கள். மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். மனிதன் பழையவற்றை மறந்து விடுகிறான். (இது எல்லோருக்கும் பொருந்தாதென்றாலும் பெரும்பான்மை மென்பொருளாளர்களுக்கு பொருந்தும்). இதில் வாங்கும் பணத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களும் உண்டு. அவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரு மென்பொருளாளனுக்கு கிடைக்கும் அத்தனையும் நியாயமானதுதானா? பணம், மதிப்பு, மரியாதை என சமுதாயத்தில் போற்றப்படும் அத்தனை நல்ல விஷயங்களும் எளிதாக கிடைப்பது சரிதானா? கண்டிப்பாக என்னைப் பொறுத்த வரையில் சரியே. மற்ற தொழிலைப் போல மென்பொருள் பெருக்கத்தில் ஊழலுக்கும் ஏமாற்றவதற்கும் வாய்ப்புகள் குறைவு (Ctrl + C & Ctrl + V வேலை எல்லாம் சரியான்னு கேட்காதீர்கள்....). அவன் ஈட்டும் பொருள் நியாயமான முறையில் அவனது உழைப்பால் வருவது. இதில் அநியாயம் என்ற வாதத்திற்கே இடமில்லாமல் போய்விடுகிறது. மற்ற தொழிலைக் காட்டிலும் அவனுக்கு வழங்கப்படும் பணம் அதிகமாக இருக்கிறது. இது தான் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சரிதானா என்பது அவரவர் கண்ணொட்டத்தைப் பொறுத்தது.

முன்பெல்லாம் ஆசைக்கொரு மகள் ஆஸ்திக்கொரு மகன் என்று சொல்வார்கள். மகள் திருமணமாகி சென்ற பிறகு மகனுக்கு தன் ஆஸ்தி அனைத்தையும் கொடுத்து விட்டு தன் கடைசி காலத்தை பெற்றோர்கள் அவனுடன் கழிப்பார்கள். இன்றைய தேதியில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. மகன் படிப்பு முடித்து வெளிநாடு வெளியூர் சென்று விடுகிறான். அவனைப் பெற்றவர்கள், வாழ்ந்த ஊரை விட்டுவிட்டு கட்டிய வீட்டை விட்டுவிட்டு வர முடியாமல் சொந்த ஊரிலேயே தங்கி விடுகிறார்கள். அதனால் மகளை சொந்த ஊரிலேயே திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் அதிகமாகியிருக்கிறது. இதில் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை மகனை ஆளாக்கிய திருப்தி அவர்களை பெருமையடையச் செய்கிறது. எனக்கும் அதுதான் சரியென்று படுகிறது. அதனால் நான் ஒரு மென்பொருளாளன் என்று சொல்வதில் எனக்கு பெருமையே.

51 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Alex Pandian said...

கணேஷ்,

வாங்க. போட்டுத் தாக்குங்க.! நட்சத்திரமாய் மின்னுங்க..!

வேலைக்கு நடுவே தமிழ்மணத்திலேயே முழ்கிக் கிடக்கும் மென்பொருளாளர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் (:-))

நல்ல பதிவு ; கருத்துக்கள் - தீர்க்கமான பார்வை. மென்பொருள் துறையினரால் தான் பெங்களூரே வீணாகிவிட்டது (விலைவாசியில்) என இங்கே ஒரு பெரிய விவாதமே தினமும் பத்திரிக்கைகளில் நடந்து வருகிறது. எனக்கும் அந்த கருத்துகளில் ஓரளவு உடன்பாடு உண்டு. நமது நாட்டைப் பொறுத்தவரை விவசாயம் கண்டிப்பாக செழிக்க வேண்டும். அதோடு கூட மற்ற துறையினரும் செழித்தால் நாட்டுக்கு நல்லது. இல்லாவிட்டால் அமெரிக்கா மாதிரி எல்லாமே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.

- அலெக்ஸ்

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கணேஷ், கலக்குங்க இந்த வாரம்.

இந்தப்பதிவில், அலெக்ஸ் கருத்துடன் ஒத்துப்போகிறேன். வாழ்க்கைத்தர உயர்வு என்பது சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நிகழ்ந்தால்தான் நிலையானதாக இருக்கும்.

உடலின் ஒரு பாகத்தில் மட்டும் வளர்ச்சி ஏற்பட்டால் அதை வீக்கம் என்றுதான் சொல்லுவோம்:-)

குமரன் (Kumaran) said...

//இதில் வாங்கும் பணத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களும் உண்டு. அவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
//

கணேஷ், நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால், உங்களுக்கும் இந்த நல்ல உள்ளம் இருக்கும் என்று தோன்றுகிறது. மென்பொருளாளர்கள் பலர் சேர்ந்து பொருளுதவியோடு உடல் உழைப்பையும் ஏழை எளியவர்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள் நம் நாட்டில். அவர்களைப்பற்றி (எங்களைப்பற்றி?) மேலும் தெரிந்துகொள்ள www.dreamindia2020.org பாருங்கள். உங்கள் அலுவலகத்திலேயே யாராவது நண்பர்கள் இந்த இயக்கத்தில் பங்களித்துக்கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் முதல் ஆளாய் பங்களிக்கத் தொடங்கலாம்.

jeevagv said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!

Ganesh Gopalasubramanian said...

நன்றி ஜிகிடி, அலெக்ஸ், சுரேஷ், குமரன்

// Unakke konjam over-a theriyalaiyaa??? //
@ஜிகிடி: இதில என்னங்க அதிகமா தெரியுது..... இந்தியாவில் இப்போதைக்கு இருக்கிற பணக்காரர்களில் முதல் பத்து இடங்களில் மூன்று பேர் மென்பொருள் மூலமாக நுழைந்தவர்கள். இந்தியாவின் அந்நிய செலாவனியில் ஒரு பெரும் சதவிகிதம் மென்பொருள் மூலமாக வருகிறது. அப்படியிருக்க இதைப் பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது.

// மென்பொருள் துறையினரால் தான் பெங்களூரே வீணாகிவிட்டது (விலைவாசியில்) என இங்கே ஒரு பெரிய விவாதமே தினமும் பத்திரிக்கைகளில் நடந்து வருகிறது. //
@அலெக்ஸ்: உண்மை தான் அலெக்ஸ்... நானும் இதைப் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் பதிவு ஏற்கனவே பெரிய கட்டுரை போல்

ஆகிவிட்டதால் நெகட்டிவ் விஷயங்களைக் குறைக்க வேண்டியதாகி விட்டது.

//நாட்டைப் பொறுத்தவரை விவசாயம் கண்டிப்பாக செழிக்க வேண்டும்//
இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நம்ம ப.சிதம்பரம் அவர்கள் சொன்ன மாதிரி இந்தியாவின் வளர்ச்சி இந்த வருடம் 7 சதவிகிதத்தைத் தொட

வேண்டுமெனில் அதில் விவாசாய வளர்ச்சி 3 சதவிகிதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு.

//உடலின் ஒரு பாகத்தில் மட்டும் வளர்ச்சி ஏற்பட்டால் அதை வீக்கம் என்றுதான் சொல்லுவோம்:-)//
@சுரேஷ்: அலெக்ஸுக்கு அளித்த பதில் "விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு". முதுகெலும்பு உடலோடு வளர வேண்டும். ஆனால் இந்தியா இப்பொழுது வயதாகாமலேயே கூன் விழுந்து போயிருக்கிறது. இதில் யாரைக் குற்றம் சொல்வது? சுதந்திர இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் விவசாயத்திற்கு ஆதரவாக அமைக்கப்படவில்லையே.

//www.dreamindia2020.org பாருங்கள். உங்கள் அலுவலகத்திலேயே யாராவது நண்பர்கள் இந்த இயக்கத்தில் பங்களித்துக்கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் முதல் ஆளாய் பங்களிக்கத் தொடங்கலாம். //
@குமரன்: மிகவும் நல்ல விஷயம். படித்திவிட்டு உங்களுடன் கைகோர்க்கிறேன். இப்போதைக்கு மாதம் ஒரு சிறு தொகையை ஒரு ஐந்து பேர் இணைந்து ஒரு நல்ல விஷயத்திற்காக செலவிடுகிறோம். உங்களூடன் இணைவதில் மிகுந்த சந்தோஷம்.... சீக்கிரம் பதிலிடுகிறேன்.

@ஜீவா
நன்றி

ilavanji said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கணேஷ்!

rv said...

இந்த வார நட்சத்திரமா,
வாழ்த்துகள்!

மென்பொருளாளர்கள் நல்ல வேலைதான். ஆனால், கணினித்துறையில் அசாத்திய வளர்ச்சியால் மிச்ச பொறியிற்துறைகளை தேர்ந்தெடுப்பவர்கள் குறைந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

G.Ragavan said...

மென்பொருளாளர் கணேஷ். உங்கள் அறிமுகமே அமர்க்கள முகம்.

நானும் ஒரு மென்பொருளாளனே. மென்பொருளுக்குக் கிடைக்கும் பொருள் கூடுதலா குறைவா என்றெல்லாம் பார்க்க முடியாது. ஏனென்றால் ஒரு மென்பொறியாளனாக உடலுழைப்பில் நிறைய செய்யாவிட்டாலும் மூளையுழைப்பில் நிறைய செய்கிறோம் என்பதை மறுக்க முடியாது.ஆகையால் வாங்கும் சம்பளம் வேலைக்கானதே.

சாப்ட்வேர் இஞ்சினியர் என்று பெங்களூரில் சொன்னால் உங்களுக்கு அந்த மரியாதை கிடைப்பதில்லை. பத்தோடு ஒன்னு பதினொன்னு. அத்தோடு ஒன்னு இதுவொன்னுதான்.

ஒரு எடுத்துக்காட்டு. ஒரு நண்பர் பல் மருத்துவரிடம் போனார். அவர் என்ன சொன்னார் தெரியுமா? "சாப்ட்வேரா. இதே பிரச்சனைக்கு தினமும் ஆறேழு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் வர்ராங்க."

வீட்டு வாடகை சாப்ட்வேர் இஞ்சினியருன்னா ஒசந்துடும். அப்பார்ட்மெண்ட் வெலையும் கூடும். வந்த காசுக்கும் செலவு இருக்கும். பேசாம நானும் எழுத்து வியாபாரியா மாறிடலாமான்னு யோசிக்கிறேன். :-)

Chandravathanaa said...

வாழ்த்துக்கள் கணேஷ்
செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும் என்பார்கள்.
பலர் எவ்வளவுதான் நல்ல வேலையில் இருந்தாலும் ஏதோ ஒரு திருப்தியின்மையுடன்
தாம் செய்யும் வேலை பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
நீங்கள் அதற்கு நேர்மாறாக உங்கள் வேலையில் திருப்தி கொண்டு அதனாலான
உங்கள் மனநிறைவை அழகாக எழுதியுள்ளீர்கள். வாசிக்கும் போது வாசிப்பவர் மனதிலும்
ஒரு வித சந்தோசத்தை ஏற்படுத்தும் பதிவாய் உங்கள் பதிவு அமைந்துள்ளது.
இத்தனை மனநிறைவோடும் பெருமிதத்தோடும் வேலைசெய்யும் தொழில்மீதான உங்கள் நேசம்
உங்கள் வாழ்வில் இன்னும் வெற்றிகளையே குவிக்கும்.

வாழ்த்துக்களுடனும்
நட்புடனும்
சந்திரவதனா

ஜென்ராம் said...

வாழ்த்துக்கள் கணேஷ்..

வாழ்வில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.

Murali said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கணேஷ்!

Murali

ramachandranusha(உஷா) said...

செய்யும் தொழிலே என்று "ஆழமா பின்னூட்டம்" எழுத ஆரம்பிக்கும்பொழுதே, சந்திரவதனா அதையே எழுதிட்டாங்க. வாழ்த்துக்கள்,
போன வார நட்சத்திரம் சூப்பர் ஸ்டாராய் மின்னினார். ¿£í¸û ஒரு சுப்ரீம் ஸ்டார் ஆக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
"எழுத்து வியாபாரியா?" வீட்டுல டின்னு கட்டிடுவாங்க :-)

kirukan said...

Ganesh.. Congrats on being star...

Pls. write about that Kovilpatti Kadalai mittai, Mount Kathires ;-), appuram namma favourite Ramasamy and Narayansamy theatres .. I am thing for a while about that..

kirukan said...

oops... In previous comment read last line as

I am thinking for a while about that

குமரன் (Kumaran) said...

ராகவன் & ராமசந்திரன் உஷா, எழுத்து வியாபாரின்னா என்னாங்கோ? எனக்கு புரியலையே?

சிவா said...

இந்த வார நட்சத்திரமா நீங்க. வாழ்த்துக்கள்.

உங்க (நம்ம) வேலைய பத்தி நல்லா சொல்லியிருக்கீங்க. என்ன தான் ஆனாலும் ஊர்ல சொந்த தொழில் செய்யறவனுக்கு இருக்கற திருப்தி நம்ம கிட்ட இருக்கிறதா என்பது சந்தேகம் தான். பல வேலைகள் மனம் ஒவ்வாமல், ஒருவனுக்கும் பயன் இல்லை என்று தெரிந்தும் செய்ய வேண்டிய இருக்கிறது...எல்லாம் இந்த Appraisal-காக :-)))

Maya said...

அன்பு கனேஷ்க்கு
வாழ்த்துக்கள்.
ஒரு மென் பொறியாளன் எண்ற முறையில் நானும் சிலவற்றை பகிந்து கொள்கிறேன்.
பல வேலைகளில் கிடைக்காத அங்கிகாரம்,மன திருப்தி எனக்கு(எனக்கு) இந்த வேலையில் கிடைத்தது.
இஞ்ஞினியரிங் முடித்தவுடன் எனக்கு மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாள்ராக ஒன்றை ஆண்டுகள் பணி புரிந்தேன்.கஷ்டமான வேலை இல்லை.ஷ்ப்டு பேசில் வேலை.அதன் பிறகு GMDC ல் ஒரு ஆறு மாத வேலை.அதுவும் அவுள்ளவு கடினம் இல்லை.பின்பு முதன் முதலாக் ஒரு தனியார் துறையில் மார்க்கெட்டிங்.சாவல் நிறைய இருந்தது.மிகக் கடினமாக உழைத்தேன்.ஒரளவு திருப்தி இருந்தது ஆனால் அங்கிகாரம் இல்லை.உழைத்த அள்விற்கு வருமானமும் இல்லை.அதன் பிற்கு இந்த மென் பொருள் துறை.கிட்டத்திட்ட 10 வருடட்ங்கள் உருண்டு ஓடி விட்டன...எதிர் பார்த்த அளவு என்க்கு வேலை திருப்தி,அங்கிகாரம்,உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்துக் கொண்டிருக்கிரது.
ஒரு சின்ன சம்பவத்தை சொல்லுகிறேன்..கடந்த வருடம்...ஒரு DATABASE ADMINISTRATOR என்ற முறையில் எங்கள் அலுவலக DATABASE இ COMPLETE ஆக் RECOVER பண்ணிணேன்.
சுமார் 12 மணி நேர போராட்டம்.தனி ஒருவனாக செய்து முடித்தேன்.மற்ற வேலைகளில் கிடைக்காத ஒரு மன நிறைவு என்க்கு கிடைத்தது.என் CLIENT இடம் இருந்து அருமையான் பாராட்டு கடிதம்.
ஒரு Insuranace Company இன் Production Data எல்லாம் complete ஆக RESTORE & REVOVER பண்ண்ணியதில் கிடைத்த மன நிறைவு மற்ற வேலைகளில் என்க்கு கிடைக்கவில்லை.
என்வே நான் ஒரு மென் பொறியாளன் என்பதில் என்க்கு பெருமையே.

கோவில்பட்டி கடைலை மிட்டாய் ரொம்ப பிடிக்கும்.

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.

தாணு said...

மென்பொருளாளர்கள் அனைவரும் மின்னுவதில்லை;
கணேஷ் போன்ற கடின உழைப்பாளிகளே இத்தகைய பெருமைகளுக்கு உகந்தவர்கள்.
மேலும் வளர வாழ்த்துக்கள்

IdlyVadai said...

தலைவா செளக்கியமா ? வாழ்த்துக்கள். பதிவு நல்லா இருக்கு ! நிஜமாதான் :-)

மதுமிதா said...

காக்னிஷண்ட்,இன்போசிஷ்,விப்ரோ,சத்யம்...போன்ற பெரிய மென்பொருள் கம்பெனிகளில்
எத்தனையோ மென்பொருளாளர்கள்
பணி புரிகின்றனர் அலுப்பிருந்தாலும்,அலுப்பில்லாது.
தொழில் பக்தி உங்களுக்கான தனியிடத்தைப் பெற்றுத்தரும் கணேஷ்.வாழ்க

விவசாயிகள் குறித்து தனிப்பதிவிடணும்.

எனது மகன் பத்ரி உங்களைப்போல் தான்.அலுவலக விரும்பி.
அம்மா நான் கிளம்பறேன்.நான் போய் தான் நாஸ்டாக் மார்க்கெட்டை திறக்கணும் -னு
நகைச்சுவையாய் சொல்வான்.

வெள்ளை உள்ளம் கொண்ட கணேசா
வீட்டுல சீக்கிரமா கெட்டி மேள சத்தம் கேக்கப் போறது போலிருக்கே.
எல்லாம் மங்கலமாய் நிகழ வாழ்த்துகள்

குமரன் (Kumaran) said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

என்னங்க மதுமிதா... TCSஐ ஒரு பெரிய மென்பொருள் கம்பெனியா நீங்க நினைக்கலையா? அத விட்டுட்டீங்களே?

உங்கள் மகன் வேலைப் பாக்குறாரா...அப்ப உங்களையும் அக்கான்னு கூப்பிடலாமா?

கணேஷ்...மதுமிதா அக்கா சொன்னது உண்மைன்னா என்னுடைய வாழ்த்துகளும்.

வெளிகண்ட நாதர் said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
//இதில் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை மகனை ஆளாக்கிய திருப்தி அவர்களை பெருமையடையச் செய்கிறது.//
உன்மவன் அமெரிக்காவில்லே இருக்கிறதுல பெருமைதானம்மான்னு நான் சொல்ல, வெறும் பெருமையை எத்தனை தடவ சொல்லிக்கிறது, நீ என் பக்கத்தில இல்லங்கிறதுதான் பெரியக்குறையா இருக்குன்னு என் அம்மாவோட போன வாரம் போன்ல பேசிக்கிட்டதுதான் ஞாபகம் வருது, கணேஷ். தாங்கூட வாழலியேன்னு ஏங்கும் தாய்யுள்ளங்க நிறைய உண்டு.

மதுமிதா said...

குமரன் தம்பி
கம்பெனிங்க பக்கத்துல ...
புள்ளி வெச்சிருக்கேன் பாக்கலியா?
டாடா ன்னு நினைவில் வருது.
டிசிஎஸ் னு போடறப்ப தப்பா போட்டுடக்கூடாதுன்னு ...
வெச்சிட்டேன் யாரேனும் சொல்லிடுவாங்களேன்னு.
இப்ப பாருங்க இதையும் கண்டி புடிச்சி எழுதிட்டீங்க.
(போலாரிஸ்,ஹெச்சிஎல்...)

கணேஷ் தான் சொல்லணும்.
எல்லாம் யூகம் தான்.

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கணேஷ்.

கயல்விழி said...

கணேஸ் நட்சத்திரப்பதிவிற்கு வாழ்த்துக்கள் முதலில் வாழ்த்துக்கள்.

நீங்கள் சொன்ன பல விடயங்கள் அனேகருக்கு (அனேக வேலைகளுக்கு, சம்பளத்தை தவிர்த்து)பொருந்தக்கூடியதாக இருந்தாலும். இப்ப மென்பொருளாளர்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றார்களே இனி எப்படி??.

Movie Fan said...
This comment has been removed by a blog administrator.
Movie Fan said...

கணேஷ்,

நல்ல பதிவு. மேலும் நட்சத்திர வாரத்திற்க்கு என் வாழ்த்துக்கள்.

இந்த பதிவு இரண்டு விதங்களில் என்னை ஆச்சரிய படுத்தியது.

ஓன்று: இக்காலத்தில் வேலை என்பதால் கிடைக்கும் (அனுபவித்த) மதிப்பீடு குறித்து நானும் பதிவிட நினைத்தது

மற்றொன்று: மென்பொருள் துறையினர் (நமக்கும்) , ஏனையோர் என்று சமூக அமைப்பில் ஒரு வேறுபாடு தோன்றுவது குறித்து குறித்து (குறிப்பாய் சம்பள வேறுபாட்டால்) நானும் ஒரு பதிவிடலாம் என்றிருந்தது

இந்த இரண்டையும் உங்கள் பதிவில் பார்த்ததிலும் , நல்ல ஆரோக்கியமான கருத்து பரிமாற்றலுக்கு அடிகோலியதற்க்கும் என் வாழ்த்துக்கள்.

முடிந்தால் நானும் என் கருத்துக்களை வேறொரு நாளில் பதிவிடுகிறேன்.

நன்றியுடன்.
விக்னேஷ்

துளசி கோபால் said...

'மென்பொருளாளன்'னு சொன்னால் இத்தனை 'மவுஸா'?

தெரியாமப் போச்சேப்பா. நம்ம வீட்டுலேயும் 6 பேர் இருக்காங்க. ஏழாவது இப்பத்தான் படிப்புலே.

என்னைச் சுத்தி இப்படி. ஆனா நான்? க கை நா.:-)))))

NambikkaiRAMA said...

//ஒரு விவசாயி வெயிலில் கஷ்டப்படுகிறான் நாம் இங்கு நிழலில் கஷ்டப்படுகிறோம். ஆனால் அவனைக்காட்டிலும் ஒரு இருபது மடங்காவது அதிக பணம் பெறுகிறோம்... இது உண்மையிலேயே நியாயமான விஷயம் தானா?". //

இந்த சிந்தனையில்தான் நம்ம கணேஷ் நீங்க ஜொலிக்கிறீங்க!

அன்பு said...

வாழ்த்துக்கள் கணேஷ்.
அருமையா நட்சத்திர வாரத்தைத் தொடங்கிருக்கீங்க, பாராட்டுக்கள்.

நீங்கள் விவசாயிகள் மற்ற உடலுழைப்பாழிகள் பற்றிக்கவலைப்பட்டிருப்பது உண்மை. அதே நேரம், சமீபகாலங்களில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களும் சற்றேறக்குறைய அதைவிட அதிகநேரம் மூளை/மன உளைச்சலுடன் செயல்பட நேரிடுகிறது. அதனால் ஓய்வு வயது 58 என்பதெல்லாம் நினைத்துப்பார்க்க இயலாது - முப்பதுகளிலேயே ஒருவகை சோர்வு ஏற்படுகிறது உண்மை. அதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்!

மற்றப்படி நீங்கள் கூறுவதுபோல் பொருளாதார ஏற்றத்தாழ்வு வெகுவாக தெரிந்தாலும், அதைக்குறைக்க நம்மால் இயன்றதை அடுத்தவருக்கு, குறைந்தபட்சம் நம் சுற்றம், சொந்தம், நண்பர்களுக்குச் செய்ய நம்மை மட்டுமல்லாமல் சுற்றமும், உறவும் மேம்படும்.

அதனால் ஆடம்பரச்செல்வைச் சற்றேகுறைத்து - தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் இன்னும் ஆத்மதிருப்தி கிடைக்கிறது. அதை நீங்களும் செய்கின்றீர்கள் என்பதில் மிக்க ஆனந்தம்.

நன்றி

இனிய இல்வாழ்க்கை விரைவில் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ganesh Gopalasubramanian said...

நன்றி இராமநாதன், இளவஞ்சி, ராகவன், சந்திரவதனா, ராம்கி, கிறுக்கன், உஷா, முரளி, சிவா, குமரன், ஈஸ்வர், மாயகூத்தன் கிருஷ்ணன், தாணு, இட்லி வடை, மதுமிதா, வெளிகண்ட நாதர்

என்ன சொல்றதுன்னே தெரியல. நேத்து ஒரு பதிவிட்டுவிட்டு தூங்கி எழுந்தா பின்னூட்டப்பெட்டி நிறைஞ்சு இருக்கு...... நட்சத்திரம் என்பதன் அர்த்தம் புரிய ஆரம்பித்திருக்கிறது. சரி சரி எல்லாவற்றையும் இன்றே எழுதிட்டா முடிவுரையில் எழுதினதேயே திரும்ப எழுதற மாதிரி இருக்கும்.

@இராமநாதன்
//ஆனால், கணினித்துறையில் அசாத்திய வளர்ச்சியால் மிச்ச பொறியிற்துறைகளை தேர்ந்தெடுப்பவர்கள் குறைந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.//
உண்மை தான் இராமநாதன். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்வார்களே அது இதுதான் போல.

@இளவஞ்சி
// நட்சத்திர வாழ்த்துக்கள் கணேஷ்! //
உங்க அளவிற்கு யாரும் நட்சத்திர வாரத்தில் மின்ன முடியாது. ஆனாலும் என்னால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறேன்.

@ராகவன்
//மூளையுழைப்பில் நிறைய செய்கிறோம் என்பதை மறுக்க முடியாது//
நிறையன்னு சொன்னா மட்டும் போதாது ராகவன். மென்பொருள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ கிட்ட தட்ட ஒரு 70% மக்களைச் சென்றடைகிறது.

//பத்தோடு ஒன்னு பதினொன்னு. அத்தோடு ஒன்னு இதுவொன்னுதான்.//
உண்மை தான். ஆனா பாருங்க கோவில்பட்டியில எங்கப்பா "என் மகன் ஒரு மென்பொருளாளன் (சாப்ட்வேர் இஞ்சினியர்) இப்போ டெல்லியில வேலை பார்க்கிறான்" என்று என்னை வைத்துக்கொண்டே தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சொல்லும் போது வரும் சந்தோஷம் இருக்கே அது தனி தான்....அதில இருக்கிற சுகமே அலாதி...

//வீட்டு வாடகை சாப்ட்வேர் இஞ்சினியருன்னா ஒசந்துடும். அப்பார்ட்மெண்ட் வெலையும் கூடும்//
இது நாமாக தேடிக்கிட்ட விஷயம்னு தான் தோணுது. பாருங்க நாங்க இப்போ குடியிருக்கிற வீட்டிற்கு ரூ5000 கொடுப்பதே அதிகம். நாங்க வீடு பாத்திட்டிருந்த பொழுது சிலர் இந்த வீட்டை ரூ5000 வாடகைக்கு கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ரூ6000 தருவதாக சொல்லி தான் குடியேறினோம். பணபலம் விளையாடிவிட்டது. ஏதோ ஏலம் எடுக்கிற மாதிரி எடுத்திட்டு வந்தோம். (அது சரி ரூ6000 ரொம்ப அதிகம்னு சொல்பவர்களுக்கு ஒரு விஷயம் டெல்லி ரொம்ப விலையுயர்ந்த நகரம்ங்க...)

@சந்திரவதனா
//செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும் என்பார்கள்.//
ஆமாம். புதுசா வந்த கஜினி படத்தில நம்ம சூர்யா சார் சொல்ற மாதிரி. கஷ்டப்பட்டு வேலை செஞ்சா முன்னேற முடியாது இஷ்டப்பட்டு வேலை செய்யணும். இப்போதைக்கு சினிமாவில் சொல்லப்பட்டு எனக்கு புடிச்ச கருத்து இதுதாங்க.

@ராம்கி
//வாழ்வில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.//
தங்கள் ஆசி.

@கிறுக்கன்
//I am thinking for a while about that //
முயற்சி செய்கிறேன் கிறுக்கன். ஆனா ஆனந்த விகடனில் ரெசிபி முதற்கொண்டு எல்லாவற்றையும் எழுதி விட்டார்கள். அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.

@உஷா
//ஒரு சுப்ரீம் ஸ்டார்//
என்ன ஒரு ஞானம்ங்க உங்களுக்கு. நடிகர்களில் எனக்கு அதிகம் பிடித்த நடிகர் சரத்குமார் தான். வேலைக்காக தகுதிகளோடு வந்த நல்ல நடிகர்.

@முரளி
//நட்சத்திர வாழ்த்துக்கள் கணேஷ்!//
"+" குத்திட்டீங்க போல :-)

@சிவா
//ஊர்ல சொந்த தொழில் செய்யறவனுக்கு இருக்கற திருப்தி நம்ம கிட்ட இருக்கிறதா என்பது சந்தேகம் தான்//
கண்டிப்பா கிடையாது. மென்பொருளாளர்களிடமிருந்து நிறைய செண்டிமெண்ட் கவிதைகள் வருவதொன்றே இதற்கு சாட்சி.

//Appraisal-காக //
உடன்படுகிறேன். எவ்வளவு தான் வாங்கினாலும் போதும்னு நினைக்கிற மனம் மட்டும் வரவே மாட்டேங்குது.

@குமரன்
//எழுத்து வியாபாரின்னா என்னாங்கோ//
நுனிப்புல் போய் பாருங்கோ...

@ஈஸ்வர்
//கோவில்பட்டி புள்ளையாருக்கு ஒரு தேங்காய ஒட!//
தேங்காய உடைச்சு அவங்களே எடுத்துட்டு போயிருவாங்க அதனால அதுக்கு பதிலா கொழுக்கட்டையா கொடுக்கச் சொல்லுங்க..:-)

@மாயா
//10 வருடங்கள் உருண்டு ஓடி விட்டன//
வாழ்த்துக்கள் மாயா.

//CLIENT இடம் இருந்து அருமையான் பாராட்டு கடிதம்.//
ஆமாங்க இதில ரெட்டிப்பு சந்தோஷம் மனநிறைவும் கூடவே Appraisalஉம் கிடைக்குமே :-)

@தாணு
//கணேஷ் போன்ற கடின உழைப்பாளிகளே இத்தகைய பெருமைகளுக்கு உகந்தவர்கள்.//
மொத்தமா போட்டு தாக்கிட்டீங்க. எனக்கு இன்னொரு கருத்தும் அடிக்கடி தோன்றும். மென்பொருளாளனாக வேலையில் அமர்ந்து விட்டால் அனைவருக்குமே ஓரளவிற்கு உலக அறிமுகம் கிடைத்து விடுகிறது. தகவல் பரிமாற்றமும் அதிக அளவில் நடைபெறுவதால் அவன் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் பல. புத்தகங்களைக் விடவும் இணையம் ஒரு பெரிய தகவல் களஞ்சியமல்லவா....

@இட்லி-வடை
//நிஜமாதான் :-)//
உங்களைப் போன்றதொரு நல்ல திறனாய்வாளர் (critic) பாராட்டுவது ரொம்ப சந்தோஷமளிக்கிறது.

@மதுமிதா
//விவசாயிகள் குறித்து தனிப்பதிவிடணும்.//
நீங்களே நல்ல பதிவிடுங்க... நம்ம ஏரியா நிலவரத்தையும் கொஞ்சம் எழுதுங்க :-(

//வீட்டுல சீக்கிரமா கெட்டி மேள சத்தம் கேக்கப் போறது போலிருக்கே.//
அட ஏங்க. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம். அப்பொழுது கண்டிப்பாக அழைப்பிதழ் அனுப்புகிறேன்
அது சரி என்னை விட நீங்க நாரதர் வேலையைத் தெளிவா செய்வீங்க போல :-)

@குமரன்
//உங்களையும் அக்கான்னு கூப்பிடலாமா?//
குமரனுக்கு சீக்கிரம் பதிலளியுங்கள் மதுமிதா...

//என்னங்க மதுமிதா... TCSஐ ஒரு பெரிய மென்பொருள் கம்பெனியா நீங்க நினைக்கலையா? அத விட்டுட்டீங்களே?//
அது வெறும் பெரிய இல்லைங்க மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம்....சொந்தமா ஒரு அரசையே நடத்திட்டிருக்காங்க.... டாடா மேல் எனக்கு அதனாலேயே பெரிய ஈர்ப்புண்டு

//கணேஷ்...மதுமிதா அக்கா சொன்னது உண்மைன்னா என்னுடைய வாழ்த்துகளும். //
அட ஏங்க. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம். அப்பொழுது கண்டிப்பாக அழைப்பிதழ் அனுப்புகிறேன்

@கல்வெட்டு
//நட்சத்திர வாழ்த்துக்கள் கணேஷ்.//
நன்றி இதையும் நல்ல கல்லா பார்த்து பொறித்து வைத்துக்கொள்கிறேன்

@கயல்
//அதிகரித்துக்கொண்டு வருகின்றார்களே இனி எப்படி??.//
என்னுடைய கல்லூரி விரிவுரையாளர் சொன்ன ஒரு விஷயம் "கோவில்பட்டியில பெட்டிக்கடையில் கம்ப்யூட்டர் வருகிற வரைக்கும் உங்களுக்கு வாழ்வுதான்"

@விக்னேஷ்
//இந்த இரண்டையும் உங்கள் பதிவில் பார்த்ததிலும், நல்ல ஆரோக்கியமான கருத்து பரிமாற்றலுக்கு அடிகோலியதற்க்கும் என் வாழ்த்துக்கள்.//
விக்னேஷ். நானும் நீங்கள் சொன்ன இரண்டு கருத்தையும் கூடவே பெற்றோர்கள் கண்ணோட்டத்தையும் சேர்த்து எழுத வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.

//முடிந்தால் நானும் என் கருத்துக்களை வேறொரு நாளில் பதிவிடுகிறேன//
கண்டிப்பாக உங்கள் பார்வையையும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.

@பிரின்ஸ்
//Pardon me for my ignorance but I cant get what you mean by saying that IT folks lead their life the way they want.//
Weekend pubs... Diwali orphanage visit.... Rs2500 worth shirtings.... the list is endless.....
Only thing is they have to stay away from their home. Apart from that, everything they want is certainly fulfilled atleast to a half.

@துளசி
//'மென்பொருளாளன்'னு சொன்னால் இத்தனை 'மவுஸா'?//
இருக்காதே பின்னே....

@பாஸிட்டிவ்ராமா
//இந்த சிந்தனையில்தான் நம்ம கணேஷ் நீங்க ஜொலிக்கிறீங்க!//
contact http://groups-beta.google.com/group/nambikkai

@அன்பு
//பாராட்டுக்கள்.//
என்ன சொல்ல அன்பு. எல்லாம் நம்ம மக்கள் உடனிருக்கிறார்கள். அவர்களூக்கே போய்ச் சேரட்டும்.

//அதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்!//
100% சரி. அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

//அதனால் ஆடம்பரச்செல்வைச் சற்றேகுறைத்து - தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் இன்னும் ஆத்மதிருப்தி கிடைக்கிறது.//
இப்படி வாழ்வதில் ஒருவகை திருப்தி வந்துவிடுகிறது. 25 வயதிலேயே என்னமோ நிறைய சாதித்து விட்டதாய் தோன்றுகிறது.

//இனிய இல்வாழ்க்கை விரைவில் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
மது பத்தவச்சது 10000 வாலா சரவெடி போல....

Ramya Nageswaran said...

நட்சத்திர வாரத்திற்கு (கொஞ்சம் belated) வாழ்த்துக்கள், கணேஷ்...

G.Ragavan said...

// நிறையன்னு சொன்னா மட்டும் போதாது ராகவன். மென்பொருள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ கிட்ட தட்ட ஒரு 70% மக்களைச் சென்றடைகிறது. //
உண்மைதான்.

// உண்மை தான். ஆனா பாருங்க கோவில்பட்டியில எங்கப்பா "என் மகன் ஒரு மென்பொருளாளன் (சாப்ட்வேர் இஞ்சினியர்) இப்போ டெல்லியில வேலை பார்க்கிறான்" என்று என்னை வைத்துக்கொண்டே தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சொல்லும் போது வரும் சந்தோஷம் இருக்கே அது தனி தான்....அதில இருக்கிற சுகமே அலாதி... //
இதுலருந்து என்ன தெரியுது? நீங்க ஒடம்புதான் டெல்லீல இருக்கீங்க. மனசு கோயில்பட்டியிலதான் இருக்கு. எங்க கடலைக்காரத் தெருவா? செண்பகவல்லி அம்மன் கோயில் பக்கமா?

// (அது சரி ரூ6000 ரொம்ப அதிகம்னு சொல்பவர்களுக்கு ஒரு விஷயம் டெல்லி ரொம்ப விலையுயர்ந்த நகரம்ங்க...) //

டெல்லியை விட பெங்களூர் காஸ்ட்லி கணேஷ். எல்லா விஷயத்திலையும்.

G.Ragavan said...

// ராகவன் & ராமசந்திரன் உஷா, எழுத்து வியாபாரின்னா என்னாங்கோ? எனக்கு புரியலையே? //

என்ன குமரன்? நானும் உஷாவும் உஷாரா இருக்குறது ஒங்களுக்குப் பிடிக்க்கலையா?

b said...

இந்தவார நட்சத்திரம் கணேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மறுமொழிகள் தனிப்பெட்டியாகத் திறப்பதால் கஷ்டமாக இருக்கிரது. கவனியுங்கள் கணேஷ்.

Ganesh Gopalasubramanian said...

@பிரின்ஸ்

//I think several IITians would simply surpass all these standards you are setting and not all are IT folks//
An IT professional surely earns as much as his/her 25years experience father as soon as he/she enters into the IT field. Life is circling around money and IT personnels are very prompt that they are in the right radius...

@ரம்யா
//நட்சத்திர வாரத்திற்கு (கொஞ்சம் belated) வாழ்த்துக்கள், கணேஷ்... //
இன்னும் சில ஆட்களை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்
ஆனா சீக்கிரம் வர மாட்டேங்கிறாங்க.... இருந்தாலும் என்ன வந்தா போதாதா...

@ராகவன்
//நீங்க ஒடம்புதான் டெல்லீல இருக்கீங்க//
கோவில்பட்டி கோவில்பட்டின்னு உசுர விடுறதிலேயே எனக்கும் தெரிஞ்சு போச்சு...
நான் இருப்பது சண்முக சிகாமணி நகர். (நாடார் மேல்நிலைப்பள்ளி பக்கம்)

//டெல்லியை விட பெங்களூர் காஸ்ட்லி கணேஷ். எல்லா விஷயத்திலையும். //
ஐயோ உண்மையாகவா....என்ன சார் இக்கரை பச்சை போல :-)

//என்ன குமரன்? நானும் உஷாவும் உஷாரா இருக்குறது ஒங்களுக்குப் பிடிக்க்கலையா? //
ராகவன் உங்கள் முயற்சிக்கு முதல் வாழ்த்து என்னுடையதாக இருக்கட்டும். நீங்கள் திரும்ப திரும்ப சொல்வதிலேயே தெரிகிறது... பெரிசா எதையோ யோசிச்சு வச்சிருக்கீங்கன்னு...

@மூர்த்தி
//மறுமொழிகள் தனிப்பெட்டியாகத் திறப்பதால் கஷ்டமாக இருக்கிரது. கவனியுங்கள் கணேஷ்.//
நாளை திருத்தி விடுகிறேன். மூர்த்தி. வாழ்த்துக்களுக்கு நன்றி

ஜோ/Joe said...

Ganesh,
Nice thoughts.Join with you as a s/w engineer.Kalakkungka! (unable to type in tamil)

Ganesh Gopalasubramanian said...

நன்றி ஜோ

ramachandranusha(உஷா) said...

ராகவன், நா கூட எழுத்து வியாபாரி ஆக
தயார். ஆனா வாங்க ஆளுதான் இல்லே :-) இப்ப விஷய தானத்துல காலம் ஓடிக்கிட்டு இருக்கு.
உஷா
பி.கு விஷயதானம் என்ற சொல்லை மணிக்கொடி எழுத்தாளர்கள் உபயோகித்தார்கள். உதாரணமாய் இணைய இதழ்களுக்கு ச்சும்மா எழுதி தருகிறோமே அதுதான் விஷயதானம்.

G.Ragavan said...

// நான் இருப்பது சண்முக சிகாமணி நகர். (நாடார் மேல்நிலைப்பள்ளி பக்கம்) //

நாங்க ராஜீவ் நகர்ல இருந்தோம். நடராஜன் வக்கீல் வீட்டுக்குப் பக்கத்துலன்னு அடையாளம் சொல்வோம். ஆனா எனக்கு அவர் வீடு எதுன்னு தெரியாது.

// ராகவன் உங்கள் முயற்சிக்கு முதல் வாழ்த்து என்னுடையதாக இருக்கட்டும். நீங்கள் திரும்ப திரும்ப சொல்வதிலேயே தெரிகிறது... பெரிசா எதையோ யோசிச்சு வச்சிருக்கீங்கன்னு...//
உண்மையச் சொன்னா......ம்ம்ம்ம்ம்ம்ம்.....அப்படித்தான்னு வெச்சுக்கோங்களேன். கொஞ்சம் பெருசா......பெருசோ பெருசா.............

// ராகவன், நா கூட எழுத்து வியாபாரி ஆக
தயார். ஆனா வாங்க ஆளுதான் இல்லே :-) இப்ப விஷய தானத்துல காலம் ஓடிக்கிட்டு இருக்கு. //
உஷா. இங்கயும் அதே கதைதான். ஆனா என்ன...இன்னும் கத்திரிக்கா கடைத்தெருவுக்கே வரலை. இப்பத்தானே வெதையே போட்டிருக்கு.

பழூர் கார்த்தி said...

யோவ் கணேசு.. இரண்டு வாரம் தீபாவளிக்கு ஊருக்கு போயிட்டு வந்தா தமிழ்மணத்துல எல்லாரும் மஜாவா உன்னைப் பத்தித்தான்யா பேசுறாங்க
:-) வாழ்த்துக்கள் :-)
நட்சத்திரமாய் வேற ஆய்ட்டிங்களா, இனிமே கையிலே பிடிக்க முடியாதே
:-))
மென்பொருளாளன் பதிவு சூப்பர்யா.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல.. நல்லா இருக்கு.. நிறைய எழுதுய்யா..

Ganesh Gopalasubramanian said...

@உஷா
//ஆனா வாங்க ஆளுதான் இல்லே :-)//
அட உஷா என்ன எப்படி சொல்லிட்டீங்க... உங்க பலம் உங்களுக்கு தெரியல வேற என்ன சொல்ல.

//விஷயதானம்//
இந்த விஷயத்திற்கு நன்றி.

@ராகவன்
//ஆனா எனக்கு அவர் வீடு எதுன்னு தெரியாது.//
ரொம்ப பக்கத்தில தான் இருந்திருக்கீங்க

Wசோம்பேறிப் பைய்யன்
//நல்லா இருக்கு.. நிறைய எழுதுய்யா..//
வாங்க என்ன நமக்கு ரொம்ப வேண்டியவங்க எல்லாரும் ரொம்ப லேட்டா வர்றீங்க

சினேகிதி said...

\\Ctrl + C & Ctrl + V வேலை எல்லாம் சரியான்னு கேட்காதீர்கள்\\ copy paste koda enga ethai eppidi seyanum endu therinju irukanume.

Ganesh Gopalasubramanian said...

//paste koda enga ethai eppidi seyanum endu therinju irukanume.//
அப்டி போடுங்க... நான் அடிக்கடி திட்டு வாங்கறதே இதுக்குத்தான்

Anonymous said...

Ganesh,

Just happen to read your blog. Good post(s)...

Suresh said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் கணேஷ் !!

contivity said...

நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் கணேஷ்!..

மென்பொருளாளன் என்றால் soft economist அல்லது soft treasurer என்று பொருள் கொள்ளலாமா? சும்மா ஒரு பகிடி.. அவ்வளவுதான்.. கலக்குங்க...

Ganesh Gopalasubramanian said...

நன்றி JOJO, சுரேஷ் பாபு & காண்டிவிட்டி

//Good post(s)...//
நன்றி

//வாழ்த்துக்கள் கணேஷ் !!//
நன்றி சுரேஷ்

//soft economist அல்லது soft treasurer என்று பொருள் கொள்ளலாமா?//
soft narcissistனும் சொல்லலாம். நான் அப்படித்தான். சுயத்தை விரும்புபவன். :-)

Raghavan alias Saravanan M said...

தாமதமாய் வாழ்த்துகிறேன் கணேஷ்.

நல்லதொரு சர்ச்சைக்குரிய பதிவு. நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்வதற்கு.