Saturday, March 19, 2005

அன்பே சிவம் vs நந்தா - யார் சிறந்த கடவுள்?

மனிதனின் பகுத்தறிவு விவாதங்களில் தலையாயது கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும். பாரம்பரியம் ஒருவனின் கடவுள் நம்பிக்கையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றாலும், அவன் வேரூன்றி தனித்து இயங்க ஆரம்பித்ததும் அவனது பகுத்தறிவிற்கு சவால் விடும் மிகப்பெரிய வினா கண்டிப்பாக கடவுளைப் பற்றியதாகத்தான் இருக்கக்கூடும். அவனது நம்பிக்கைகளில் அதிகமாக அவனை நல்வழிப்படுத்துவதும் கடவுள் நம்பிக்கை தான். ஆத்திகமோ நாத்திகமோ அவனது கோட்பாடுகள் தாம் சமுதாயத்திற்கு அவனை அடையாளம் காட்டுகின்றன.

தமிழ் சினிமாவும் வேறுபட்ட பல நல்ல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கடவுளைப் பற்றிய அதன் முயற்சிகளையும் ஆராயும் ஆர்வம் ஏற்பட்டது. கடவுள் என்று சொன்னதுமே நமக்கு முதலில் ஞாபகம் வரும் இயக்குனர் வேலுபிரபாகரன் தான். தமது ஒவ்வொரு முயற்சிகளிலும் கடவுளைச் சீண்டவேண்டும் என்பதே இவரது குறிக்கோள். ஆனால் இவரது படைப்புகள் அனைத்துமே பெரிதாக பேசும்படியாக இருந்ததில்லை.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொண்டால், அதில் பக்தி படங்களைத் (திருவிளையாடல், சரஸ்வதி சபதம் முதலாக இன்றைய பாளையத்து அம்மன் வரை) தவிர்த்து கடவுள் பற்றிய கோட்பாடுகள் அடங்கியவை மிகச்சொற்பமே. இன்றைய தேதியில் மக்களின் இறையுணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய படங்கள் மிக அரிதாகத்தான் தென்படுகின்றன. குறும்படங்கள் சில அவ்வப்போது வெளிவந்தாலும் வெகுஜன திரைப்படங்களில் அந்த முயற்சி குறைவே. மிகுந்த கவனத்துடனும் சாமர்த்தியமாகவும் கையாளப்பட வேண்டிய கருவாதலால் இயக்குனர்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள் போலும்.

இருந்தாலும் தமிழர்கள் தைரியசாலிகள் என்பது திரைத்துறைக்கு மட்டும் பொருந்தாதா என்ன? கடவுளைப் பற்றி அற்புதமான இரண்டு திரைப்படங்களை மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். இரண்டுமே சமீப காலங்களில் வெளிவந்தவை. முதலாவது அன்பே சிவம் இரண்டாவது நந்தா. நந்தாவில் வெளிப்படையாக ஒரிரு காட்சிகளில் தான் கடவுளின் தன்மைகளை இயக்குனர் சொல்லியிருப்பார். இருந்தாலும் நந்தா என்றொரு முழுத்தொகுப்பையும் எடுத்துக்கொண்டால் அது முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்த படைப்பாகத் தான் தெரிகிறது. அன்பே சிவத்தைப் பற்றி சொல்லவேண்டியதில்லை (மன்னிக்கவும் எழுதவேண்டியதில்லை), வெளிப்படையாகவே மிகுந்த சொல்வளத்துடன் வெளிவந்த படைப்பு.

கில்லி, சாமி போன்ற திரை மசாலாக்களை விடவும், நினைவேடு, (ஆட்டோ கிராஃப்) காதல் போன்ற உணர்ச்சிக் குவியல்களை விடவும் என்னை அதிகமாக பாதித்தது அன்பே சிவமும் நந்தாவும் தான். "தெரியாத ஒரு பையனுக்காக வருத்தப்படும் மனசிருக்கே அது தான் கடவுள்" என்ற நல்லாவின் (கமலின்) யதார்த்தமாகட்டும், "அக்கிரமத்தைப் பார்த்து கொதிச்செழுகிற ஒவ்வொருத்தனும் சாமி தாண்டா, இதுக்குன்னு (மேலேயிருந்து) வருமா?" என்ற ஐயாவின் (ராஜ்கிரணின்) கொதிப்பாகட்டும், கண்டிப்பாக தமிழ் சினிமாவின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய மொழிகள்.

நல்லாவும் நந்தாவும், கடவுள் என்பவன் மனிதனிடமும் இருக்கிறான் என்பதனை வலியுறுத்தினாலும் தத்தமது செயல்பாடுகளால் முற்றிலும் முரணானவர்கள். நல்லா, அன்பிலும் அரவணைப்பிலும் கடவுளைக் காட்டியவன். நந்தா, அக்கிரமங்களை அழிப்பதில் கடவுளைக் காட்டியவன். எனக்குள் ஒரு வினா, இவர்களில் யாரைப் (எந்தக் கடவுளைப்) பின்பற்றலாம்? நல்லாக்கள் நிறைய பேர் வாழ்ந்திருக்கிறார்கள், உதாரணத்திற்கு காந்தியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்களின் அணுகுமுறை இந்தக்காலத்திற்கு ஏற்றதாக எனக்கு தோன்றவில்லை. (மன்னிக்கவும் இது எனது அபிப்பிராயம்). நந்தாவிற்கு இணையாக எனக்கொரு உதாரணப் புருஷன் கிடைக்கவில்லை. நந்தாவின் செயல்பாடுகள் ஒருவருக்கு நல்லதாகப் பட்டாலும், பாதிக்கப் படும் நபரின் கண்ணோட்டத்தில் தவறாகத் தோன்றலாம். இருந்தும் இன்றையத் தேதியில் நல்லாவைக் காட்டிலும் நந்தாதான் ஒரு சிறந்த கடவுளாக இருக்க முடியும் என்பது என் (இந்தக் கடவுளின்) கருத்தாக இருக்கிறது. நீங்கள் (சக கடவுள்கள்) என்ன சொல்கிறீர்கள்?

1 comment:

Anonymous said...

agreed with your view that god is in all of us. but to me the real question is what approach solves the problem, not just superficially but completely. IMO nalla does and nandha doesn't. nandha is a character that confronts conflict with conflict, albeit for so-called good causes. But in the end of the day, "some" conflict remains. Its like capital punishment. what does it accomplish other than killing the criminal. perhaps creates some fear, among other fears we've carried around for centuries. but does it fix the problem in its roots. No IMO (apparent in the continued if not increasing incidents by criminals). To me it seems as a mere postponement as the problem and its agony continues. nandha's approach is to "fight" evil. what happens if you fight evil, you become one.
I think nalla's approach to a certain extent is holistic in that the transformation takes place in his own self and that change has to create ripples, however small they are.