Thursday, December 24, 2009

விட்டுச் சென்றவை

முந்தைய தினம் மடிந்துபோன
செல்வியின் கணவன் சொன்னான்
அவள் தனிமையையும் துக்கத்தையும்
விட்டுச் சென்றுவிட்டதாக

நேர்கோட்டில் சீரிப்பாய்ந்து
தன்குறி தகர்த்ததொரு தோட்டா
விட்டுச் செல்கிறது
நேர்த்தியையும் பயத்தையும்

யானைக் கூட்டமொன்று
தாம் நுழைந்த ஊசிமுனை
துவாரங்களில் விட்டுச் செல்கிறது
பெருமையையும் சிறுமையையும்

சூரியன் கைகளில்
எரியத்துவங்கிய தீக்குச்சி
நெருப்பில் விட்டுச் செல்கிறது
சில விளக்குகளையும் பந்தங்களையும்

நெடுங்கம்பு நீட்டி
கலைத்துவிட்ட கூடொன்றில்
தேனீக்கள் விட்டுச் செல்கின்றன
காலத்தையும் சேமிப்பையும்

அந்தக் கண்ணாடி மட்டும்
எப்பொழுதும் காட்டுவதே இல்லை
முன்வந்து நின்று நான் விட்டுச்சென்ற
எனதுருவை.

No comments: