Thursday, March 17, 2005

வெள்ளைப் பூக்கள் - வைரமுத்துவின் இருபது கட்டளைகள்

நீண்ட நாளாய் ஒரு ஆசை, கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்றைப் பற்றி ஒரு வரியாவது எழுதிவிட வேண்டுமென்று. எதை எடுப்பது, எதனை விடுப்பது, எதனை எழுதுவது என்ற கேள்விகளிலேயே அனைத்து முயற்சிகளும் முடங்கிப்போய் விட்டன. எனினும் என்றாவது ஒரு நாள் எழுதியே தீருவது என்று மட்டும் பதிய வைத்துக்கொண்டேன்.

சமீபத்தில் நண்பர் செந்திலின் வலைப்பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்ற வெள்ளைப் பூக்கள் என்னும் பாடலை அழகாக வர்ணித்திருந்தார். முன்பு இந்த பாடலைக் கேட்டிருக்கிறேன் என்றாலும் கூர்ந்து கேட்டதில்லை. அப்பாடலை உற்று நோக்கயில் வைரமுத்துவின் முந்தைய கவிதை ஒன்றின் சாயல் தெரிந்தது. விவரம் தெரிந்து நான் ரசித்த முதல் கவிஞர் வைரமுத்து தான் என்பதால் அவரது கவிதை நூல்கள் ஏறத்தாழ அனைத்துமே என்னிடமுண்டு. மூன்று நாட்கள் தேடியதன் பயனாக நேற்று அக்கவிதை சிக்கியது. படிக்க...

இயற்கைக்கு கட்டளையிடும் சக்தியும் வல்லமையும் கண்டிப்பாக கவிஞனுக்கு மட்டும்தான் உண்டு என்பது என் அசாத்திய நம்பிக்கை. கவிஞனின் புரட்சிக்கனவும், வைரமுத்துவிற்கு அன்றாட நிகழ்வுகளில் இருந்த மிகுந்த கவனமும் தான் இந்த இருபது கட்டளைகள்.

எங்கே ஊர்களில் ஜாதிகள் இல்லையோ
அங்கே கூவுக சேவல்களே

எங்கே பூமியில் போர்கள் இல்லையோ
அங்கே பாடுக பூங்குயிலே

எங்கே மனிதரில் பேதம் இல்லையோ
அங்கே முழங்குக சங்கினமே

எங்கே மானுடம் சிறகு தேடுமோ
அங்கே வழிவிடு வான்வெளியே

எங்கே குழந்தையின் கைகள் நீளுமோ
அங்கே ஒளிருக வெண்ணிலவே

எங்கே உனக்கு முன் மனிதர் விழிப்பரோ
அங்கே தோன்றுக கதிரவனே

எங்கே விதவையர் கூந்தல் காயுமோ
அங்கே மலருக பூவினமே

எங்கே பூவினம் தூங்கி விழிக்குமோ
அங்கே சுற்றுக வண்டினமே

எங்கே புன்னகை போலியில்லையோ
அங்கே சிரித்திடு பொன்னிதழே

எங்கே தன்னலம் அழிந்து போகுமோ
அங்கே நீர்பொழி என்விழியே

எங்கே வேர்வை தீர்ந்து போகுமோ
அங்கே மழைகொடு மாமுகிலே

எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ
அங்கே பற்றுக தீச்சுடரே

எங்கே கன்றுகள் மிச்சம் வைக்குமோ
அங்கே சிந்துக கறவைகளே

எங்கே மனிதர்கள் சைவமாவரோ
அங்கே பாடுக பறவைகளே

எங்கே உழைப்பவர் உயரம் உயருமோ
அங்கே சுழலுக ஆலைகளே

எங்கே விதைத்தவர் வயிறு குளிருமோ
அங்கே விளைந்திடு நெல்மணியே

எங்கே கண்களில் கள்ளமில்லையோ
அங்கே தோன்றுக கனவுகளே

எங்கே உறவுகள் ஒழுக்கமாகுமோ
அங்கே வில்லெடு மன்மதனே

எங்கே பயணம் மீளக் கூடுமோ
அங்கே நீளுக சாலைகளே

எங்கே மண்குடம் காத்திருக்குமோ
அங்கே பறவுக ஆறுகளே

- தமிழுக்கும் நிறம் உண்டு தொகுப்பிலிருந்து

No comments: